பாடல் #358

பாடல் #358: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

விளக்கம்:

திருமால், பிரம்மன், தக்கன், சூரியன் அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனாகிய இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள் அவற்றைத் தாங்கும் தோள்கள் இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதனால் இறைவனின் சினத்தினால் அழிந்தது. பிறகு தமது பிழை உணர்ந்து இறைவனை வேண்டி அவற்றினைத் திரும்ப நலமுடன் பெற்றார்கள்.

உட்கருத்து: பாடல் #357ல் உள்ள உட்கருத்தின் படி அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள் இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோக, கர்ம, யோகம் போன்ற மார்கங்களை மீண்டும் இறையருளால் செய்து இறைவனை அடையலாம்.

Related image

பாடல் #359

பாடல் #359: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

விளக்கம்:

இறைவனுக்காக மந்திரங்களை செபித்து இறையருள் பெற்ற தேவர்கள் தக்கனின் யாகத்தில் இறையருள் இல்லாத மந்திரங்களை சொல்லி தங்களுக்குப் பெரும் பொருள் கிடைக்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்து செய்து குவித்த மந்திரங்கள் இறைவனது அருள் பெறாமல் செய்யப்பட்டமையால் அவர்களையே கொல்லும் கொடிய மந்திரங்களாக மாறிவிட்டன.

உட்கருத்து: உயிர்கள் வேள்வி போல் செய்யும் செயல்கள் யாவும் இறையருளுடன் செய்தால் அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் உலக ஆசைக்காக இறையருள் இல்லாமல் செய்யும் செயல்கள் யாவும் அவர்களுக்கு தீமைகளையே செய்யும்.

பாடல் #360

பாடல் #360: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

விளக்கம்:

இறைவனின் அருள் வேண்டி வேள்விகள் அமைத்து தம்மை வணங்கும் நல்லவர்கள் அனைவரும் அனைத்துவித நலன்களும் பெற்று வாழ தயைகூர்ந்து அருள் புரியுமாறு பலகோடி தேவர்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்ள யாராலும் அழிக்க முடியாத அசுரர்களையும் அவர்களின் முப்புரங்களையும் வில்லேந்தி அம்புகொண்டு எரித்த எம்பெருமானும் கருணைகொண்டு உயிர்களை வாட்டும் பல கொடிய அசுரர்களையும் அழிக்கும் வலிமையை அவர்களுக்கு வழங்கி அருளினான்.

உட்கருத்து: உயிர்கள் எந்த செயலைச் செய்தாலும், மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றும் ஒன்றாக வைத்து இறைவனை மட்டுமே நினைத்து அவனது திருவருளை கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு இறை அருள் பெற்று செய்தால் எத்தகைய வேலையையும் செய்யத்தடையாக இருப்பவற்றை அழிக்கும் சக்தியை இறைவன் உயிர்களுக்கு அருளுவான்.

Related image

பாடல் #347

பாடல் #347: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமாத வஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.

விளக்கம்:

ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று சக்தி உறுதி எடுத்துக் கொண்டு இமய மலையின் அரசனாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்து பல காலம் உறுதியுடன் மாபெரும் தவம் செய்து தேவர்களும் அறியாத வழிபாட்டு முறைகளை தேவர்களும் அறிய முறையாக பூஜை செய்து இறைவனை அடைந்தாள்.

உட்கருத்து: ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் உயிர்கள் தமது உறுதியிலிருந்து சற்றும் விலகாமல் தியானமும் தவமும் செய்து அசையும் சக்தியாகிய குண்டலினி சக்தியை மேலேற்றி தனது சிரசின் இடப்பக்கம் இருக்கும் அசையா சக்தியாகிய சிற்சக்தியுடன் சேர்த்தால் தேவர்களும் அறியாத இறைவனின் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் தனக்குள்ளேயே உணர்ந்து இறைவனின் திருவடிகளைச் சென்று அடையலாம்.

Related image

பாடல் #348

பாடல் #348: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

விளக்கம்:

எல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிக்கொண்டு சோர்ந்து போக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மை பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்ல. பாடல் #347 ல் உள்ளபடி தனக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடன் பெருங்கருணையோடு நின்று அவர்களின் பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.

Related image

பாடல் #349

பாடல் #349: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழிப் பிரமருக்கும் வாள்கொடுத் தானே.

விளக்கம்:

கடல் போல் வலிமை கொண்ட பிரமன் திருமால் இருவரும் நெடுங்காலம் ஒளி வடிவாக இருக்கின்ற ஆதி இறைவனை வழிபட திருமாலுக்கு சக்ராயுதமும் பிரம்மனுக்கு வாளும் கொடுத்து அருளினான்.

