பாடல் #1371

பாடல் #1371: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

இருந்தன சத்தியறு பத்து நால்வர்
யிருந்தனர் கன்னிக ளெண்வகை யெண்ம
ரிருந்தனர் சூழ வெதிர் சக்கரமா
யிருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநதன சததியறு பதது நாலவர
யிருநதனர கனனிக ளெணவகை யெணம
ரிருநதனர சூழ வெதிர சககரமா
யிருநத கரமிரு விலலமபு கொணடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்தன சத்தி அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர் சக்கரம் ஆய்
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே.

பதப்பொருள்:

இருந்தன (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியின் அம்சமாக இருக்கின்ற) சத்தி (சக்திகள்) அறுபத்து (மொத்தம் அறுபத்து) நால்வர் (நான்கு பேர் இருக்கின்றார்கள்)
இருந்தனர் (இருக்கின்ற இந்த அறுபத்து நான்கு) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற சக்திகளும்) எண் (எட்டு) வகை (வகையாகவும்) எண்மர் (வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்து நான்கு பேர் இருக்கின்றார்கள்)
இருந்தனர் (இருக்கின்ற இந்த அறுபத்து நான்கு சக்திகளும்) சூழ (நவாக்கிரி சக்கிரத்தை சூழ்ந்தும்) எதிர் (அதற்கு நடுவில் வீற்றிருக்கும் இறைவிக்கு எதிர் புறமாகவும்) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தின் பாதுகாப்பு வளையம்) ஆய் (ஆகவே இருக்கின்றார்கள்)
இருந்த (இப்படி நவாக்கிரி சக்கரத்தை சூழ்ந்து பாதுகாப்பு வளையமாக இருக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும்) கரம் (தமது கைகள்) இரு (இரண்டிலும்) வில் (வில்லும்) அம்பு (அம்பும்) கொண்டே (ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1370 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியின் அம்சமாக அறுபத்து நான்கு சக்திகள் இருக்கின்றார்கள். இந்த அறுபத்து நான்கு சக்திகளும் என்றும் இளமையுடன் எட்டு வகையாகவும் வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்து நான்கு பேர் இருக்கின்றார்கள். இந்த அறுபத்து நான்கு சக்திகளும் நவாக்கிரி சக்கிரத்தின் நடுவில் வீற்றிருக்கும் இறைவிக்கு எதிர் புறமாகவும் சக்கரத்தை சூழ்ந்தும் பாதுகாப்பு வளையம் போல இருக்கின்றார்கள். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சூழ்ந்து பாதுகாப்பு வளையமாக இருக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் தமது இரண்டு கைகளிலும் வில்லும் அம்பும் ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #1372

பாடல் #1372: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்
கண்டவிம் மூர்த்தங் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவை
யுண்டங் கொருத்தி யுணர்ந்து கொள்வார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொணட கனகங குளைமுடி யாடையாயக
கணடவிம மூரததங கனலதிரு மெனியாயப
பணடமர சொதிப படரித ளானவை
யுணடங கொருததி யுணரநது கொளவாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொண்ட கனகம் குழை முடி ஆடை ஆய்
கண்ட இம் மூர்த்தம் கனல் திரு மேனி ஆய்
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவை
உண்டு அங்கு ஒருத்தி உணர்ந்து கொள்வார்க்கே.

பதப்பொருள்:

