பாடல் #1526

பாடல் #1526: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவ
னணுகிய வொன் றறியாத வொருவ
னணுகு முலகெங்கு மாவியு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நணுகினு ஞானக கொழுநதொனறு நலகும
பணிகிலும பனமலர தூவிப பணிவ
னணுகிய வொன றறியாத வொருவ
னணுகு முலகெஙகு மாவியு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன்
அணுகிய ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே.

பதப்பொருள்:

நணுகினும் (அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால்) ஞான (ஞானத்தின்) கொழுந்து (உச்சமாக இருக்கின்ற) ஒன்று (பேரறிவு ஞானத்தை) நல்கும் (அந்த அருட் சக்தியே வழங்குவாள்)
பணிகிலும் (அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும்) பல் (பல விதமான) மலர் (மலர்களை) தூவி (தூவி) பணிவன் (வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால்)
அணுகிய (நம்மை நெருங்கி வரும்) ஒன்று (அருட் சக்தியை) அறியாத (தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாத) ஒருவன் (சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது)
அணுகும் (அவன் இருக்கின்ற) உலகு (உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள்) எங்கும் (எங்கும்) ஆவியும் (இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக) ஆமே (அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்).

விளக்கம்:

அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால் ஞானத்தின் உச்சமாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தை அந்த அருட் சக்தியே வழங்குவாள். அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும் பல விதமான மலர்களை தூவி வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால் நம்மை நெருங்கி வரும் அருட் சக்தியை தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள் முடியாத சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது அவன் இருக்கின்ற உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள் எங்கும் இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருத்து:

யோகத்தாலும் ஞானத்தினாலும் இறைவியை அடைய முடியாதவர்கள் கூட சரியை மற்றும் கிரியையின் மூலமே இறைவியை அடைந்து விட முடியும்.

பாடல் #1518

பாடல் #1518: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

மருட்டிப் புணர்ந்து மயக்கமு நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
யருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மருடடிப புணரநது மயககமு நீககி
வெருடடி வினையறுத தினபம விளைததுக
குருடடினை நீககிக குணமபல காடடி
யருடடிகழ ஞான மதுபுரிந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தாளே.

பதப்பொருள்:

மருட்டி (சாதகர்கள் தன்னை நினைந்து உருகும் படி செய்து) புணர்ந்து (அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து) மயக்கமும் (மாயையாகிய மயக்கத்தை) நீக்கி (நீக்கி விட்டு)
வெருட்டி (விரைவாக நீங்கிச் செல்லும் படி மிரட்டி) வினை (வினைகளை) அறுத்து (அறுத்து விட்டு) இன்பம் (பேரின்பத்தை) விளைத்து (அனுபவிக்கும் படி செய்து)
குருட்டினை (மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாத குருட்டுத் தன்மையை) நீக்கி (நீக்கி விட்டு) குணம் (இறைவனின் தன்மைகளை) பல (பல விதங்களில்) காட்டி (கண்டு உணரும் படி செய்து)
அருள் (பேரருள்) திகழ் (திகழ்கின்ற) ஞானம் (உண்மை ஞானத்தை) அது (சாதகர்கள் அடையும் படி) புரிந்தாளே (செய்து அருளுகின்றாள் இறை சக்தி).

விளக்கம்:

சாதகர்கள் தன்னை நினைந்து உருகும் படி செய்து அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து மாயையாகிய மயக்கத்தை நீக்கி விட்டு விரைவாக நீங்கிச் செல்லும் படி மிரட்டி வினைகளை அறுத்து விட்டு பேரின்பத்தை அனுபவிக்கும் படி செய்து மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாத குருட்டுத் தன்மையை நீக்கி விட்டு இறைவனின் தன்மைகளை பல விதங்களில் கண்டு உணரும் படி செய்து பேரருள் திகழ்கின்ற உண்மை ஞானத்தை சாதகர்கள் அடையும் படி செய்து அருளுகின்றாள் இறை சக்தி.

பாடல் #1519

பாடல் #1519: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

கன்னித் துறைபடிந் தாடிய வாடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கனனித துறைபடிந தாடிய வாடவர
கனனித துறைபடிந தாடுங கருததிலர
கனனித துறைபடிந தாடுங கருததுணடெல
பினனைப பிறவி பிறிதிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கன்னி துறை படிந்து ஆடிய ஆடவர்
கன்னி துறை படிந்து ஆடும் கருத்து இலர்
கன்னி துறை படிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னை பிறவி பிறிது இல்லை தானே.

