பாடல் #1632: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)
தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டிற்
றவம்வேண்டா ஞான சமாதிகை கூடிற்
றவம்வேண்டா மச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தவமவெணடு ஞானந தலைபபட வெணடிற
றவமவெணடா ஞான சமாதிகை கூடிற
றவமவெணடா மசசக சனமாரககத தொரககுத
தவமவெணடா மாறறந தனையறி யாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தவம் வேண்டும் ஞானம் தலை பட வேண்டில்
தவம் வேண்டாம் ஞான சாமாதி கை கூடில்
தவம் வேண்டாம் அச் சக சன் மார்க்கத்தோர்க்கு
தவம் வேண்டாம் மாற்றம் தனை அறியாரே.
பதப்பொருள்:
தவம் (தவ நிலை என்பது) வேண்டும் (வேண்டும்) ஞானம் (உண்மை ஞானம்) தலை (தலை) பட (படுகின்ற சித்தியாகின்ற நிலை) வேண்டில் (வேண்டும் என்றால்)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) ஞான (உண்மை ஞானமும்) சாமாதி (சமாதி நிலையும்) கை (அடைந்து) கூடில் (விட்டால்)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) அச் (அந்த) சக (சகம்) சன் (சன் ஆகிய) மார்க்கத்தோர்க்கு (மார்க்கங்களை கடை பிடிப்போர்களுக்கு)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) மாற்றம் (மாற்றம்) தனை (அதனை) அறியாரே (அறியாதவர்களுக்கு).
விளக்கம்:
உண்மை ஞானம் என்பது சித்தியாக வேண்டும் என்றால் அதற்கு தவம் செய்ய வேண்டும். உண்மை ஞானமும் சமாதி நிலையும் கை கூடப் பெற்றவர்களுக்கும் சன் மார்க்கம் சக மார்க்கம் ஆகிய மார்க்கங்களை கடை பிடிப்பவர்களுக்கும் மாற்றமே இல்லாத மேன்மையான சமாதி நிலையை அடைந்து விட்டவர்களுக்கும் எந்த விதமான தவ நிலையும் வேண்டாம்.
