பாடல் #1726

பாடல் #1726: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மானிட ராக்கை வடிவு சிவலிங்க
மானிட ராக்கை வடிவு சிதம்பர
மானிட ராக்கை வடிவு சதாசிவ
மானிட ராக்கை வடிவு திருக்கூத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மானிட ராககை வடிவு சிவலிஙக
மானிட ராககை வடிவு சிதமபர
மானிட ராககை வடிவு சதாசிவ
மானிட ராககை வடிவு திருககூததே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மானிடர் ஆக்கை வடிவு சிவ இலிங்கம்
மானிடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானிடர் ஆக்கை வடிவு சதா சிவம்
மானிடர் ஆக்கை வடிவு திரு கூத்தே.

பதப்பொருள்:

மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிவ (இறைவனின் அடையாளமாகிய) இலிங்கம் (இலிங்கமாகவே இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிதம்பரம் (சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரம் என்று எண்ணங்களாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சதா (அசையாத சக்தியாகிய) சிவம் (பரம்பொருளின் அம்சமான ஆன்மாவாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) திரு (இறைவன் ஆடுகின்ற) கூத்தே (திருக்கூத்தின் அசைவுகளாக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாகவும், சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாகவும், அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாகவும், இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாகவும் இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.