பாடல் #1540

பாடல் #1540: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சேய னணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் றுளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானிட ராமவர்
காய மிளைக்குங் கருத்தறியார் களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செய னணியன பிணியிலன பெரநநதி
தூயன றுளககற நொககவல லாரகடகு
மாயன மயககிய மானிட ராமவர
காய மிளைககுங கருததறியார களெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானிடராம் அவர்
காயம் இளைக்கும் கருத்து அறியார்களே.

பதப்பொருள்:

சேயன் (நிலையான மனமில்லாதவர்களுக்கு தூரத்தில் இருந்து அருளுபவனும்) அணியன் (நிலையான மனமுடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும்) பிணி (இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று) இலன் (இல்லாதவனும்) பேர் (பெயரில்) நந்தி (நந்தி என்று அழைக்கப் படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும்)
தூயன் (தூய்மையானவனும்) துளக்கு (ஆகிய இறைவனை அசைவு) அற (இல்லாத மனதுடன்) நோக்க (தமக்குள்ளேயே பார்க்க) வல்லார்கட்கு (முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருப்பான்)
மாயன் (அவ்வாறு பார்க்க முடியாதவர்களுக்கு மாயனாக இருந்து) மயக்கிய (மாயையில் மயக்கிய) மானிடராம் (மனிதர்களாகிய) அவர் (மற்றவர்கள் அனைவரும்)
காயம் (தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற) இளைக்கும் (பற்றை குறைத்து உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்து கொள்ளுகின்ற) கருத்து (முறையை) அறியார்களே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

நிலையான மனமில்லாதவர்களுக்கு தூரத்தில் இருந்து அருளுபவனும் நிலையான மனமுடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும் இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று இல்லாதவனும் பெயரில் நந்தி என்று அழைக்கப் படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும் தூய்மையானவனும் ஆகிய இறைவனை அசைவு இல்லாத மனதுடன் தமக்குள்ளேயே பார்க்க முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருக்கின்றான் இறைவன். அவ்வாறு பார்க்க முடியாமல் இருக்கின்ற மனிதர்களாகிய மற்றவர்கள் அனைவருக்கும் அவன் மாயனாகவே இருந்து மாயையில் மயக்கி வைத்திருப்பதால் அவர்கள் அனைவரும் தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற பற்றை குறைத்து உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்து கொள்ளுகின்ற முறையை அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1541

பாடல் #1541: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழியிரண் டுக்குமோர் வித்தது வான
கழியது பார்மிசை வாழ்த லுறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழியிரண டுககுமொர விததது வான
கழியது பாரமிசை வாழத லுறுதல
சுழியறி வாளனறன சொலவழி முனனின
றழிவறி வாரநெறி நாடகில லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
கழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறிவாளன் தன் சொல் வழி முன் நின்று
அழிவு அறிவார் நெறி நாட கில்லாரே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் அறிந்து செல்பவர்களுக்கும் இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே பக்தி மார்க்கத்திலும் கர்ம மார்க்கத்திலும் செல்பவர்கள்) இரண்டுக்கும் (ஆகிய இரண்டு வழியில் செல்பவர்களுக்கும்) ஓர் (ஒரே) வித்து (மூல விதையாக) அது (அவர்களுக்குள்) ஆன (இருப்பதாகிய)
கழி (சுழுமுனை நாடி) அது (எனும் நடு நாடியின் மூலம் குண்டலினி சக்தியை ஏற்றி சென்று) பார் (இந்த உலகத்தின்) மிசை (மேல்) வாழ்தல் (வாழ்வதும்) உறுதல் (கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு)
சுழி (சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் வீற்றிருக்கும்) அறிவாளன் (அனைத்தும் அறிந்தவனாகிய) தன் (இறைவனே குருவாக இருந்து) சொல் (சொல்லி அருளுகின்ற) வழி (வழியை) முன் (முயற்சி செய்து) நின்று (விட்டுவிடாமல் கடைபிடித்து)
அழிவு (அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்து போவதை) அறிவார் (அறிந்து கொண்டவர்களின்) நெறி (வழி முறையை) நாட (தேடி அடைவதற்கு) கில்லாரே (முயற்சி செய்யாமலேயே ஆசைகளின் வழியே சென்று கொண்டு இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் அறிந்து செல்பவர்களுக்கும் இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே பக்தி மார்க்கத்திலும் கர்ம மார்க்கத்திலும் செல்பவர்கள் ஆகிய இரண்டு வழியில் செல்பவர்களுக்கும் ஒரே மூல விதையாக அவர்களுக்குள் இருப்பதாகிய சுழுமுனை நாடி எனும் நடு நாடியின் மூலம் குண்டலினி சக்தியை ஏற்றி சென்று இந்த உலகத்தின் மேல் வாழ்வதும் கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் வீற்றிருக்கும் அனைத்தும் அறிந்தவனாகிய இறைவனே குருவாக இருந்து சொல்லி அருளுகின்ற வழியை முயற்சி செய்து விட்டுவிடாமல் கடைபிடித்து அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்து போவதை அறிந்து கொண்டவர்களின் வழி முறையை தேடி அடைவதற்கு முயற்சி செய்யாமலேயே ஆசைகளின் வழியே சென்று கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #1542

