பாடல் #1794

பாடல் #1794: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

குறிப்பினி னுள்ளே குவலையந் தோன்றும்
வெறுப்பிரு ணீக்கில் விகிர்தனு நிற்குஞ்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடி
லறிப்புறு காட்சி யமரரு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிபபினி னுளளெ குவலையந தொனறும
வெறுபபிரு ணீககில விகிரதனு நிறகுஞ
செறிபபுறு சிநதையைச சிககென நாடி
லறிபபுறு காடசி யமரரு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீக்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்பு உறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.

பதப்பொருள்:

குறிப்பினின் (உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின்) உள்ளே (உள்ளே) குவலயம் (அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும்) தோன்றும் (உண்மைப் பொருளாக தோன்றும் அந்த திருவருள் ஜோதியால்)
வெறுப்பு (ஆணவமாகிய) இருள் (மலத்தை) நீக்கில் (நீக்கி விட்டால்) விகிர்தனும் (அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன்) நிற்கும் (அடியவருக்குள் வந்து நிற்பான்)
செறிப்பு (அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில்) உறு (உறுதியாக நிற்கின்ற) சிந்தையை (சிந்தனையை) சிக்கென (விடாது பற்றிக் கொண்டு) நாடில் (இறைவனை தேடும் போது)
அறிப்பு (உள்ளுக்குள் உணரக்கூடிய) உறு (முழுமையான) காட்சி (திருவருள் காட்சி தோன்றும்) அமரரும் (அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை) ஆமே (அடையலாம்).

விளக்கம்:

உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின் உள்ளே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும் உண்மைப் பொருளாக தோன்றும். அந்த திருவருள் ஜோதியால் ஆணவமாகிய மலத்தை நீக்கி விட்டால் அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன் அடியவருக்குள் வந்து நிற்பான். அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில் உறுதியாக நிற்கின்ற சிந்தனையை விடாது பற்றிக் கொண்டு இறைவனை தேடும் போது உள்ளுக்குள் உணரக்கூடிய முழுமையான திருவருள் காட்சி தோன்றும். அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #1793

பாடல் #1793: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

காண்டற் கரியன் கருத்தில னந்தியுந்
தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாதந் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யாய்நேச
மீண்டிக் கிடந்தங்கு இருளறு மாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணடற கரியன கருததில னநதியுந
தீணடறகுஞ சாரதறகுஞ செயனாதந தொனறிடும
வெணடிக கிடநது விளககொளி யாயநெச
மீணடிக கிடநதஙகு இருளறு மாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயன் நாதம் தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கு ஒளி ஆய் நேசம்
ஈண்டி கிடந்து அங்கு இருள் அறும் ஆறே.

பதப்பொருள்:

காண்டற்கு (கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு) அரியன் (மிகவும் கடினமானவன்) கருத்து (எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள) இலன் (முடியாதவன்) நந்தியும் (உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன்)
தீண்டற்கும் (வெளியில் தீண்டி பார்ப்பதற்கும்) சார்தற்கும் (பற்றிக் கொண்டு இருப்பதற்கும்) சேயன் (முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன்) நாதம் (உள்ளுக்குள்ளே நாதமாக) தோன்றிடும் (தோன்றுபவன்)
வேண்டி (அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி) கிடந்து (கிடக்கின்ற அடியவர்களுக்கு) விளக்கு (உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற) ஒளி (ஜோதி) ஆய் (ஆகிய) நேசம் (அன்பின் வடிவமாக வருகின்றவன்)
ஈண்டி (திருவளாகிய இவற்றை பெற்றுக் கொண்டு) கிடந்து (அதிலேயே கிடக்கும் போது) அங்கு (அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற) இருள் (அனைத்து விதமான மலங்களும்) அறும் (நீங்கிப் போய்விடும்) ஆறே (வழியாக அதுவே இருக்கும்).

விளக்கம்:

கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு மிகவும் கடினமானவன், எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள முடியாதவன், உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன், வெளியில் தீண்டி பார்ப்பதற்கும் பற்றிக் கொண்டு இருப்பதற்கும் முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன், உள்ளுக்குள்ளே நாதமாக தோன்றுபவன், அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி கிடக்கின்ற அடியவர்களுக்கு உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற ஜோதியாகிய அன்பின் வடிவமாக வருகின்றவன். இப்படிப்பட்ட இறைவனின் திருவருளை பெற்றுக் கொண்டு அதிலேயே கிடக்கும் போது அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற அனைத்து விதமான மலங்களும் நீங்கிப் போய்விடும் வழியாக அதுவே இருக்கும்.