பதப்பொருள்:

கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடித்து) ஆடிய (அதன் படியே நடக்கின்ற) ஆடவர் (சாதகர்கள்)
கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடிப்பதின் மூலம்) கருத்து (பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம்) இலர் (இல்லாதவராக இருக்கின்றார்கள்)
கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடித்து) ஆடும் (அதன் படியே நடந்து பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை பெறுகின்ற) கருத்து (ஞானத்தை தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள்) உண்டேல் (அறிந்து கொண்டு விட்டால்)
பின்னை (இனி பிறக்க வேண்டிய) பிறவி (பிறவி என்று) பிறிது (வேறு எதுவும் அவர்களுக்கு) இல்லை (இல்லாமல்) தானே (போய் விடும்).

விளக்கம்:

அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடக்கின்ற சாதகர்கள் அந்த முறையை கடைபிடிப்பதின் மூலம் பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம் இல்லாதவராக இருக்கின்றார்கள். அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடந்து பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை பெறுகின்ற ஞானத்தை தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள் அறிந்து கொண்டு விட்டால் இனி பிறக்க வேண்டிய பிறவி என்று வேறு எதுவும் அவர்களுக்கு இல்லாமல் போய் விடும்.

பாடல் #1520

பாடல் #1520: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

செய்யன் கரியன் வெளியனற் பச்சைய
னெய்த வுணர்ந்தவ ரெய்து மிறைவனை
மையன் கண்ணறப் பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செயயன கரியன வெளியனற பசசைய
னெயத வுணரநதவ ரெயது மிறைவனை
மையன கணணறப பகடுரி பொரததவெங
கைய னிவனெனறு காதலசெய வீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்தும் இறைவனை
மையன் கண் அற பகடு உரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே.

பதப்பொருள்:

செய்யன் (சிவந்த மேனியில் அருளை வழங்குபவன்) கரியன் (கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன்) வெளியன் (வெள்ளை மேனியில் அண்ட சராசரங்களிலும் ஜோதியாய் பரவி இருக்கின்றவன்) நற் (நன்மையைத் தந்து) பச்சையன் (பச்சை மேனியில் ஆன்மாக்களை காத்து அருளுகின்றவன்)
எய்த (இப்படி பலவிதமான தன்மைகளை) உணர்ந்தவர் (கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு) எய்தும் (அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற) இறைவனை (இறைவனை)
மையன் (கருமை நிறம் கொண்டு) கண் (அகங்காரத்தை) அற (இல்லாமல் செய்து) பகடு (யானையின் தோல் போன்ற ஆணவத்தை) உரி (உரித்து எடுத்து) போர்த்த (தம்மேல் போர்த்திக் கொண்டு) வெம் (நெருப்புக் கணலை)
கையன் (கையில் கொண்டு பிறவிகளை அறுத்து) இவன் (முக்தியை அருளபவன் இவனே) என்று (என்று உணர்ந்து) காதல் (அவன் மேல் பேரன்பு) செய்வீரே (கொள்ளுங்கள்).

விளக்கம்:

சிவந்த மேனியில் அருளை வழங்குபவன் கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன் வெள்ளை மேனியில் அண்ட சராசரங்களிலும் ஜோதியாய் பரவி இருக்கின்றவன் நன்மையைத் தந்து பச்சை மேனியில் ஆன்மாக்களை காத்து அருளுகின்றவன் இப்படி பலவிதமான தன்மைகளை கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற இறைவனை கருமை நிறம் கொண்டு அகங்காரத்தை இல்லாமல் செய்து யானையின் தோல் போன்ற ஆணவத்தை உரித்து எடுத்து தம்மேல் போர்த்திக் கொண்டு நெருப்புக் கணலை கையில் கொண்டு பிறவிகளை அறுத்து முக்தியை அருளபவன் அவனே என்று உணர்ந்து அவன் மேல் பேரன்பு கொள்ளுங்கள்.

பாடல் #1521

பாடல் #1521: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

எய்திய காலங்க ளெத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநாயக மென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் கோட்டது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயதிய காலஙக ளெததனை யாயினுந
தையலுந தானுந தனிநாயக மெனபர
வைகலுந தனனை வணஙகு மவரகடகுக
கையிற கருமஞசெய கொடடது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனி நாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு
கையில் கருமம் செய் கோட்டு அது ஆமே.

