பாடல் #1614

பாடல் #1614: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டு மமரர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இறபபும பிறபபு மிருமையு நீஙகித
துறககுந தவஙகணட சொதிப பிரானை
மறபபில ராயநிததம வாயமொழி வாரகட
கறபபதி காடடு மமரர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலர் ஆய் நித்தம் வாய் மொழிவார்களுக்கு
அற பதி காட்டும் அமரர் பிரானே.

பதப்பொருள்:

இறப்பும் (இறப்பு) பிறப்பும் (பிறப்பு) இருமையும் (ஆகிய இரண்டு விதமான தன்மைகளும்) நீங்கி (நீங்கி விட)
துறக்கும் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய) தவம் (தவ நிலையில்) கண்ட (சாதகர் கண்ட) சோதி (ஜோதி மயமாகிய) பிரானை (இறைவனை)
மறப்பு (மறந்து விடுவதே) இலர் (இல்லாதவர்கள்) ஆய் (ஆக) நித்தம் (எப்போதும்) வாய் (தமது வாயால்) மொழிவார்களுக்கு (சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு)
அற (தர்மம் இருக்கின்ற) பதி (இடமாகிய சிவலோகத்தை) காட்டும் (காட்டி அருளுவான்) அமரர் (அமரர்களின்) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

இறைவனின் திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து மும்மலங்களையும் அறுத்து இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கி விட அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் கண்ட ஜோதி மயமாகிய இறைவனை எப்போதும் மறந்து விடாமல் தமது வாயால் சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தை காட்டி அருளுவான் அமரர்களின் தலைவனாகிய இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.