கொண்ட (தங்களின் கரங்களில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இருக்கின்ற சக்திகள் அனைவரும்) கனகம் (தங்க ஆபரணங்களோடும்) குழை (வளைந்து சுருண்டு நீண்டு இருக்கும்) முடி (தலை முடியே) ஆடை (உடுத்தி இருக்கும் ஆடை) ஆய் (ஆகவும்)
கண்ட (சாதகர்கள் தமக்குள் கண்டு அறிந்து கொண்ட) இம் (இந்த) மூர்த்தம் (சக்திகளின் உருவங்கள் அனைத்தும்) கனல் (அக்னிக் கனலே) திரு (தங்களின் திரு) மேனி (உருவம்) ஆய் (ஆக இருக்கின்றார்கள்)
பண்டு (அவர்களின் அக்னிக் கனலாகிய உருவமானது ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாக கலந்து இருக்கும் இறைவியாகவே) அமர் (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் வீற்றிருந்து) சோதி (ஜோதி வடிவில்) படர் (சாதகருக்குள் முழுவதும் படர்ந்து) இதழ் (சக்திமயங்களாக) ஆனவை (இருக்கின்றாள்)
உண்டு (இப்படி சாதகருக்குள் இருக்கின்ற அனைத்து சக்திமயங்களும்) அங்கு (சக்கரத்தின் நடுவில்) ஒருத்தி (வீற்றிருக்கின்ற இறைவி ஒருத்தியில் இருந்தே பரவி இருக்கின்றது என்பதை) உணர்ந்து (தமக்குள் இருக்கும் இறைவியை உணர்ந்து) கொள்வார்க்கே (கொண்ட சாதகர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1371 இல் உள்ளபடி தங்களின் கரங்களில் ஆயுதங்களுடன் நவாக்கிரி சக்கரத்தை சூழ்ந்து கொண்டு இருக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் தங்க ஆபரணங்களோடும் வளைந்து சுருண்டு நீண்டு இருக்கும் தலை முடியே அவர்கள் உடுத்தி இருக்கும் ஆடையாகவும் அக்னிக் கனலே தங்களின் திரு மேனியாகவும் இருக்கின்றார்கள். இதை தமக்குள் கண்டு கொண்ட சாதகர்கள் அந்த அக்னிக் கனலாகிய உருவமானது ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவத்தோடு சரிசமமாக கலந்து இருக்கும் இறைவியாகவே தமக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தின் நடுவில் ஜோதி வடிவில் வீற்றிருக்கின்றாள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இப்படி தமக்குள் வீற்றிருக்கின்ற இறைவியை உணர்ந்து கொள்ள முடிந்த சாதகர்களால் அவள் ஒருவளே தமக்குள் முழுவதும் சக்திமயங்களாக படர்ந்து இருக்கின்றாள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1373

பாடல் #1373: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

உணர்ந்திருந் துள்ளே யொருத்தியை நோக்கிற்
கலந்திருந் தங்கே கருணை பொழியு
மலர்ந்தெழு மோசை யொளியது காணுந்
தளர்ந்தெழு சக்கரந் தான்றரு வாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரநதிருந துளளெ யொருததியை நொககிற
கலநதிருந தஙகெ கருணை பொழியு
மலரநதெழு மொசை யொளியது காணுந
தழரநதெழு சககரந தானறரு வாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து அங்கே கருணை பொழியும்
மலர்ந்து எழும் ஓசை ஒளி அது காணும்
தளர்ந்து எழு சக்கரம் தான் தருவாளே.

பதப்பொருள்:

உணர்ந்து (சாதகர் தமக்குள் உணர்ந்து) இருந்து (தியானத்தில் வீற்றிருக்கும் போது) உள்ளே (அவருக்குள்ளே வீற்றிருக்கும்) ஒருத்தியை (இறைவியை) நோக்கில் (மனதிற்குள் கண்டு கொண்டே இருந்தால்)
கலந்து (சாதகரோடு ஒன்றாக கலந்து) இருந்து (அவருக்குள் வீற்றிருந்து) அங்கே (அங்கிருந்தே) கருணை (சாதகருக்கு பேரருள் கருணையை) பொழியும் (வழங்கும் இறைவியானவள்)
மலர்ந்து (சாதகருக்குள்ளிருந்து பூவைப் போல மென்மையாக மலர்ந்து) எழும் (எழுகின்ற) ஓசை (இறைவனது அம்சமாகிய சத்தத்தையும்) ஒளி (இறைவியது அம்சமாகிய வெளிச்சத்தையும்) அது (உருவாக்கி) காணும் (அவர் காணும் படி அருளுவாள்)
தளர்ந்து (அதன் பிறகு அந்த வெளிச்சமும் சத்தமும் சாதகத்திற்கு ஏற்றவாறு இணங்கி) எழு (சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தோடு சேர்ந்து செயல்படும்படி) தான் (இறைவி) தருவாளே (அருளுவாள்).