பாடல் #1792

பாடல் #1792: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பொருள் பேதமீச னிரவும் பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந் தவமும்
பொருளது வுண்ணின்ற போகம தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொருள பெதமீச னிரவும பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந தவமும
பொருளது வுணணினற பொகம தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொருள் பேதம் ஈசன் இரவும் பகலும்
உரு அது ஆவது உடலும் உயிரும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே.

பதப்பொருள்:

பொருள் (மாயையாகிய உலகத்தில் பொருளாக) பேதம் (பிரித்து அறிந்து கொள்ள) ஈசன் (இறைவன் அருளியது) இரவும் (இரவும்) பகலும் (பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும்)
உரு (அதை அனுபவிக்கின்ற உருவம்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) உடலும் (இறைவன் அருளிய உடலும்) உயிரும் (அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும்)
அருள் (இறைவன் கொடுக்கின்ற திருவருள்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) அறமும் (அடியவர்கள் கடைபிடிக்கின்ற தர்மங்களும்) தவமும் (மேற்கொள்ளுகின்ற தவங்களும் ஆகும்)
பொருள் (உண்மைப் பொருள்) அது (அது ஆக இருப்பது) உள் (அடியவருக்குள்) நின்ற (இறையருளாக நிற்கின்ற) போகம் (பேரின்பம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

மாயையாகிய உலகத்தில் பொருளாக பிரித்து அறிந்து கொள்ள இறைவன் அருளியது இரவும் பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும். அதை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற உருவமாக இருப்பது இறைவன் அருளிய உடலும் அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும். அப்படி வினைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் இறையருளால் உள்ளுக்குள் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படி கடை பிடிக்கின்றவர்களுக்கு அந்த தர்மத்தின் பலனும் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் பலனுமே இறைவன் கொடுக்கின்ற திருவருளாக இருக்கின்றது. அந்த திருவருளே உண்மைப் பொருளாக அடியவருக்குள் நிற்கின்ற பேரின்பம் ஆகும்.

பாடல் #1791

பாடல் #1791: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பெருந்தண்மை தானென யானென வேறா
யிருந்தது மில்லை யதீச னறியும்
பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யே
திருந்துமுன் செய்கின்ற தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதணமை தானென யானென வெறா
யிருநதது மிலலை யதீச னறியும
பொருநது முடலுயிர பொலுணமை மெயயெ
திருநதுமுன செயகினற தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தண்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உண்மை மெய்யே
திருந்தும் முன் செய்கின்ற தேவர் பிரானே.

பதப்பொருள்:

பெரும் (மிகப் பெரிய) தண்மை (சாந்த நிலையில்) தான் (இறைவன்) என (என்றும்) யான் (அடியவர்) என (என்றும்) வேறு (வேறு வேறு) ஆய் (ஆக பிரிந்து)
இருந்ததும் (இருக்கின்ற நிலை) இல்லை (இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற) அது (அந்த நிலையை) ஈசன் (இறைவனே) அறியும் (அறிவான்)
பொருந்தும் (ஒன்றாக பொருந்தி இருக்கின்ற) உடல் (உடலும்) உயிர் (உயிரும்) போல் (போலவே) உண்மை (பேருண்மையாகிய தர்மத்தை) மெய்யே (எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே)
திருந்தும் (அடியவரின் உடல் அழிந்து போவதற்கு) முன் (முன்) செய்கின்ற (மாற்றி அருளுவதை செய்கின்றவன்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

மிகப் பெரிய சாந்த நிலையில் இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன் உடலும் உயிரும் ஒன்றாக பொருந்தி இருப்பதை போலவே பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.

பாடல் #1790

பாடல் #1790: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானிது தானென நின்றில னாடோறு
மூனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகிற் போற்பொழி வானுள
னானிது வம்பர நாதனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானிது தானென நினறில னாடொறு
மூனிது தானுயிர பொலுணர வானுளன
வானிரு மாமுகிற பொறபொழி வானுள
னானிது வமபர நாதனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் இது தான் என நின்று இலன் நாள் தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே.

