பாடல் #1059

பாடல் #1059: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிர்களும் மாறி மாறி எடுக்கும் பலவிதமான பிறவிகளில் அவர்களுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட பொருளாக இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற திரிபுரை சக்தி பத்து முகங்களைக் கொண்டு காக்கின்றாள். தானாக செயல்படும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அசையா சக்தியான சதாசிவமூர்த்தியும் அதனை செயல்படுத்தும் கருவியாக அசையும் சக்தியான திரிபுரையும் இருக்கிறார்கள். இந்தத் திரிபுரை சக்தியானவள் ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். உலகத்திலுள்ள உயிர்கள் முதற்கொண்டு அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்துமே தமது ஆயுளில் பலவிதமாக தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதற்கான அறிவை கொடுக்கும் தலைவியாக ஸ்ரீவித்யா தேவி இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.