பாடல் #1772

பாடல் #1772: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவஞ் சத்தியாகுஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைச்
சத்தி தானென்றுஞ் சமைந்துரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவனறன விளையாடடுத தாரணி
சததி சிவமுமாஞ சிவஞ சததியாகுஞ
சததி சிவமனறித தாபரம வெறிலலைச
சததி தானெனறுஞ சமைநதுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவன் தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமும் ஆம் சிவம் சத்தி ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்தி தான் ஒன்றும் சமைந்து உரு ஆகுமே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவன் (இறைவனும்) தன் (தங்கள்) விளையாட்டு (திருவிளையாட்டால்) தாரணி (அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள்)
சத்தி (இறைவியானவள்) சிவமும் (இறைவனுமாகவும்) ஆம் (இருக்கின்றாள்) சிவம் (இறைவனாவன்) சத்தி (இறைவியாகவும்) ஆகும் (இருக்கின்றான்)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) அன்றி (இல்லாமல்) தாபரம் (இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள்) வேறு (வேறு) இல்லை (எதுவும் இல்லை)
சத்தி (இறைவி) தான் (தானே) ஒன்றும் (இறைவனோடு சேர்ந்து) சமைந்து (கலந்து) உரு (அனைத்து விதமான வடிவங்களாகவும்) ஆகுமே (ஆகுகின்றாள்).

விளக்கம்:

இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள். இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள், இறைவனாவன் இறைவியாகவும் இருக்கின்றான். இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள் வேறு எதுவும் இல்லை. இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள். இதை பரிபூரணமாக உணர்ந்து கொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.