பதப்பொருள்:

எய்திய (சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் தாம் எடுத்துக் கொண்ட எந்த சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற) காலங்கள் (காலங்கள்) எத்தனை (எத்தனை எத்தனை வருடங்களாக) ஆயினும் (இருந்தாலும்)
தையலும் (ஒன்றோடு ஒன்று தைப்பது போல பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியும்) தானும் (இறைவனும்) தனி (சாதகர்கள் வணங்கக் கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்து தன்மைக்கும் ஒரே) நாயகம் (தலைவராக இருக்கின்றார்) என்பர் (என்பதை தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள்)
வைகலும் (ஆகவே தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும்) தன்னை (இறைவனை) வணங்கும் (வணங்குகின்ற) அவர்கட்கு (சாதகர்களுக்கு)
கையில் (அவர்களின் கைகளினால்) கருமம் (சாதகங்கள்) செய் (செய்த வழிபாட்டிற்கு) கோட்டு (அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள்) அது (போலவே உடனுக்குடன் பலன்களை) ஆமே (தருபவனாக இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் தாம் எடுத்துக் கொண்ட எந்த சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற காலங்கள் எத்தனை எத்தனை வருடங்களாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்று தைப்பது போல பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியும் இறைவனும் சாதகர்கள் வணங்கக் கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்து தன்மைக்கும் ஒரே தலைவராக இருக்கின்றார் என்பதை தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள். ஆகவே தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் இறைவனை வணங்குகின்ற சாதகர்களுக்கு அவர்களின் கைகளினால் சாதகங்கள் செய்த வழிபாட்டிற்கு அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள் போலவே உடனுக்குடன் பலன்களை தருபவனாக இறைவன் இருக்கின்றான்.

பாடல் #1522

பாடல் #1522: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

கண்டுகொண் டோமிரண்டுந் தொடர்ந் தாங்கொளி
பண்டுகண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும வளர்சடை யண்ணலைக்
கண்டுகொண் டோர்க்கிருள் நீங்கிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடுகொண டொமிரணடுந தொடரந தாஙகொளி
பணடுகண டொயும பரமன பரஞசுடர
வணடுகொண டாடும வளரசடை யணணலைக
கணடுகொண டொரககிருள நீஙகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டு கண்டு ஓயும் பரமன் பரம் சுடர்
வண்டு கொண்டு ஆடும் வளர் சடை அண்ணலை
கண்டு கொண்டோர்க்கு இருள் நீங்கி நின்றானே.

பதப்பொருள்:

கண்டு (கண்டு) கொண்டோம் (கொண்டோம்) இரண்டும் (இறைவியும் இறைவனும் பிண்ணிப் பிணைந்து) தொடர்ந்து (தொடர்ச்சியாக) ஆங்கு (விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற) ஒளி (ஒளியை)
பண்டு (ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியை) கண்டு (கண்டு) ஓயும் (அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால்) பரமன் (பரம்பொருளாகிய இறைவனே) பரம் (அந்த பரம்) சுடர் (ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும்)
வண்டு (வண்டுகள்) கொண்டு (நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு) ஆடும் (களிப்பில் ஆடுவது போல அடியவர்களை தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற) வளர் (நீண்டு வளருகின்ற) சடை (பிண்ணிய சடையை) அண்ணலை (அணிந்து இருக்கின்ற தலைவனும் அடியவனுமாகிய இறைவனை)
கண்டு (தமக்குள் இருக்கும் ஜோதியாக கண்டு) கொண்டோர்க்கு (உணர்ந்து கொண்டவர்களுக்கு) இருள் (மாயையை) நீங்கி (நீங்கி) நின்றானே (இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்).

விளக்கம்:

கண்டு கொண்டோம் இறைவியும் இறைவனும் பிண்ணிப் பிணைந்து தொடர்ச்சியாக விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற ஒளியை. ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியை கண்டு அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால் பரம்பொருளாகிய இறைவனே அந்த பரம் ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும். வண்டுகள் நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு களிப்பில் ஆடுவது போல அடியவர்களை தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற நீண்டு வளருகின்ற பிண்ணிய சடையை அணிந்து இருக்கின்ற தலைவனும் அடியவனுமாகிய இறைவனை தமக்குள் இருக்கும் ஜோதியாக கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு மாயையை நீங்கி இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்.

பாடல் #1516

பாடல் #1516: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருணீக்கி யெண்ணில் பிறவி கடத்தி
யருணீங்கா வண்ணமே யாதி யருளு
மருணீங்கா வானவர் கோனோடுங் கூடிப்
பொருணீங்கா வின்பம் புலம்பயில் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருணீககி யெணணில பிறவி கடததி
யருணீஙகா வணணமெ யாதி யருளு
மருணீஙகா வானவர கொனொடுங கூடிப
பொருணீஙகா வினபம புலமபயில தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோனோடும் கூடி
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே.