பாடல் #1542: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

மாதவர்க் கெல்லா மாதேவர் பிரானென்பர்
நாதம தாகி யறியப் படுநந்தி
பேதஞ் செய்யாதே பிரானென்று கைதொழி
லாதியு மன்னெறி யாகிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாதவரக கெலலா மாதெவர பிரானெனபர
நாதம தாகி யறியப படுநநதி
பெதஞ செயயாதெ பிரானெனறு கைதொழி
லாதியு மனனெறி யாகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மா தவர்க்கு எல்லாம் மா தேவர் பிரான் என்பர்
நாதம் அது ஆகி அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே.

பதப்பொருள்:

மா (மாபெரும்) தவர்க்கு (தவங்களை செய்தவர்கள்) எல்லாம் (அனைவரும்) மா (மாபெரும்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரான் (தலைவன்) என்பர் (என்று தமக்குள் உணர்ந்த இறைவனை கூறுவார்கள்)
நாதம் (அந்த இறைவனை சாதகர்கள் தமக்குள் நாத) அது (வடிவமாக) ஆகி (ஆகி) அறியப்படும் (அறியப்படுகின்ற) நந்தி (நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழி காட்டும் போது)
பேதம் (அவனை வேறு யாராகவும் பிரித்து) செய்யாதே (எண்ணிப் பார்க்காமல்) பிரான் (எமது தலைவன் இவனே) என்று (என்று எண்ணிக் கொண்டு) கை (தம்மால் இயன்ற வழியில்) தொழில் (அவனை அடைவதற்கு முயற்சி செய்தால்)
ஆதியும் (ஆதிப் பரம் பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும்) அந் (தாங்கள் முயன்ற அந்த) நெறி (வழியாகவே) ஆகி (ஆகி) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

மாபெரும் தவங்களை செய்தவர்கள் அனைவரும் மாபெரும் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று தமக்குள் உணர்ந்த இறைவனை கூறுவார்கள். அந்த இறைவனை சாதகர்கள் தமக்குள் நாத வடிவமாக ஆகி அறியப்படுகின்ற நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழி காட்டும் போது அவனை வேறு யாராகவும் பிரித்து எண்ணிப் பார்க்காமல் எமது தலைவன் இவனே என்று எண்ணிக் கொண்டு தம்மால் இயன்ற வழியில் அவனை அடைவதற்கு முயற்சி செய்தால் ஆதிப் பரம் பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும் தாங்கள் முயன்ற அந்த வழியாகவே ஆகி நிற்கின்றான்.

பாடல் #1543

பாடல் #1543: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அரனெறி யப்பனை யாதிப் பிரானை
யுரநெறி யாகிவந் துள்ளம் புகுந்தான்
பரனெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகை தூரமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அரனெறி யபபனை யாதிப பிரானை
யுரநெறி யாகிவந துளளம புகுநதான
பரனெறி தெடிய பததரகள சிததம
பரனறி யாவிடிற பலவகை தூரமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரன் நெறி அப்பனை ஆதி பிரானை
உர நெறி ஆகி வந்து உள்ளம் புகுந்தான்
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியா விடில் பல் வகை தூரமே.

