பாடல் #1585

பாடல் #1585: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பத்தியு ஞான வயிராக்க மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்
முத்தியில் ஞான முளைத்தலா லம்முளை
சத்தி யருடரிற றானெளி தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததியு ஞான வயிராகக முமபர
சிததிககு விததாஞ சிவோகமெ செரதலான
முததியில ஞான முளைததலா லமமுளை
சததி யருடரிற றானெளி தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்தியும் ஞான வயிராக்கமும் பர
சித்திக்கு வித்து ஆம் சிவ அகம் சேர்தல் ஆல்
முத்தியில் ஞானம் முளைத்தல் ஆல் அம் முளை
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே.

பதப்பொருள்:

பத்தியும் (இறைவனிடம் மிகுந்த பக்தியும்) ஞான (அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில்) வயிராக்கமும் (மிகவும் உறுதியாக நிற்பதும்) பர (பரம் பொருளை)
சித்திக்கு (அடைவதற்கு) வித்து (விதையாக) ஆம் (இருக்கின்றது) சிவ (அதுவே சிவமே) அகம் (தாம் என்று உணர்ந்து) சேர்தல் (தமக்குள் இருக்கும் இறை சக்தியோடு ஒன்றாக சேர்வதை) ஆல் (செய்வதால்)
முத்தியில் (அதன் விளைவாக கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலை நிலைக்கு விதையாக இருந்து) ஞானம் (உண்மை அறிவான ஞானத்தையும்) முளைத்தல் (தமக்குள் முளைக்க வைக்கின்றது) ஆல் (ஆதலால்) அம் (அந்த ஞானத்தை) முளை (உருவாக வைப்பதற்கு)
சத்தி (தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது) அருள் (தனது அருளை) தரில் (கொடுத்தால்) தான் (தான்) எளிது (எளிமையாக) ஆமே (நடக்கும். இல்லாவிட்டால் கடினமே).

விளக்கம்:

இறைவனிடம் மிகுந்த பக்தியும் அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில் மிகவும் உறுதியாக நிற்பதும் பரம் பொருளை அடைவதற்கு விதையாக இருக்கின்றது. இந்த விதையானது தமக்குள் இருக்கின்ற சிவமே தாம் என்பதை உணர்ந்து அந்த இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து இருப்பதால் தான் கிடைக்கின்றது. இந்த நிலையில் இருக்கும் போது கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலையில் உண்மை அறிவான ஞானத்தை இந்த விதையே தமக்குள் முளைக்க வைக்கின்றது. ஆனால் இந்த ஞானத்தை முளைக்க வைப்பதற்கு தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது தனது அருளை கொடுத்தால் தான் எளிமையாக நடக்கும். இல்லாவிட்டால் கடினமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.