பதப்பொருள்:

நான் (நான்) இது (இறைவன்) தான் (தான்) என (என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே) நின்று (நின்று) இலன் (இருக்காமல்) நாள் (தினந்) தோறும் (தோறும்)
ஊன் (தனது உடலாக) இது (இருப்பதே இறைவன்) தான் (தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது) உயிர் (தனது உயிர்) போல் (போல் இருக்கின்றவன் இறைவனே) உணர்வான் (என்பதை உணர்ந்து) உளன் (கொள்கின்றான்)
வான் (அப்போது வானத்தில்) இரு (இருக்கின்ற) மா (மாபெரும்) முகில் (மேகக் கூட்டம்) போல் (மழையாகப் பொழிவதைப் போல) பொழிவான் (தமது பேரருளை மழையாகப் பொழிபவன்) உளன் (தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான்)
நான் (அதன் பிறகு தாமாக இருக்கின்ற) இது (இறைவனே) அம்பர (ஆகாயத்தில்) நாதனும் (அனைத்திற்கும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்).

விளக்கம்:

பாடல் #1789 இல் உள்ளபடி நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல் தினந் தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன் தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்து கொள்கின்றான். அப்போது வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போல தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான். அதன் பிறகு தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்.

பாடல் #1789

பாடல் #1789: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மில்லை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மிலலை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவாரும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.

பதப்பொருள்:

அவனும் (இறைவனும்) அவனும் (அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும்) அவனை (உண்மையான பரம்பொருளை) அறியார் (அறிந்து கொள்வதில்லை)
அவனை (இறைவனை) அறியில் (மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும்) அறிவாரும் (அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது) இல்லை (இல்லை)
அவனும் (இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய) அவனும் (தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன்) அவனை (இறைவனாக தனக்குள் இருப்பவனை) அறியில் (முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு)
அவனும் (இறைவனும்) அவனும் (உயிராக இருப்பவனும்) அவன் (இறைவனே) இவன் (தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக) ஆமே (வீற்றிருப்பான்).

விளக்கம்:

இறைவனும் அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும் உண்மையான பரம்பொருளை அறிந்து கொள்வதில்லை. இறைவனை மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும் அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது இல்லை. இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன் இறைவனாக தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக வீற்றிருப்பான்.

பாடல் #1788

பாடல் #1788: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானென நீயென வேறில்லை நண்ணுத
லூனென வுன்னுயி ரென்ன வுடல்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென வின்பந் திளைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானென நீயென வெறிலலை நணணுத
லூனென வுனனுயி ரெனன வுடலநினறு
வானென வானவர நினறு மனிதரகள
தெனென வினபந திளைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என உள் உயிர் என்ன உடல் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

நான் (நான்) என (என்றும்) நீ (நீ) என (என்றும்) வேறு (வேறு வேறாக) இல்லை (இல்லாமல்) நண்ணுதல் (உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும்)
ஊன் (தசைகள்) என (ஆகவும்) உள் (உள்ளே இருக்கின்ற) உயிர் (உயிர்) என்ன (ஆகவும் இந்த இரண்டும் சேர்ந்த) உடல் (உடலாகவும்) நின்று (நின்று)
வான் (ஆகாயம்) என (ஆகவும்) வானவர் (அதில் இருக்கின்ற தேவர்களாகவும்) நின்று (நின்று) மனிதர்கள் (மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல்)
தேன் (மாயையில் மயங்கி அந்த மயக்கமே) என (உண்மை என்று நினைத்து) இன்பம் (சிற்றின்ப) திளைக்கின்ற (ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து) ஆறே (இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்).

விளக்கம்:

நான் என்றும் நீ என்றும் வேறு வேறாக இல்லாமல் உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும், தசைகளாகவும், உள்ளே இருக்கின்ற உயிராகவும், இந்த இரண்டும் சேர்ந்த உடலாகவும் நின்று, ஆகாயமாகவும், அதில் இருக்கின்ற தேவர்களாகவும் நின்று, மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல், மாயையில் மயங்கி அந்த மயக்கமே உண்மை என்று நினைத்து சிற்றின்ப ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்.

பாடல் #1787

பாடல் #1787: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

காய பரத்தி லலைந்து துரியத்துச்
சாய விரிந்து குவிந்து சகலத்தி
லாய வவ்வாறே யடைந்து திரிந்தோர்குத்
தூய வருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காய பரததி லலைநது துரியததுச
சாய விரிநது குவிநது சகலததி
லாய வவவாறெ யடைநது திரிநதொரகுத
தூய வருளதநத நநதிககென சொலவதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காய பரத்தில் அலைந்து துரியத்து
சாய விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறே அடைந்து திரிந்தோர்கு
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே.

