பாடல் #1770

பாடல் #1770: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

எந்தை பரமனு மென்னம்மை கூட்டமு
முந்த வுரைத்து முறைசொல்லில் ஞானமாஞ்
சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியை
யுந்தியின் மேல்வைத்து உகந்திருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எநதை பரமனு மெனனமமை கூடடமு
முநத வுரைதது முறைசொலலில ஞானமாஞ
சநதித திருநத விடமபெருங கணணியை
யுநதியின மெலவைதது உகநதிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்
உந்த உரைத்து முறை சொல்லில் ஞானம் ஆம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே.

பதப்பொருள்:
எந்தை (எமது தந்தையாகிய) பரமனும் (பரம்பொருளும்) என் (எமது) அம்மை (தாயாகிய) கூட்டமும் (அனைத்து விதமான சக்திகளும்)
உந்த (முழுவதுமாக தாம் உணர்ந்ததை) உரைத்து (எடுத்துச் சொல்லி) முறை (தகுதியானவர்களுக்கு உணர்ந்து கொள்ளும் படி) சொல்லில் (சொல்ல முடிந்தால்) ஞானம் (அதுவே உண்மை ஞானம்) ஆம் (ஆகும்)
சந்தித்து (அப்படி உண்மை ஞானம் பெற்ற ஞானிகளுக்கு இறைவனை சந்தித்து) இருந்த (இருக்கின்ற) இடம் (இடம்) பெரும் (அழகிய பெரும்) கண்ணியை (கண்களை உடைய இறைவி இறைவனோடு சேர்ந்து)
உந்தியின் (நடுவாகிய நிலைக்கு) மேல் (மேல்) வைத்து (வைத்து இருக்கும் போது அங்கே) உகந்து (இறைவனும் விருப்பத்தோடு ஞான இலிங்கமாக) இருந்தானே (இருப்பான்).

விளக்கம்:

எமது தந்தையாகிய பரம்பொருளும், எமது தாயாகிய அனைத்து விதமான சக்திகளும் முழுவதுமாக தாம் உணர்ந்ததை எடுத்துச் சொல்லி தகுதியானவர்களுக்கு உணர்ந்து கொள்ளும் படி சொல்ல முடிந்தால் அதுவே உண்மை ஞானம் ஆகும். அப்படி உண்மை ஞானம் பெற்ற ஞானிகளுக்கு அழகிய பெரும் கண்களை உடைய இறைவி இறைவனோடு சந்தித்து இருக்கின்ற இடமாக பாடல் #1764 இல் உள்ளபடி நடுவாகிய நிலைக்கு மேல் வைத்து இருக்கும் போது அங்கே இறைவனும் விருப்பத்தோடு ஞான இலிங்கமாக இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.