பாடல் #1028: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
நல்லொளி யாக நடந்த துலகெங்குங்
கல்லொளி யாகக் கலந்துள் ளிருந்திடுஞ்
சொல்லொளி யாகத் தொடர்ந்த வுயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.
விளக்கம்:
பாடல் #1027 இல் உள்ளபடி நவகுண்டத்தில் நல்லொளியாய் இருக்கும் இறைவனே மாணிக்கக் கல்லில் கலந்திருக்கும் ஒளி போல உலகெங்கும் பரவி கலந்து இருக்கிறான். அந்த இறைவனே குருவாக தமக்குள்ளிருந்து அருளிக் கூறிய முறைப்படி யாகம் செய்யும் உயிர்களின் கண்களில் ஒளியாக கலந்து நிற்கின்றான்.
கருத்து: நவகுண்டத்தின் முறைப்படி யாகம் செய்யும் சாதகர்களுக்கு அவர்களின் உள்ளுக்குள் இருந்து இறைவன் குருவாக இருந்து வழி காட்டுவான்.