பதப்பொருள்:

காய (உடலாக இருக்கின்ற) பரத்தில் (பரம்பொருளின் அடையாளத்தில்) அலைந்து (வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும்) துரியத்து (கனவு நிலையை)
சாய (சார்ந்து வாழ்ந்து) விரிந்து (மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும்) குவிந்து (மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து) சகலத்தில் (வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும்)
ஆய (ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும்) அவ்வாறே (அந்த ஆசைகளின் வழியிலேயே) அடைந்து (இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து) திரிந்தோர்கு (திரிகின்ற அடியவர்களுக்கு)
தூய (மாயை இல்லாத தூய்மையான) அருள் (அருளை) தந்த (தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை) என் (என்னவென்று) சொல்வதே (யான் எடுத்து சொல்வது?).

விளக்கம்:

உடலாக இருக்கின்ற பரம்பொருளின் அடையாளத்தில் வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும், கனவு நிலையை சார்ந்து வாழ்ந்து மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும், மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும், ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், அந்த ஆசைகளின் வழியிலேயே இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து திரிகின்ற அடியவர்களுக்கு, மாயை இல்லாத தூய்மையான அருளை தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை என்னவென்று யான் எடுத்து சொல்வது?

பாடல் #1786

பாடல் #1786: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்று
முணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
யுணர்வுடை யார்க ளுணர்ந்த வக்கால
முணர்வுடை யார்க ளுணர்ந்து கண்டாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரவுடை யாரகட குலகமுந தொனறு
முணரவுடை யாரகட குறுதுய ரிலலை
யுணரவுடை யாரக ளுணரநத வககால
முணரவுடை யாரக ளுணரநது கணடாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்வு உடையார்களுக்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்களுக்கு உறு துயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.

பதப்பொருள்:

உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உலகமும் (அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற) தோன்றும் (தர்மங்களும் தெரிய வரும்)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உறு (உலகத்தில் அனுபவிக்க வேண்டிய) துயர் (துன்பங்கள்) இல்லை (என்று எதுவும் இல்லை)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்த (அதை உணர்ந்த) அக் (அந்த) காலம் (நொடிப் பொழுதிலேயே)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்து (தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து) கண்டாரே (தரிசிப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1785 இல் உள்ளபடி உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற அனுபவத்தை பெற்றவர்களுக்கு, அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தர்மங்களும் தெரிய வரும். அவர்களுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் என்று எதுவும் இல்லை. அவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்த அந்த நொடிப் பொழுதிலேயே தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து தரிசிப்பார்கள்.

பாடல் #1785

பாடல் #1785: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

குறிக்கின்ற தேகமுந் தேகியுங் கூடி
நெறிக்கும் பிராண னிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றியே நேர்மை
பிறிக்க வறியாதார் பேயோ டொப்பரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிககினற தெகமுந தெகியுங கூடி
நெறிககும பிராண னிலைபெறற சீவன
பறிககினற காயததைப பறறியெ நெரமை
பிறிகக வறியாதார பெயொ டொபபரே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றியே நேர்மை
பிறிக்க அறியாதார் பேயோடு ஒப்பரே.

பதப்பொருள்:

குறிக்கின்ற (ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட) தேகமும் (உடலும்) தேகியும் (உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும்) கூடி (ஒன்றாக சேர்ந்து)
நெறிக்கும் (வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட) பிராணன் (மூச்சுக்காற்றும்) நிலை (அந்த மூச்சுக்காற்றை நிலையாகக்) பெற்ற (கொண்டு வாழ்கின்ற) சீவன் (உயிரும்)
பறிக்கின்ற (சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற) காயத்தை (உடலை) பற்றியே (சார்ந்து தாம் வாழ்ந்தாலும்) நேர்மை (இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை)
பிறிக்க (உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து) அறியாதார் (அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள்) பேயோடு (ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப்) ஒப்பரே (போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள்).

விளக்கம்:

ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட உடலும், உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும், ஒன்றாக சேர்ந்து வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட மூச்சுக்காற்றும், அந்த மூச்சுக்காற்றை நிலையாகக் கொண்டு வாழ்கின்ற உயிரும், ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற உடலை சார்ந்து தாம் வாழ்ந்தாலும் இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை, உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள், ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப் போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள்.