பாடல் #175

பாடல் #175: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.

விளக்கம்:

உயிர்கள் உலக ஆசைகள் அதிகமாக கொண்டவை அதையும் தாண்டிய உண்மையைத் தெரிந்துகொள்ளும் உயிர்கள் இங்கே அதிகம் இல்லை. உயிரைக் கட்டி வைக்கும் உடல் ஒன்றுதான். ஆனால் அந்த உயிர் உடலை விட்டுப் பிரியும் வழிகளோ ஒன்பது (2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத்துவாரங்கள், வாய், பால்குறி, ஆசனவாய்). உயிர் எவ்வளவுதான் ஆசைகொண்டு மாபெரும் பொருள் சேர்த்தாலும் அதன் உடலிலிருந்து உயிர் பிரிந்து போய்விட்டால் அந்த உயிரைப் பெற்று மண்ணில் வளர்த்த தாய் தந்தையர் முதற்கொண்டு உறவினர்கள் அனைவருமே வந்து உயிர் இல்லாத உடலை மரியாதை நிமித்தம் வணங்கிவிட்டு அந்த உடலைப் புதைக்கும் / எரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று இறந்த உடல் இதுதான் என்று காட்டிக் கொடுத்துவிட்டு அந்த உடலையும் அதனோடு இதுவரை அவர்களுக்கு இருந்த உறவையும் கைவிட்டு விட்டுச் சென்றுவிடுவார்கள். அதன் பிறகு அந்த உயிர் ஈட்டிய அனைத்து செல்வங்களையும் இது உனக்கு இது எனக்கு என்று காட்டிக் கொடுத்து எடுத்துக்கொள்வார்கள். இந்த உலக உண்மையை உணராமல் உயிர்கள் வெறும் ஆசையில் ஆடிக்கொண்டு என்றும் நிலையான உண்மையாகிய இறைவனை மறந்துவிடுகின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.