பாடல் #245

பாடல் #245: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவம்அகத் தானே.

விளக்கம்:

ஒரு நாட்டை ஆளும் அரசன் அதை மிகவும் நன்றாக காத்து ஆட்சி புரிந்தான் என்றால் அந்த நாட்டில் உள்ள மக்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட தொழில்களுக்கு ஏற்ற தர்மநெறிகளிலிருந்து மாறாமல் அவ்வழியே நல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழும் நாட்டை பிறர் போர் செய்தோ அல்லது சூழ்ச்சி செய்தோ கைப்பற்ற நினைத்தால் தங்கள் நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக புலி பதுங்கியிருந்து பாய்ந்து அடித்து தனது உணவை தேடிக்கொள்வது போல போர் தொழில் கொண்ட மக்களும் நாட்டைக் காக்கும் அரசனும் பதுங்கியிருந்து தனது நாட்டை காப்பாற்றிக்கொள்வார்கள்.

கருத்து : மன்னன் தர்மவழியில் நாட்டை ஆட்சி செய்தால் மக்களும் தர்மவழியில் நடப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.