உட்கருத்து: பாடல் #347 ல் உள்ளபடி அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர முதல் சக்கரம் மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் அசையும் சக்தியான குண்டலினி கடல் போல் வலிமை கொண்ட 2வது சக்கரமாகிய பிரம்மன் வீற்றீருக்கும் சுவாதிட்டானம், 3வது சக்கரமாகிய திருமால் வீற்றிருக்கும் மணிப்பூரகத்தை உணர்ந்தும் அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர்ந்து தனக்குள் லிங்க உருவத்தை உணர்ந்தும் தத்துவத்தை உணர்ந்தும் நெடுங்காலம் ஒளி வடிவாய் இருக்கும் ஆதி இறைவனை வழிபட்டால் திருமால் செய்யும் காக்கும் வேலையும் பிரம்மன் செய்யும் படைக்கும் வேலையையும் இறைவன் கொடுத்து அருளுவான்.

இதனை திருமந்திர பாடல் #302, பாடல் #321 ன் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பல புராண வரலாறுகளில் பல மகான்கள் சித்தர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றில் இறந்தவர்களை மீண்டும் மீட்டு படைக்கும் பிரம்மனின் தொழிலை செய்துள்ளார்கள். கர்மவினைகளின் படி இறக்கவேண்டியவர்களை காத்து காக்கும் திருமாலின் தொழிலை செய்துள்ளார்கள்.

Related image

பாடல் #339

முன்னுரை: இரண்டாம் தந்திரம் எண் -2 பதிவலியில் வீரட்டம் என்னும் தலைப்பில் வரும் 8 பாடல்களும் இறைவன் தமது வீரத்தால் மறக்கருணை என்னும் அறியாமையால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்களை வதம்செய்து அவர்களை ஆட்கொண்ட புராணக்கதைகளை பாடல்களில் கூறுவதாக இருந்தாலும் இதன் உட்கருத்து உயிர்கள் தமக்குள் இருக்கும் எட்டுவித அசுரர்களை வதம் செய்து இறைவனை அடையும் வழிகளை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.

பாடல் #339: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

விளக்கம்:

கருத்த நிற மேனியோடு இரு கண்களும் தெரியாத அந்தகன் என்கிற அசுரன் மிகக் கடுமையான தவம் செய்து சாகா வரம் பெற்று ஈரேழு பதினான்கு உலகத்தையும் வெற்றி பெற்று அதில் வாழும் அனைத்து உயிர்களையும் கொடுமை படுத்தினான். இவனது கொடுமை தாங்காத தேவர்கள் இறைவனிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து குருத்து போன்ற மூன்று இலைகளில் நடு இலை மட்டும் மிகவும் நீண்டு இருக்கும் கூர்மையான சூலாயுதத்தால் அந்தகாசுரனின் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்.

உட்கருத்து: அறியாமையால் மாயையில் மயங்கி கண் தெரியாமல் இருட்டில் இருக்கும் மனம் உயிரை இறைவனை அடையவிடாமல் தீய எண்ணத்துடன் வதைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் உயிர் இறைவா என்னை காப்பாற்று என்று வேண்ணிக்கொள்ள இறைவன் மாயையில் சிக்கி இருட்டில் கண் தெரியாமல் இருக்கும் மனதில் ஒளியைக் கொடுத்து அறியாமை என்னும் தீய எண்ணங்களை கொன்று உயிரை காப்பாற்றி அருளினார்.

மனித முதுகெலும்பு முடியும் பகுதி கழுத்து எலும்பு களுக்கு மேல் உள்ளது இது பின் மூளைப் பகுதிக்கும் முன்மூளை பகுதிக்கும் இடையில் முடிவுறுகிறது இதற்கு குருந்தம் என்று பெயர். இதன்மேல் சோம ஒளி, சூரிய ஒளி, ஆன்ம ஒளி என்னும் மூன்று ஒளிகள் உள்ளன. இவைதான் குருத்துயர் சூலமாகும். இந்த குருத்துயர் சூலத்தின் மூலம் இறைவன் அருளால் அறியாமை என்னும் இருட்டை அகற்றி இறைவனை உணர்ந்துகொள்ளலாம்.

Related image

பாடல் #340

பாடல் #340: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.

விளக்கம்:

பிரம்மாவின் மூத்தகுமாரனாகிய தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவியைத் தனது மகளாக அடைந்தான். பார்வதி தேவி ஈசனைக் கண்டு தனது மாயை மறைந்து அவருடன் இணைந்துவிட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் இறைவனுடன் இணைந்துவிட்டாள் என்ற கோபத்தில் இறைவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக்குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான். அவன் குற்றத்தில் கோபம் கொண்ட இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து அவனது தலையைத் துண்டித்து வேள்வித் தீயில் போட்டு எரித்துவிட்டார். அதன்பிறகு பார்வதி தேவியும் பிரம்ம தேரும் உலக நன்மைக்கு தட்சன் தேவை என்று வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் ஒரு ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் உடலில் பொருத்தி அவன் வாழும்படி செய்தார். தட்சனும் தனது ஆணவம் அழிந்து இறைவனை வணங்கினான். இந்த புராணம் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர் தலமாகும்.