விளக்கம்:

பாடல் #1372 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் வீற்றிருக்கின்ற இறைவியை உணர்ந்து கொண்ட பிறகு அவளையே மனதிற்குள் கண்டு கொண்டே தியானத்தில் வீற்று இருந்தால் இறைவியும் சாதகரோடு ஒன்றாக கலந்திருந்து அங்கிருந்தே சாதகருக்கு பேரருள் கருணையை வழங்குவாள். அதன் பிறகு சாதகருக்குள்ளிருந்து பூவைப் போல மென்மையாக மலர்ந்து எழுகின்ற இறைவனது அம்சமாகிய சத்தத்தையும் இறைவியது அம்சமாகிய வெளிச்சத்தையும் உருவாக்கி அவர் காணும் படி அருளுவாள். அதன் பிறகு அந்த வெளிச்சமும் சத்தமும் சாதகத்திற்கு ஏற்றவாறு இணங்கி சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற நவாக்கிரி சக்கரத்தோடு சேர்ந்து செயல்படும்படி இறைவி அருளுவாள்.

பாடல் #1374

பாடல் #1374: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தரும் வழியாகிய தத்துவ ஞானங்
குருவழி யாயங் குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை யறுத்துப்
பெருவழி யாகிய பேரொளி காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரும வழியாகிய தததுவ ஞானங
குருவழி யாயங குணஙகழில நினறு
கருவழி யாய கணககை யறுததுப
பெருவழி யாகிய பெரொளி காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரும் வழி ஆகிய தத்துவ ஞானம்
குரு வழி ஆய் அங்கு குணங்களில் நின்று
கரு வழி ஆய கணக்கை அறுத்து
பெரு வழி ஆகிய பேரொளி காணே.

பதப்பொருள்:

தரும் (இறைவி அருளுகின்ற) வழி (சாதகருக்கான வழி) ஆகிய (ஆக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமும்) தத்துவ (இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ) ஞானம் (ஞானத்தை கொடுத்து)
குரு (குருவாக வீற்றிருந்து) வழி (சாதகருக்கான வழி) ஆய் (ஆகவே) அங்கு (அவருக்குள்ளிருக்கும்) குணங்களில் (தன்மைகளுக்கு ஏற்றபடியே) நின்று (நின்று காட்டி அருளுவாள்)
கரு (அதன் பிறகு சாதகரின் முதல் பிறவியில் இருந்தே தொடர்ந்து வரும் கரு) வழி (வழியாகிய பிறவிகளுக்கும்) ஆய (இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும்) கணக்கை (காரணமாகிய கர்ம கணக்குகளை) அறுத்து (நீக்கி)
பெரு (முக்தி அடைவதற்கான பெரிய) வழி (வழியாக) ஆகிய (இருக்கின்ற) பேரொளி (இறைவனின் பேரொளி) காணே (உருவத்தை காணும் படி செய்து அருளவாள்).

விளக்கம்:

பாடல் #1373 இல் உள்ளபடி இறைவி அருளால் சாதகருக்குள்ளிருந்து மலர்ந்து எழுகின்ற சத்தமும் வெளிச்சமும் சாதகருக்கான வழியாக இருந்து இறைவனை அடைவதற்கு வேண்டிய தத்துவ ஞானத்தை கொடுக்கின்றாள். அவளே குருவாக வீற்றிருந்து சாதகருக்குள் இருக்கும் தன்மைகளுக்கு ஏற்றபடியே நின்று காட்டி அருளுகின்றாள். அதன் பிறகு சாதகரின் முதல் பிறவியில் இருந்தே தொடர்ந்து வரும் கரு வழியாகிய பிறவிகளுக்கும் இனிமேல் எடுக்க வேண்டிய பிறவிகளுக்கும் காரணமாகிய கர்ம கணக்குகளை நீக்கி முக்தி அடைவதற்கான பெரிய வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவத்தை காணும் படி செய்து அருள்வாள்.