பாடல் #1727

பாடல் #1727: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

உலந்தனர் பின்னு முளரென நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்க ளைந்து மொன்றாக
வலந்தரு தேவரை வந்தி செயீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலநதனர பினனு முளரென நிறபர
நிலநதரு நீரதெளி யூனவை செயயப
புலநதரு பூதஙக ளைநது மொனறாக
வலநதரு தெவரை வநதி செயீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலந்தனர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம் தரும் நீர் தெளி ஊன் அவை செய்ய
புலம் தரும் பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம் தரும் தேவரை வந்தி செயீரே.

பதப்பொருள்:

உலந்தனர் (இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன) பின்னும் (பிறகும்) உளர் (இனியும் பிறவி வேண்டும்) என (என்று) நிற்பர் (இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள்)
நிலம் (அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை) தரும் (தருகின்ற) நீர் (நீரினால்) தெளி (தெளிந்து உருவாகிய உணவினால்) ஊன் (வளர்கின்ற தசையும்) அவை (அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை) செய்ய (செய்ய)
புலம் (அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை) தரும் (தருகின்ற) பூதங்கள் (பூதங்கள்) ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து) ஒன்று (ஒன்று) ஆக (சேர்ந்து கொடுக்க)
வலம் (அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும்) தரும் (தருகின்ற) தேவரை (தேவர்களை) வந்தி (வணங்கி வழிபடுவதை) செயீரே (செய்யுங்கள்).

விளக்கம்:

இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும் இனியும் பிறவி வேண்டும் என்று இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள். அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசையும் அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை செய்து கொடுக்கும். அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை தருகின்ற பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து கொடுக்கும். அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதை செய்யுங்கள்.

கருத்து:

உயிர்களின் உடம்பாக இருப்பதே இறைவனின் சிவ இலிங்கமாகும். அதற்குள் இறைவனாகவே இருக்கின்ற அனைத்து தேவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே உயிர்களின் உடம்பையே கோயிலாக வணங்கி வந்தால் இனி பிறவி இல்லாத நிலையை அடையலாம். பாடல் #1823 இல் வருகின்ற “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிற வாசகம் இந்த பொருளையே குறிக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.