பாடல் #1765

பாடல் #1765: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யேவர் பிரானென் றிறைஞ்சுவர் ரவ்வழி
யாவர் பிரானடி யண்ணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெவர பிரானைத திசைமுக நாதனை
நாலவர பிரானை நடுவுறற நநதியை
யெவர பிரானென றிறைஞசுவர ரவவழி
யாவர பிரானடி யணணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேவர் பிரானை திசை முக நாதனை
நால்வர் பிரானை நடு உற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ் வழி
ஆவர் பிரான் அடி அண்ணலும் ஆமே.

பதப்பொருள்:

தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானை (தலைவன்) திசை (பத்து திசைகளையும்) முக (தனது திருமுகங்களாக கொண்ட) நாதனை (தலைவன்)
நால்வர் (பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும்) பிரானை (தலைவன்) நடு (அருவமாகிய மேலுக்கும் உருவமாகிய கீழுக்கும் நடுவில்) உற்ற (வீற்றிருக்கின்ற) நந்தியை (குருநாதனாகிய இறைவன்)
ஏவர் (எவருக்கும்) பிரான் (தலைவன்) என்று (என்றெல்லாம் போற்றி) இறைஞ்சுவர் (வழிபடுகின்ற) அவ் (அடியவர்களின்) வழி (நெறி முறையை)
ஆவர் (பின்பற்றி தாமும் அப்படியே வழிபடுகின்ற அடியவர்களது) பிரான் (தலைவனாகவும்) அடி (தமது திருவடியை அருளி) அண்ணலும் (அடியவர்க்கும் அடியவனாகவும் அவர்களை காத்து அருளுபவனாக) ஆமே (ஞான இலிங்க வடிவான இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

தேவர்களுக்கெல்லாம் தலைவன், பத்து திசைகளையும் தனது திருமுகங்களாக கொண்ட தலைவன், பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும் தலைவன், அருவமாகிய மேலுக்கும் உருவமாகிய கீழுக்கும் நடுவில் வீற்றிருக்கின்ற குருநாதனாகிய இறைவன், எவருக்கும் தலைவன் என்றெல்லாம் போற்றி வழிபடுகின்ற அடியவர்களின் நெறி முறையை பின்பற்றி தாமும் அப்படியே வழிபடுகின்ற அடியவர்களது தலைவனாகவும், தமது திருவடியை அருளி அடியவர்க்கும் அடியவனாகவும், அவர்களை காத்து அருளுபவனாக ஞான இலிங்க வடிவான இறைவன் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.