பாடல் #1577

பாடல் #1577: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தேவனுஞ் சித்த குருவு முபாயத்துள்
யாவையின் மூன்றா யினகண் டுரையவே
மூவா பசுபாச மாற்றிய முத்திப்பா
லாவையு நல்குங் குருபரனன் புற்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெவனுஞ சிதத குருவு முபாயததுள
யாவையின மூனறா யினகண டுரையவெ
மூவா பசுபாச மாறறிய முததிபபா
லாவையு நலகுங குருபரனன புறறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேவனும் சித்த குருவும் உபாயத்து உள்
ஆவையின் மூன்றாயின கண்டு உரையவே
மூவா பசு பாச மாற்றிய முத்திப்பால்
ஆவையும் நல்கும் குரு பரன் அன்பு உற்றே.

பதப்பொருள்:

தேவனும் (அடியவர்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும்) சித்த (அடியவரின் சித்தத்தை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு) குருவும் (குருவாகவும்) உபாயத்து (அவரே வழிகாட்டி) உள் (உள்ளே இருந்து)
ஆவையின் (அடியவர்களின் ஆன்மாவானது) மூன்றாயின (மூன்றாக இருப்பதை) கண்டு (மாயை நீங்கி கண்டு கொள்ளும் படி அருளி) உரையவே (அதை புரிந்து கொள்ளும் படி உபதேசித்து)
மூவா (மூன்றாக இருக்கின்ற பதி பசு பாச தத்துவத்தில்) பசு (பசுவாகிய ஆன்மாவையும்) பாச (பாசமாகிய தளையையும்) மாற்றிய (மாற்றி அமைத்து) முத்திப்பால் (ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியை கொடுப்பதால்)
ஆவையும் (ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதை) நல்கும் (கொடுத்து அருளும்) குரு (குருவாக) பரன் (பரம்பொருளே இருப்பது) அன்பு (அடியவர்களின் மீது கொண்ட அன்பினால்) உற்றே (ஆகும்).

விளக்கம்:

அடியவர்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும், அடியவரின் சித்தத்தை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு குருவாகவும் அவரே வழிகாட்டி உள்ளே இருந்து அடியவர்களின் ஆன்மாவானது மூன்றாக இருப்பதை மாயை நீங்கி கண்டு கொள்ளும் படி அருளி அதை புரிந்து கொள்ளும் படி உபதேசித்து மூன்றாக இருக்கின்ற பதி பசு பாச தத்துவத்தில் பசுவாகிய ஆன்மாவையும், பாசமாகிய தளையையும் மாற்றி அமைத்து ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியை கொடுப்பதால் ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதை கொடுத்து அருளும் குருவாக பரம்பொருளே இருப்பது அடியவர்களின் மீது கொண்ட அன்பினால் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.