பாடல் #1631

பாடல் #1631: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி அகலவிட் டோடுமே

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாததிர மொதுஞ சதிரகளை விடடுநீர
மாததிரைப பொது மறிததுளளெ நொககுமின
பாரததவப பாரவை பசுமரத தாணிபொ
லாரதத பிறவி யகலவிட டொடுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாத்திரம் ஒதும் சதிர்களை விட்டு நீர்
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்குமின்
பார்த்த தவ பார்வை பசு மரத்து ஆணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.

பதப்பொருள்:

சாத்திரம் (சாத்திரங்களை படித்து விட்டு) ஒதும் (அதை பேசித் திரிகின்ற) சதிர்களை (பெருமைகளை) விட்டு (விட்டு விடுங்கள்) நீர் (நீங்கள்)
மாத்திரை (ஒரு கண) போது (நேரமாவது) மறித்து (மூச்சுக்காற்றை தடுத்து நிறுத்தி) உள்ளே (தமக்குள்ளே) நோக்குமின் (உற்றுப் பாருங்கள்)
பார்த்த (அப்படி பார்த்த) தவ (அந்த தவ) பார்வை (பார்வையானது) பசு (பசுமையான) மரத்து (மரத்தில்) ஆணி (அடித்த ஆணி) போல் (போல உறுதியாக நினைவில் நின்று)
ஆர்த்த (போராடுகின்ற கடினமான) பிறவி (பிறவிகள் அனைத்தையும்) அகல (தம்மை விலகி) விட்டு (விட்டு) ஓடுமே (ஓடி விடும்).

விளக்கம்:

சாத்திரங்களை படித்து விட்டு அதன் பெருமைகளையே பேசித் திரிகின்றதை விட்டு விடுங்கள் நீங்கள். ஒரு கண நேரமாவது மூச்சுக்காற்றை தடுத்து நிறுத்தி தமக்குள்ளே உற்றுப் பாருங்கள். அப்படி பார்த்த அந்த தவ பார்வையானது பசுமையான மரத்தில் அடித்த ஆணி போல உறுதியாக நினைவில் நின்று போராடுகின்ற கடினமான பிறவிகள் அனைத்தையும் தம்மை விட்டு விலகி ஓடி விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.