உட்கருத்து: உயிர்கள் தனது கர்மாக்களை தீர்க்க பிறந்து கர்மாக்கள் தீர்ந்ததும் இறைவனை அடைய காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உயிர்களிடம் ஆணவம் தலைவன் போல் குடிகொண்டு தான் சொல்லுவது தான் சரி. அடுத்தவர் சொல்வதை கேட்கமாட்டேன் என்று தன் சொல்படி உயிரை ஆட்டிப்படைத்துக் கொண்டு இறைவனிடம் உயிர் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. உயிர் இறைவா ஆணவத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று என்று வேண்டிட இறைவன் ஆணவம் என்னும் தலைவனின் தலையை வெட்டி உயிர்களுக்கு அருள் செய்தான். ஆணவம் முற்றிலும் அழிந்தால் இறைவனை அடைந்து விடலாம். ஆனால் உயிர்கள் தனது கர்மாக்கள் தீர்ந்தால் மட்டுமே இறைவனை அடையமுடியும் ஆகவே கர்மாக்கள் தீரும்வரை நன்மை, தீமை என எது நடந்தாலும் எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணும் ஆட்டுத்தலை போன்ற எண்ணத்தை படைத்து உயிர்களுக்கு அருளினான்.

Related image

பாடல் #341

பாடல் #341: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு வீரச்செயல்கள்)

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

விளக்கம்:

அண்டசராசரமெங்கும் பரவி இருப்பவனும் வாணுலகம் மண்ணுலகம் என்று இரண்டு நிலங்களையும் தாங்கி இருப்பவனும் தம்மை நாடி வருபவர்களுக்கு தஞ்சம் கொடுப்பவனுமாகிய இறைவனின் திருவடிகளின் பெருங்கருணையை உணர்ந்து இருக்கும் தேவர்கள் பிரம்மனைப் பார்த்துக் கோபம் கொண்டனர். பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்வதாலும் ஐந்து தலைகளைக் கொண்டதாலும் மும்மூர்த்திகளிலேயே தாம்தான் உயர்ந்தவர் என்று தற்பெருமை கொண்டிருந்ததால் இறைவனது திருவடிக் கருணையை உணராமல் இருந்தார். பிரம்மனின் தற்பெருமையால் படைப்பு பாதிக்கப்படுவதைக் கண்ட இறைவன் பைரவ அவதாரம் எடுத்து பிரம்மனின் ஐந்து தலைகளின் ஒன்றைத் தனது விரல் நகத்தால் கிள்ளி எடுத்துவிட்டார். பிரம்மாவின் கிள்ளி எடுக்கப்பட்ட தலையிலிருந்து வந்த குருதியை அந்த கபாலத்திலேயே எடுத்து திருமாலை ஏற்றுக்கொள்ளச் செய்து அருளினார். இது நிகழ்ந்த இடம் திருக்கண்டியூர் தலமாகும்.

உட்கருத்து: உயிர்களிடம் இருக்கும் நான் என்னும் அகங்காரம் அகந்தை தான் யார் என்பதை உணரவிடாமல் செய்து நல்ல எண்ணம் குணங்களை அழிப்பதுடன் இறைவனையும் அடையவிடாமல் செய்து விடுகிறது. மேலும் அகந்தை அகங்காரத்தினால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதன் அடுத்த பிறவியையும் பாதிக்கிறது. (உதாரணமாக உயிருக்கு கர்மவினையின்படி 10 பிறவிகள் என்று எடுத்துக்கொண்டால் அகந்தை அகங்காரத்தினால் மேலும் பிறவிகள் எண்ணிக்கை கூடி அடுத்து வரும் பிறவிகளையும் பாதிக்கிறது) பிறவிகள் உயிர்கள் இறைவா என்னை காப்பாற்று என்று இறைவனை வேண்டிட தன்னை நாடி வருபவர்களுக்கு பெருங்கருணை செய்யும் இறைவன் அந்த அகந்தை அகங்காரத்தை அடியோடு வெட்டி எடுத்து உயிர்களை காக்கும் திருமாலிடம் அளித்து மீண்டும் இந்த உயிருக்கு மீண்டும் அகந்தை அகங்காரம் வராமல் இருக்க அருளினார்.

Related image

பாடல் #342

பாடல் #342: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபால்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

விளக்கம்:

அனைத்து உயிருக்குள்ளும் எங்கும் எதிலும் இரண்டறக் கலந்திருப்பவனும் அனைத்து உயிர்களும் உய்ய வேதங்களை உலகிற்கு ஓதி அந்த வேதத்திற்கு முதல்வனாயும் இருக்கும் இறைவனை உணராமல் உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம் கொண்டு ஆத்திரத்தில் அறிவிழந்து அடுத்த உயிருக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணராமல் அந்த உயிரை அழிக்க பல கெட்ட செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட குரோதம் என்னும் அசுர குணத்தை உயிர்களிடம் உள்ள சக்திமய சக்கரங்களை கருவியாக பயன்படுத்தி இறைவன் தனது திருவடி மூலம் அழித்தான்.

இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருவிற்குடி தலமாகும். ஒரு முறை இந்திரன் தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர் சிவன் என்பதை அறிந்த இந்திரன் ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளி பாற்கடலில் விழுந்தது. அதில் ஒரு குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான குழந்தைக்கு ஜலந்தராசூரன் என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும் சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன் தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும் என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார் இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான். இந்த நேரத்தில் திருமாலை அழைத்த சிவன் நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது.

Related image