பாடல் #1747

பாடல் #1747: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஒன்றிய வாறு முடலினுடன் கிடந்
தென்று மெம்மீச னடக்கு மியல்வது
தென்ற லைத்தேறத் திருந்துஞ் சிவனடி
நின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறிய வாறு முடலினுடன கிடந
தெனறு மெமமீச னடககு மியலவது
தெனற லைததெறத திருநதுஞ சிவனடி
நினறு தொழுதெனென னெஞசததி னுளளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்றிய ஆறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் அடக்கும் இயல்பு அது
தென் தலை தேற திருந்தும் சிவன் அடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.

பதப்பொருள்:

ஒன்றிய (இறையருளால் ஒன்றாக செயல்படுகின்ற) ஆறும் (ஆறு சக்கரங்களும்) உடலின் (உடல்) உடன் (உடன்) கிடந்து (சேர்ந்து கிடந்து)
என்றும் (எப்போதும்) எம் (எம்பெருமான்) ஈசன் (இறைவன்) அடக்கும் (தமக்குள் அடங்கி இருக்கின்ற) இயல்பு (இயல்பான) அது (தன்மையாகிவிடும்)
தென் (அழகிய) தலை (தலையில் உடையவனாகிய இறைவனை) தேற (தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெற) திருந்தும் (தீய மலங்களை திருத்தி நன்மையை அருளுகின்ற) சிவன் (இறைவனின்) அடி (திருவடியை)
நின்று (நின்று) தொழுதேன் (வணங்கித் தொழுதேன்) என் (எமது) நெஞ்சத்தின் (நெஞ்சத்தின்) உள்ளே (உள்ளே).

விளக்கம்:

இறையருளால் ஒன்றாக செயல்படுகின்ற ஆறு சக்கரங்களும் உடலோடு சேர்ந்து கிடந்து எப்போதும் எம்பெருமான் இறைவன் தமக்குள் அடங்கி இருக்கின்ற இயல்பான தன்மையாகிவிடும். அதன் பிறகு அழகிய தலையில் உடையவனாகிய இறைவனை தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெற தீய மலங்களை திருத்தி நன்மையை அருளுகின்ற இறைவனின் திருவடியை நின்று வணங்கித் தொழுதேன் எமது நெஞ்சத்தின் உள்ளே.

குறிப்பு:

தென் தலையை அழகிய தலை என்று சொல்லப்படுவதன் காரணம் ஆறு சக்கரங்களும் ஒன்றாக சேர்ந்த பிறகு சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் விரிவடைந்து அதிலிருந்து வெளிப்படுகின்ற ஜோதி வடிவான இறை சக்தியானது கொன்றை மலரின் வாசனையை வெளிப்படுத்துவதால் ஆகும்.

பாடல் #1748

பாடல் #1748: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

உணர்ந்தே னுலகினி லொண் பொருளானைக்
குணர்ந்தேன் குவலையங் கோயிலென் னெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரநதெ னுலகினி லொண பொருளானைக
குணரநதென குவலையங கொயிலென னெஞசம
புணரநதென புனிதனும பொயயலல மெயயெ
பணிநதென பகலவன பாடடு மொலியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானை
கொணர்ந்தேன் குவலையம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

பதப்பொருள்:

உணர்ந்தேன் (எமக்குள்ளே உணர்ந்தேன்) உலகினில் (உலகமெங்கும் உள்ள) ஒண் (அனைத்து பொருளிலும் ஒன்றாக கலந்து இருக்கின்ற) பொருளானை (மாபெரும் பொருளாகிய இறைவனை)
கொணர்ந்தேன் (கொண்டு வந்தேன்) குவலையம் (உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவன்) கோயில் (வீற்றிருக்கின்ற கோயிலாகிய) என் (எமது) நெஞ்சம் (நெஞ்சத்துக்குள்ளே)
புணர்ந்தேன் (ஒன்றாக கலந்து விட்டேன்) புனிதனும் (எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனை) பொய் (இது பொய்) அல்ல (இல்லை) மெய்யே (உண்மையே ஆகும்)
பணிந்தேன் (பணிந்து தொழுதேன்) பகலவன் (அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனை) பாட்டும் (அப்போது எமக்குள்ளிருந்து பாடல்களாகவும்) ஒலியே (ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்).