பதப்பொருள்:

இருள் (மாயையை) நீக்கி (நீக்கி விட்டு) எண்ணில் (தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத) பிறவி (பிறவிகளை) கடத்தி (அந்தந்த பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும் படி செய்து)
அருள் (இறையருளானது) நீங்கா (எப்போதும் தம்மை விட்டு நீங்கி விடாத) வண்ணமே (படியே) ஆதி (ஆதிப் பரம்பொருள்) அருளும் (அருளி)
மருள் (தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம்) நீங்கா (நீங்காமல் இருக்கின்ற) வானவர் (வானவர்களின்) கோனோடும் (அரசனாக இருக்கின்ற இறைவனோடு) கூடி (எப்போதும் சேர்ந்தே இருக்கும் படி செய்து)
பொருள் (என்ன வேண்டுமென்றாலும் அதை பெற்றுக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருந்து) நீங்கா (நீங்கி விடாத படி) இன்பம் (பேரின்பத்திலேயே) புலம் (இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே) பயில் (தாம் செய்து கொண்டு இருக்கின்ற சாதகத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் படி செய்து) தானே (அருளுகின்றது இறை சக்தி).

விளக்கம்:

மாயையை நீக்கி விட்டு தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத பிறவிகளை அந்தந்த பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும் படி செய்து, இறையருளானது எப்போதும் தம்மை விட்டு நீங்கி விடாத படியே ஆதிப் பரம்பொருள் அருளி, தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம் நீங்காமல் இருக்கின்ற வானவர்களின் அரசனாக இருக்கின்ற இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் படி செய்து, என்ன வேண்டுமென்றாலும் அதை பெற்றுக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருந்து நீங்கி விடாத படி பேரின்பத்திலேயே இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே தாம் செய்து கொண்டு இருக்கின்ற சாதகத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் படி செய்து அருளுகின்றது இறை சக்தி.

பாடல் #1517

பாடல் #1517: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருள்சூ ழறையி லிருந்தது நாடில்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
யருள்சூ ழிறைவனு மம்மையு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருளசூ ழறையி லிருநதது நாடில
பொருளசூழ விளககது புககெரிந தாபபொல
மருளசூழ மயககதது மாமலர நநதி
யருளசூ ழிறைவனு மமமையு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போல்
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.

பதப்பொருள்:

இருள் (மாயையால்) சூழ் (சூழப் பட்டு இருக்கின்ற) அறையில் (அறையாகிய உடம்பிற்குள்) இருந்தது (மறைந்து இருக்கின்ற உண்மை பொருளை) நாடில் (தேடி அடைந்தால்)
பொருள் (இருண்ட அறையில் பொருள்கள்) சூழ் (சுற்றி இருப்பதை) விளக்கு (காண்பிக்கும் விளக்கு) அது (அது போலவே) புக்கு (மூலாதாரத்தில் இருக்கின்ற சோதியை) எரிந்தால் (சாதகத்தின் மூலம் விளக்கு ஏற்றி வைத்தது) போல் (போல எரிய செய்தால்)
மருள் (மாயை) சூழ் (சூழ்ந்த) மயக்கத்து (மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல்) மா (இதயத் தாமரையாகிய மாபெரும்) மலர் (மலரில் வீற்றிருக்கின்ற) நந்தி (குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு)
அருள் (அவரே அருள்) சூழ் (சூழ்ந்து இருக்கின்ற) இறைவனும் (தந்தையாகவும்) அம்மையும் (தாயாகவும்) ஆமே (இருப்பார்).

விளக்கம்:

மாயையால் சூழப் பட்டு இருக்கின்ற அறையாகிய உடம்பிற்குள் மறைந்து இருக்கின்ற உண்மை பொருளை தேடி அடைந்தால், இருண்ட அறையில் தம்மை சுற்றி இருக்கின்ற பொருள்களை காண்பிக்கும் விளக்கைப் போலவே மூலாதாரத்தில் இருக்கின்ற சோதியை சாதகத்தின் மூலம் ஏற்றி வைத்தால், மாயை சூழ்ந்த மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல் இதயத் தாமரையாகிய மாபெரும் மலரில் வீற்றிருக்கின்ற குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு அவரே அருள் சூழ்ந்து இருக்கின்ற தந்தையாகவும் தாயாகவும் இருப்பார்.