பாடல் #1074: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
தானே தலைவி யெனநின்ற தற்பரை
தானே யுயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமு மனமுநற் புத்தியுந்
தானே சிவகதித் தன்மையு மாமே.
விளக்கம்:
பாடல் #1073 இல் உள்ளபடி நன்மையாகவே இருக்கும் திரிபுரை சக்தியானவள் அனைத்திற்கும் தலைவியாக ஆதியிலிருந்தே தானாகவே நிற்கின்ற அசையும் சக்தியாகும். அவளே பதினான்கு உலகங்களையும் படைத்து அவற்றிற்கு உயிரூட்டினாள். அவளே தேவர்களின் உலகலமாகவும் உயிர்களின் மனமாகவும் நல்ல புத்தியுமாகவும் இருக்கின்றாள். அடியவர்கள் சென்று அடையும் சிவகதியாகவும் அவளே இருக்கின்றாள்.