விளக்கம்:

உலகமெங்கும் உள்ள அனைத்து பொருளிலும் ஒன்றாக கலந்து இருக்கின்ற மாபெரும் பொருளாகிய இறைவனை பாடல் #1747 இல் உள்ளபடி எமக்குள்ளே உணர்ந்தேன். உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கும் கோயிலாக எமது நெஞ்சத்துக்குள்ளே அவனை கொண்டு வந்தேன். அவ்வாறு எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனோடு ஒன்றாக கலந்து விட்டேன். இது பொய் இல்லை உண்மையே ஆகும். எமக்குள்ளிருந்தே அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனை பணிந்து தொழுதேன். அப்போது எமக்குள்ளிருந்து பாடல்களாகவும் ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்.

பாடல் #1749

பாடல் #1749: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆங்கவை மூன்றினு மாரழல் வீசிடத்
தாங்கிடு மீரேழுந் தானடு வானதி
லோங்கிய வாதியு மந்தமு மாமென
வீங்கிவை தம்முட லிந்துவு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆஙகவை மூனறினு மாரழல வீசிடத
தாஙகிடு மீரெழுந தானடு வானதி
லொஙகிய வாதியு மநதமு மாமென
வீஙகிவை தமமுட லிநதுவு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட
தாங்கிடும் ஈர் ஏழும் தான் நடு வான் அதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே.

பதப்பொருள்:

ஆங்கு (அண்ட) அவை (சராசரங்களில்) மூன்றினும் (உள்ள அனைத்து உலகங்களாகவும் அதற்கு மேலாகவும் கீழாகவும் ஆகிய மூன்றிலும்) ஆர் (முழுவதுமாய் நிறைந்து இருக்கின்ற) அழல் (மாபெரும் தீயாக) வீசிட (வீசிக்கொண்டு இருக்க)
தாங்கிடும் (தாம் தாங்கிக் கொண்டு இருக்கின்ற) ஈர் (இரண்டும்) ஏழும் (ஏழும் பெருக்கி வரும் மொத்தம் பதினான்கு உலகங்களுக்கும்) தான் (தானே) நடு (நடுவனாக) வான் (ஆகாய தத்துவத்தில்) அதில் (அங்கே)
ஓங்கிய (ஓங்கி விளங்குகின்ற) ஆதியும் (அனைத்திற்கும் ஆதியும்) அந்தமும் (அனைத்திற்கும் முடிவும்) ஆம் (ஆக) என (இருப்பது தாமே எனவும்)
ஈங்கு (இங்கு) இவை (உள்ள அனைத்தையும்) தம் (தம்) உடல் (உடலுக்குள்ளே கொண்டு) இந்துவும் (சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும்) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1748 இல் உள்ளபடி தமக்குள்ளிருந்து நாத வடிவாக வெளிப்படுகின்ற நடராஜ வடிவ தத்துவமானது, அண்ட சராசரங்கள் அதற்கும் மேல் அதற்கும் கீழ் என்று மூன்று இடங்களிலும் முழுவதுமாக நிறைந்து நிற்கின்ற மாபெரும் தீயாகவும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்கிக் கொண்டும், அனைத்திற்கும் நடுவாகிய ஆகாய தத்துவமாகவும், அனைத்தையும் தாண்டி ஓங்கி விளங்குவதாகவும், அனைத்திற்கும் ஆதியாகவும், அனைத்திற்கும் முடிவாகவும், இப்படி இங்கு உள்ள அனைத்தையும் தம் உடலுக்குள்ளே கொண்டு சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும் இருக்கின்றது.

பாடல் #1750

பாடல் #1750: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

தன்மேனி தான்சிவ லிங்கமாய் நின்றிடுந்
தன்மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்
தன்மேனியில் தானாகுந் தற்பரந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனமெனி தானசிவ லிஙகமாய நினறிடுந
தனமெனி தானுஞ சதாசிவமாய நிறகுந
தனமெனி தறசிவன தறசிவா னநதமாந
தனமெனியில தானாகுந தறபரந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் மேனி தான் சிவ இலிங்கம் ஆய் நின்றிடும்
தன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும்
தன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம்
தன் மேனியில் தான் ஆகும் தற் பரம் தானே.