பதப்பொருள்:

அரன் (தங்களை காத்து அருளுகின்ற) நெறி (வழி முறையில்) அப்பனை (அப்பனாகவும்) ஆதி (ஆதிப் பரம்பொருளாகவும்) பிரானை (அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே)
உர (தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து முயற்சி செய்ய வைக்கின்ற) நெறி (வழி முறைகளாகவே) ஆகி (ஆகி) வந்து (வந்து) உள்ளம் (தங்களின் உள்ளத்திற்குள்) புகுந்தான் (புகுந்து வீற்றிருப்பான்)
பரன் (பரம் பொருளை அடைகின்ற) நெறி (வழி முறைகளை) தேடிய (தேடி அலைகின்ற) பத்தர்கள் (பக்தர்கள்) சித்தம் (தங்களின் எண்ணத்தினால்)
பரன் (அந்தப் பரம் பொருளை) அறியா (அறிந்து கொள்ளாமல்) விடில் (போய் விட்டால்) பல் (இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத) வகை (அளவிற்கு) தூரமே (தூரமாகவே இருப்பான்).

விளக்கம்:

தங்களை காத்து அருளுகின்ற வழி முறையில் அப்பனாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து முயற்சி செய்ய வைக்கின்ற வழி முறைகளாகவே ஆகி வந்து தங்களின் உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருப்பான். பரம் பொருளை அடைகின்ற வழி முறைகளை தேடி அலைகின்ற பக்தர்கள் தங்களின் எண்ணத்தினால் அந்தப் பரம் பொருளை அறிந்து கொள்ளாமல் போய் விட்டால் இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத அளவிற்கு தூரமாகவே இருப்பான்.

பாடல் #1527

பாடல் #1527: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இருவினை நேரொப்பி லின்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருவினை நெரொபபி லினனருட சததி
குருவென வநது குணமபல நீககித
தருமெனு ஞானததாற றனசெய லறறால
திரிமலந தீர்நது சிவனவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரு வினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.

பதப்பொருள்:

இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) நேர் (சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள்) ஒப்பு (தனக்கு ஒப்பானது என்று) இல் (ஒன்றும் இல்லாதவளாகிய) இன் (இனிமையான) அருள் (பேரருளைக் கொண்ட) சத்தி (இறைவியானவள்)
குரு (குரு) என (எனும் நிலையில்) வந்து (வந்து) குணம் (சாதகருக்குள் நன்மை தீமை ஆகிய தன்மைகள்) பல (பல விதமாக இருப்பவை அனைத்தையும்) நீக்கி (நீக்கி விட்டு)
தரும் (அவளது பெரும் கருணையினால் தரப்படுவது) எனும் (என்று அறியப்படுகின்ற) ஞானத்தால் (பேரறிவு ஞானத்தால்) தன் (சாதகர் தன்னுடைய) செயல் (செயல் என்று ஒன்றும்) அற்றால் (இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால்)
திரி (சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான) மலம் (மலங்களும்) தீர்ந்து (நீங்கப் பெற்று) சிவன் (சிவம் எனும் பரம் பொருளாகவே) அவன் (சாதகரும்) ஆமே (ஆகி விடுவார்).

விளக்கம்:

நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள் தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள் குரு எனும் நிலையில் வந்து சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற அனைத்து தன்மைகளையும் நீக்கி விட்டு, அவளது பெரும் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தை தந்து அருளுவாள். அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால் சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று சிவம் எனும் பரம் பொருளாகவே சாதகரும் ஆகி விடுவார்.

பாடல் #1528

பாடல் #1528: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இரவும் பகலு மிறந்த விடத்தே
குரவன் செய்கின்ற குழலியை யுன்ன
யரவஞ் செய்யாம லவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இரவும பகலு மிறநத விடததெ
குரவன செயகினற குழலியை யுனன
யரவஞ செயயாம லவளுடன செரப
பரிவொனறி லாளும பராபரை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவன் செய்கின்ற குழலியை உன்ன
அரவம் செய்யாமல் அவளுடன் சேர
பரிவு ஒன்றில் ஆளும் பரா பரை தானே.

