பாடல் #169

பாடல் #169: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

விளக்கம்:

பெளர்ணமி அன்று முழுவதாக இருந்து பெரும் ஒளி வீசும் நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து பிறகு அமாவாசை அன்று சுத்தமாக மறைந்து விடுவதுபோல அதிகமாக இருந்தாலும் நாளடைவில் குறைந்து பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும் உலகச் செல்வங்களால் வரும் துன்பங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இந்த நிலையில்லாத உலகச் செல்வங்களின் மேல் மயங்கி இருக்காமல் என்றும் நிலைத்திருப்பவனும் தேவர்களுக்கெல்லாம் தலைவனுமாகிய இறைவனைத் தெளிவாக உணர்ந்து அடையுங்கள். அப்படி அடைந்தால் பெரும் மழையை கொடுக்கும் கார்மேகம் போல பெருஞ் செல்வங்களை இறைவன் மழை போல் பொழிவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.