பாடல் #1589

பாடல் #1589: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவ
னிருக்கின்ற தன்மையை யேது முணரார்
பிரிக்கின்ற விந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கரிக்கொன்ற வீசனைக் கண்டுகொண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரிககினற பலலுயிரக கெலலாந தலைவ
னிருககினற தனமையை யெது முணரார
பிரிககினற விநதப பிணககறுத தெலலாங
கரிககொனற வீசனைக கணடுகொண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம்
கரி கொன்ற ஈசனை கண்டு கொண்டேனே.

பதப்பொருள்:

தரிக்கின்ற (வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (எல்லாவற்றுக்கும்) தலைவன் (தலைவனாகிய இறைவன்)
இருக்கின்ற (அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற) தன்மையை (தன்மையை) ஏதும் (சிறிது அளவும்) உணரார் (உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள்)
பிரிக்கின்ற (இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற) இந்த (இந்த) பிணக்கு (உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை) அறுத்து (அறுத்து) எல்லாம் (அனைத்தையும் நீக்கி)
கரி (தான் எனும் அகங்காரத்தை) கொன்ற (கொன்று) ஈசனை (தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும்) கண்டு (யான் கண்டு) கொண்டேனே (கொண்டேனே).

விளக்கம்:

வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற பல விதமான உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாகிய இறைவன் அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற தன்மையை சிறிது அளவும் உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள். இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற இந்த உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை எல்லாம் அறுத்து விட்டு தான் எனும் அகங்காரத்தை கொன்று தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும் யான் கண்டு கொண்டேனே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.