பாடல் #1628

பாடல் #1628: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

கரந்துங் கரந்திலன் கண்ணகத் தொன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்த
னருந்தவர்க் கல்லா லணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கரநதுங கரநதிலன கணணகத தொனறான
பரநத சடையன பசுமபொன னிறதத
னருநதவரக கலலா லணுகலு மாகான
விரைநது தொழபபடும வெணமதி யானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கரந்தும் கரந்து இலன் கண் அகத்து ஒன்றான்
பரந்த சடையன் பசும் பொன் நிறத்தன்
அரும் தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண் மதியானே.

பதப்பொருள்:

கரந்தும் (மாயையினால் மறைந்து இருந்தாலும்) கரந்து (மாயையை வென்ற தவத்தோர்களுக்கு மறைந்து) இலன் (இல்லாமல் இருப்பவன்) கண் (கண்ணிற்கு) அகத்து (உள்ளே) ஒன்றான் (ஒன்றி இல்லாமல் மனதிற்குள் வீற்றிருப்பவன்)
பரந்த (பரந்து விரிந்த) சடையன் (சடையை அணிந்து இருப்பவன்) பசும் (பசுமையான) பொன் (பொன்னைப் போன்ற பிரகாசமான) நிறத்தன் (நிறத்தை உடையவன்)
அரும் (அருமையான) தவர்க்கு (தவத்தை செய்தவர்களுக்கு) அல்லால் (அல்லாமல் வேறு யாராலும்) அணுகலும் (நெருங்கி வருவதற்கு) ஆகான் (முடியாதவன்)
விரைந்து (கண்டவுடன்) தொழப்படும் (போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவன்) வெண் (வெண்ணிற) மதியானே (நிலவை தலையில் சூடி இருக்கின்றான்).

விளக்கம்:

மாயையினால் மறைந்து இருந்தாலும் மாயையை வென்ற தவத்தோர்களுக்கு மறைந்து இல்லாமல் இருப்பவன் அவன் கண்ணிற்கு உள்ளே ஒன்றி இல்லாமல் மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவன். அவன் அருமையான தவத்தை செய்தவர்களுக்கு அல்லாமல் வேறு யாராலும் நெருங்கி வருவதற்கு முடியாதவனாக இருக்கின்றான். அப்படி அருமையான தவத்தை செய்து மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவனை தரிசித்தால் அவன் பரந்து விரிந்த சடையை அணிந்து இருப்பவனாகவும் பசுமையான பொன்னைப் போன்ற பிரகாசமான நிறத்தை உடையவனாகவும் கண்டவுடன் போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவனாகவும் வெண்ணிற நிலவை தலையில் சூடி இருக்கின்றவனாகவும் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.