பதப்பொருள்:

தன் (அடியவரின்) மேனி (உடல்) தான் (தானே) சிவ (சிவ) இலிங்கம் (இலிங்கம்) ஆய் (ஆக) நின்றிடும் (நிற்கும்)
தன் (அடியவரின்) மேனி (உடல்) தானும் (தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும்) சதா (சதா) சிவம் (சிவப் பரம் பொருள்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கும்)
தன் (அடியவரின்) மேனி (உடல்) தன் (தனது) சிவன் (சிவனாகவும்) தன் (தன்னுடைய) சிவ (சிவ) ஆனந்தம் (பேரின்பமாகவும்) ஆம் (ஆகும்)
தன் (அடியவரின்) மேனியில் (உடலில்) தான் (தானே) ஆகும் (ஆகி நிற்பது) தற் (தானாகவே எப்போதும் இருக்கின்ற) பரம் (பரம்பொருள்) தானே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1749 இல் உள்ளபடி அண்ட சராசரங்களாகவும் அனைத்துமாகவும் இருக்கின்ற நடராஜ தத்துவத்தை தமக்குள்ளே உணர்ந்து கொண்ட அடியவரின் உடலானது தானே சிவ இலிங்கமாக நிற்கும். அடியவர் தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும் சதாசிவப் பரம் பொருளாகவே நிற்பார். அடியவர் தனது உடலே சிவனாகவும், தன்னுடைய உடலுக்குள்ளேயே சிவ பேரின்பமாகவும் ஆகி விடுவார். இவ்வாறு அடியவரின் உடல் தானே ஆகி நிற்பது தானாகவே எப்போதும் இருக்கின்ற பரம்பொருள் ஆகும்.

பாடல் #1743

பாடல் #1743: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ்
செஞ்சுறு செஞ்சுடர்கே சரி மின்னாகுஞ்
செஞ்சுடர் போலுந் தேசாயுதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெஞசு சிரஞசிகை நீளகவசங கணணாம
வஞசமில விநது வளரநிறம பசசையாஞ
செஞசுறு செஞசுடரகெ சரி மினனாகுஞ
செஞசுடர பொலுந தெசாயுதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம்
செம் உறு செம் சுடர்கே சரி மின் ஆகும்
செம் சுடர் போலும் தெசு ஆயுதம் தானே.

பதப்பொருள்:

நெஞ்சு (மார்பு) சிரம் (தலை) சிகை (தலைமுடி) நீள் (நீண்ட) கவசம் (கவசம்) கண் (கண்கள்) ஆம் (ஆகிய இறைவனின் ஐந்து உறுப்புகளாகும்)
வஞ்சம் (இவை ஒரு தீமையும்) இல் (இல்லாத) விந்து (ஒளி உருவமாக) வளர் (எப்போதும் வளர்ந்து கொண்டே) நிறம் (இருக்கின்ற நிறம்) பச்சை (பசுமையாக நன்மையை அருளுவதை) ஆம் (குறிப்பது ஆகும்)
செம் (இறைவனின் செழுமை) உறு (உற்று இருக்கும்) செம் (சிகப்பான திருமேனியாகிய) சுடர்கே (சுடர் ஒளிக்கு) சரி (சரிசமமாக இருப்பது) மின் (இறைவியின் ஒளி உருவம்) ஆகும் (ஆகும்)
செம் (சிகப்பான) சுடர் (சுடர்) போலும் (போல) தெசு (பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள்) ஆயுதம் (தீமையை அழிக்கும் ஆயுதங்கள்) தானே (ஆக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் ஐந்து உறுப்புகளாகிய மார்பு, தலை, தலைமுடி, நீண்ட கவசம், கண்கள் ஆகியவை ஒரு தீமையும் இல்லாத ஒளி உருவமாக எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றின் பச்சை நிறம் பசுமையாக நன்மையை அருளுவதை குறிப்பது ஆகும். இறைவனின் செழுமை உற்று இருக்கும் சிகப்பான திருமேனியாகிய சுடர் ஒளிக்கு சரிசமமாக இருப்பது இறைவியின் ஒளி உருவம் ஆகும். சிகப்பான சுடர் போல பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள் தீமையை அழிக்கும் ஆயுதங்களாக இருக்கின்றது.

பாடல் #1751

பாடல் #1751: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம் பகுந்திட்ட நாடிலத்
தார மிரண்டுந் தரணி முழுதுமாய்
மாறி யெழுந்திடு மோசைய தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம பகுநதிடட நாடிலத
தார மிரணடுந தரணி முழுதுமாய
மாறி யெழுநதிடு மொசைய தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆரும் அறியார் அகாரம் அது ஆவது
பாரும் உகாரம் பகுந்து இட்ட நாடில் அத்
தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே.

