பாடல் #190: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாரினுயிர் தாமறி யாரே.
விளக்கம்:
உயிர்களின் உடலுக்கு தீயிட்டால் வெந்து போகின்ற இந்த உடலின் தலைவனாக இருப்பவனும் வேதங்களின் வழி வினைகளை அழித்து தன்னை அடைய உயிர்களின் உள்ளே இருந்து தனது திருவிளையாடலால் உணர்த்தி குருவாக இருக்கின்றான் கூத்தனான இறைவன். உயிர்கள் தமது உடலுக்குள்ளேயே இருந்து விளையாடும் உயிராக இருப்பது இறைவனே எனும் மாபெரும் ரகசியத்தை அறியாதவர்களாகவும் அண்டசராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கவல்ல இறைவனே தமக்குள்ளும் உயிராக இருந்து தம்மையும் தாங்குகின்றான் என்பதையும் அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
கருத்து: உயிர் என்பது இறைவனே அந்த உயிர் எடுக்கும் பிறவியில் உடலுக்குள் வந்து அந்தப் பிறவியின் வினைப்படி உள்ளிருந்தே ஆட்டி வைத்து வினையை அழிப்பதும் இறைவனே இந்த ரகசியத்தை அறியாமல் இருக்கின்றனர் உயிர்கள்.