பதப்பொருள்:

இரவும் (இரவு) பகலும் (பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும்) இறந்த (உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற) இடத்தே (சாதகரின் உள்ளத்தில்)
குரவன் (குரவம் எனும் மலரை) செய்கின்ற (பின்னியிருக்கின்ற) குழலியை (கூந்தலைக் கொண்ட இறைவியை) உன்ன (அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே)
அரவம் (எந்த விதமான ஆரவாரமும்) செய்யாமல் (செய்யாமல்) அவளுடன் (அவளோடு) சேர (சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால்)
பரிவு (தனது மாபெரும் கருணை எனும்) ஒன்றில் (அருளினால்) ஆளும் (சாதகரை ஆட்கொண்டு அருளுவாள்) பரா (பராவாகிய இறைவனும்) பரை (பரையாகிய இறைவியும்) தானே (சேர்ந்து இருக்கும் அருள் சக்தி).

விளக்கம்:

இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற சாதகரின் உள்ளத்தில் குரவம் எனும் மலரை பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால் தனது மாபெரும் கருணை எனும் அருளினால் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள் பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் அருள் சக்தி.

பாடல் #1529

பாடல் #1529: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்
சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்
தூனை விளக்கி யுடனிருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாலை விளககு மதியமு ஞாயிறுஞ
சால விளககுந தனிசசுட ரணணலும
ஞாலம விளககிய நாதனென னுளபுகுந
தூனை விளககி யுடனிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனி சுடர் அண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே.

பதப்பொருள்:

மாலை (அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற) விளக்கும் (விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும்) மதியமும் (இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும்) ஞாயிறும் (பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும்)
சால (இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற) விளக்கும் (தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும்) தனி (தனிப் பெரும்) சுடர் (சுடராக இருக்கின்ற) அண்ணலும் (இறைவனின் ஜோதி உருவமாகவே பார்த்து உணர்ந்தால்)
ஞாலம் (உலகத்தை) விளக்கிய (விளக்கி அருளுகின்ற) நாதன் (தலைவனாகிய இறைவன்) என் (எமது) உள் (உடலுக்குள்) புகுந்து (புகுந்து வந்து)
ஊனை (எமது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும்) விளக்கி (விளக்கி யாம் அறியும் படி செய்து) உடன் (எம்முடன் எப்போதும்) இருந்தானே (இருப்பான்).

விளக்கம்:

அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும், இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால், உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து, அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும் விளக்கி அவர் அறியும் படி செய்து அவருடன் எப்போதும் இருப்பான்.

பாடல் #1523

பாடல் #1523: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

கன்னிக்கும் பெண்பிள்ளை யப்பனார் தோட்டத்தி
லெண்ணிக்கு மேழேழ் பிறவி யுணர்விக்கு
முண்ணிற்ப தெல்லா மொழிவ முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கனனிககும பெணபிளளை யபபனார தொடடததி
லெணணிககு மெழெழ பிறவி யுணரவிககு
முணணிறப தெலலா மொழிவ முதலவனைக
கணணுறறு நினற கனியது வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கன்னிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிவது முதல்வனை
கண் உற்று நின்ற கனி அது ஆகுமே.

பதப்பொருள்:

கன்னிக்கும் (எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற) பெண் (பெண் தன்மை கொண்ட) பிள்ளை (பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு) அப்பனார் (அப்பாவாக / தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய) தோட்டத்தில் (அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும்)
எண்ணிக்கும் (எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற பிறவிகளை) ஏழ் (ஏழும்) ஏழ் (ஏழும் கூட்டி வரும் மொத்தம் பதினான்கு உலகங்களிலும்) பிறவி (பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும்) உணர்விக்கும் (சாதகருக்கு உணர வைத்து)
உள் (சாதகருக்குள்) நிற்பது (நிற்கின்ற) எல்லாம் (மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும்) ஒழிவது (அழிய வைக்கின்ற) முதல்வனை (ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து)
கண் (சாதகரின் கண்ணிற்கு) உற்று (உள்ளே) நின்ற (நின்று) கனி (அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக) அது (அந்த அருள் சக்தியே) ஆகுமே (இருக்கின்றாள்).

விளக்கம்:

எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற பெண் தன்மை கொண்ட பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும் எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற மொத்தம் பதினான்கு உலகங்களிலும் பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும் சாதகருக்கு உணர வைத்து, சாதகருக்குள் நிற்கின்ற மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும் அழிய வைக்கின்ற ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து சாதகரின் கண்ணிற்கு உள்ளே நின்று அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக அந்த அருள் சக்தியே இருக்கின்றாள்.