பதப்பொருள்:

ஆரும் (சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும்) அறியார் (அறிந்து கொள்ள மாட்டார்கள்) அகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும்) அது (அருளாக) ஆவது (இருப்பது எது என்று)
பாரும் (உலகத்திலும்) உகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை) பகுந்து (பிரித்து) இட்ட (வகுத்துக் கொடுத்த இறை சக்தியை) நாடில் (தமக்குள் தேடி உணர்ந்தால்) அத் (அது)
தாரம் (பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும் வெளியிலும் இறை சக்தியாகவும் என்று) இரண்டும் (இரண்டுமாக) தரணி (உலகம்) முழுதும் (முழுவதற்கும் நிறைந்து) ஆய் (நிற்பதாய்)
மாறி (தமக்குள்ளிருந்தே மாறி) எழுந்திடும் (எழுந்திடும்) ஓசை (நாதம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும் அருளாக இருப்பது எது என்று அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகத்திலும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை பிரித்து வகுத்துக் கொடுத்த இறை சக்தியை தமக்குள் தேடி உணர்ந்தால் அது பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும், வெளியிலும் இறை சக்தியாகவும், என்று இரண்டுமாக உலகம் முழுவதற்கும் நிறைந்து நிற்பதாய் தமக்குள்ளிருந்தே மாறி எழுந்திடும் நாதம் ஆகும்.

கருத்து:

ஓங்காரத்தில் ‘அ’காரமாக உள்ளுக்குள் இருந்து இயக்குகின்ற சக்தியும் ‘உ’காரமாக வெளி உலகத்தை இயக்குகின்ற சக்தியும் நாத வடிவமாக இருக்கின்ற நடராஜ தத்துவத்தை குறிப்பதாகும். நடராஜ தத்துவத்தை தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களே இந்த ஓங்கார தத்துவத்தை அறிந்து சதாசிவ இலிங்கத்தின் நாத வடித்தை உணர்ந்து கொள்வார்கள். ஓங்காரத்தில் இருக்கின்ற இந்த இரண்டு சக்திகளே இறைவனுக்கு இரண்டு சக்திகளாக அனைத்து தெய்வ வடிவங்களிலும் காட்டப் படுகின்றது.

பாடல் #1752

பாடல் #1752: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

இலிங்க நற்பீட மிசையு மோங்கார
மிலிங்கம் நற்கண்டம் நிறையு மகார
மிலிங்கத்து வட்ட முறையு முகார
மிலிங்க வுகாரம் நிறைவிந்து நாதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலிஙக நறபீட மிசையு மொஙகார
மிலிஙகம நறகணடம நிறையு மகார
மிலிஙகதது வடட முறையு முகார
மிலிஙக வுகாரம நிறைவிநது நாதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்கம் நல் கண்டம் நிறையும் அகாரம்
இலிங்கத்து வட்டம் உறையும் உகாரம்
இலிங்க உகாரம் நிறை விந்து நாதமே.

பதப்பொருள்:

இலிங்க (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) பீடம் (பீடப் பகுதியானது) இசையும் (அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற) ஓங்காரம் (ஓங்காரத்தின் தத்துவமாகும்)
இலிங்கம் (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) கண்டம் (நடுவில் இருக்கின்ற பாணமானது) நிறையும் (அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) அகாரம் (‘அ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்கத்து (இலிங்க வடிவத்தில் இருக்கின்ற) வட்டம் (வட்டமானது) உறையும் (அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) உகாரம் (‘உ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்க (இலிங்க வடிவத்தில்) உகாரம் (‘உ’கார எழுத்தாக) நிறை (நிறைந்து இருப்பதுவே) விந்து (வெளிச்சமும்) நாதமே (சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்).

விளக்கம்:

அரூபமாக இருக்கின்ற சதாசிவ மூர்த்தியின் இலிங்க வடிவத்தில் நன்மை தருகின்ற பீடப் பகுதியானது அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஓங்காரத்தின் தத்துவமாகும். அதில் நடுவில் இருக்கின்ற பாணமானது அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘அ’கார எழுத்தின் தத்துவமாகும். அதில் இருக்கின்ற வட்டமானது அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘உ’கார எழுத்தின் தத்துவமாகும். இலிங்க வடிவத்தில் ‘உ’கார எழுத்தாக நிறைந்து இருப்பதுவே வெளிச்சமும் சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்.