பாடல் #1524

பாடல் #1524: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கு
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறபபை யறுககும பெருநதவ நலகு
மறபபை யறுககும வழிபட வைககுங
குறபபெண குவிமுலைக கொமள வலலி
சிறபபொடு பூசனை செயயநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறப்பை அறுக்கும் பெரும் தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழி பட வைக்கும்
குற பெண் குவி முலை கோமள வல்லி
சிறப்போடு பூசனை செய்ய நின்றாளே.

பதப்பொருள்:

பிறப்பை (இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும்) அறுக்கும் (அறுத்து விடக் கூடிய) பெரும் (மிகப் பெரும்) தவம் (தவத்தை) நல்கும் (அருளுபவளாகவும்)
மறப்பை (இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை) அறுக்கும் (அறுக்கின்ற) வழி (வழியில்) பட (சாதகர்களை செல்ல) வைக்கும் (வைக்கின்றவளாகவும்)
குற (அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும்) பெண் (அருளுகின்ற சக்தியாகவும்) குவி (குவிந்த) முலை (மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும்) கோமள (அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன்) வல்லி (என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள்)
சிறப்போடு (சிறப்பு பொருந்தியவளாக) பூசனை (அவர்களை பூஜைகள்) செய்ய (செய்ய வைத்துக் கொண்டே) நின்றாளே (அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்).

விளக்கம்:

இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும் அறுத்து விடக் கூடிய மிகப் பெரும் தவத்தை அருளுபவளாகவும் இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை அறுக்கின்ற வழியில் சாதகர்களை செல்ல வைக்கின்றவளாகவும் அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும் அருளுகின்ற சக்தியாகவும் குவிந்த மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும் அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன் என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள் சிறப்பு பொருந்தியவளாக அவர்களை பூஜைகள் செய்ய வைத்துக் கொண்டே அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்.

பாடல் #1525

பாடல் #1525: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

தாங்குமின் னெட்டுத் திசைக்குந் தலைமகள்
பூங்கமழ் பொய்கைப் புரிகுழ லாளோடு
மாங்கது சேரு மறிவுடை யாளர்க்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாஙகுமின னெடடுத திசைககுந தலைமகள
பூஙகமழ பொயகைப புரிகுழ லாளொடு
மாஙகது செரு மறிவுடை யாளரககுத
தூஙகொளி நீலந தொடரதலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாங்குமின் எட்டு திசைக்கும் தலை மகள்
பூம் கமழ் பொய்கை புரி குழலாளோடும்
ஆங்கு அது சேரும் அறிவு உடையாளர்க்கு
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே.

பதப்பொருள்:

தாங்குமின் (சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால்) எட்டு (எட்டு விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) தலை (தலைவியாக) மகள் (வீற்றிருக்கின்ற இறைவி)
பூம் (நறுமணமிக்க மலரில் / சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில்) கமழ் (இருந்து வருகின்ற நறுமணம் பரந்து விரிகின்ற / இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற) பொய்கை (ஊற்று பெருகும் குளத்தில் / அமிழ்தம் ஊறி பெருகுவதில்) புரி (அருள் புரிகின்ற) குழலாளோடும் (கூந்தலைக் கொண்ட இறைவியோடு)
ஆங்கு (அவள் இருக்கின்ற குளத்தில் / சகஸ்ரதளத்தில்) அது (தமது குண்டலினி சக்தியை) சேரும் (கொண்டு சேர்க்கின்ற) அறிவு (ஞானத்தை) உடையாளர்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
தூங்கு (இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த) ஒளி (ஜோதியாகிய) நீலம் (நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது) தொடர்தலும் (சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து) ஆமே (கொண்டே இருக்கும்).

விளக்கம்:

எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால் சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற அமிழ்தம் ஊறி பெருகுவதில் அருள் புரிகின்ற கூந்தலைக் கொண்ட இறைவியோடு அவள் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை கொண்டு சேர்க்கின்ற ஞானத்தை அறிந்து கொண்டவர்களுக்கு இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த ஜோதியாகிய நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.