கருத்து:

நன்மையே வடிவான இலிங்க வடிவத்தில் மேல் பாகம், நடுப் பாகம், கீழ் பாகம் என்று மூன்று பாகங்களாக பிரிந்து இருப்பது நாத வடிவாகிய நடராஜ தத்துவமாகும். அதில் மேல் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘அ’காரத்தையும், நடுப் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘உ’காரத்தையும், கீழ் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘ம’காரத்தையும் குறிக்கின்றது. ஓங்காரத்தின் எழுத்து வடிவமே விந்து தத்துவமாகும். ஓங்காரத்தின் ஒலி வடிவமே நாத தத்துவமாகும்.

Thirumandhiram – First Thandhiram

Complete Songs with their meanings from Thirumandhiram First Thandhiram is given as PDF eBook in the following link for download. You can also view the actual book below that in an embedded viewer:

https://www.kvnthirumoolar.com/wp-content/uploads/2020/05/Thirumandhiram-Thandhiram-1.pdf

Thirumandhiram-Thandhiram-1

பாடல் #1726

பாடல் #1726: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மானிட ராக்கை வடிவு சிவலிங்க
மானிட ராக்கை வடிவு சிதம்பர
மானிட ராக்கை வடிவு சதாசிவ
மானிட ராக்கை வடிவு திருக்கூத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மானிட ராககை வடிவு சிவலிஙக
மானிட ராககை வடிவு சிதமபர
மானிட ராககை வடிவு சதாசிவ
மானிட ராககை வடிவு திருககூததே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மானிடர் ஆக்கை வடிவு சிவ இலிங்கம்
மானிடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானிடர் ஆக்கை வடிவு சதா சிவம்
மானிடர் ஆக்கை வடிவு திரு கூத்தே.

பதப்பொருள்:

மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிவ (இறைவனின் அடையாளமாகிய) இலிங்கம் (இலிங்கமாகவே இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிதம்பரம் (சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரம் என்று எண்ணங்களாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சதா (அசையாத சக்தியாகிய) சிவம் (பரம்பொருளின் அம்சமான ஆன்மாவாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) திரு (இறைவன் ஆடுகின்ற) கூத்தே (திருக்கூத்தின் அசைவுகளாக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாகவும், சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாகவும், அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாகவும், இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாகவும் இருக்கின்றது.

பாடல் #1727

பாடல் #1727: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

உலந்தனர் பின்னு முளரென நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்க ளைந்து மொன்றாக
வலந்தரு தேவரை வந்தி செயீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலநதனர பினனு முளரென நிறபர
நிலநதரு நீரதெளி யூனவை செயயப
புலநதரு பூதஙக ளைநது மொனறாக
வலநதரு தெவரை வநதி செயீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலந்தனர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம் தரும் நீர் தெளி ஊன் அவை செய்ய
புலம் தரும் பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம் தரும் தேவரை வந்தி செயீரே.

பதப்பொருள்:

உலந்தனர் (இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன) பின்னும் (பிறகும்) உளர் (இனியும் பிறவி வேண்டும்) என (என்று) நிற்பர் (இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள்)
நிலம் (அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை) தரும் (தருகின்ற) நீர் (நீரினால்) தெளி (தெளிந்து உருவாகிய உணவினால்) ஊன் (வளர்கின்ற தசையும்) அவை (அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை) செய்ய (செய்ய)
புலம் (அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை) தரும் (தருகின்ற) பூதங்கள் (பூதங்கள்) ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து) ஒன்று (ஒன்று) ஆக (சேர்ந்து கொடுக்க)
வலம் (அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும்) தரும் (தருகின்ற) தேவரை (தேவர்களை) வந்தி (வணங்கி வழிபடுவதை) செயீரே (செய்யுங்கள்).

விளக்கம்:

இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும் இனியும் பிறவி வேண்டும் என்று இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள். அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசையும் அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை செய்து கொடுக்கும். அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை தருகின்ற பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து கொடுக்கும். அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதை செய்யுங்கள்.

கருத்து:

உயிர்களின் உடம்பாக இருப்பதே இறைவனின் சிவ இலிங்கமாகும். அதற்குள் இறைவனாகவே இருக்கின்ற அனைத்து தேவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே உயிர்களின் உடம்பையே கோயிலாக வணங்கி வந்தால் இனி பிறவி இல்லாத நிலையை அடையலாம். பாடல் #1823 இல் வருகின்ற “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிற வாசகம் இந்த பொருளையே குறிக்கின்றது.