பாடல் #366

பாடல் #366: இரண்டாம் தந்திரம் – 5. பிரளயம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்தியைக்கொண் டானே.

விளக்கம்:

இறைவனை ஏற்காமல் அவரை குற்றப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி நடக்கும் உயிர்களை பிரளய காலத்தில் மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்ற தன் மேல் உண்மையான அன்பை வைக்க முடியாதபடி அந்த உயிர்களின் தலையின் உச்சியில் இருந்து ஆட்சி செய்யும் ஆணவத்தை அழித்து அவர்களையும் ஆட்கொண்டு விண்ணுலகத் தேவர்களும் குற்றம் கூற முடியாதபடி புதிய உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கினான்.

உட்கருத்து: பிரளய காலத்தில் தம் மீது அன்புகொண்ட அடியவர்களை மட்டுமே காப்பாற்றுவான் என்று இல்லாமல் தம்மை பழிக்கும் உயிர்களையும் காப்பாற்றும் பெரும் கருணை கொண்டவன் இறைவன். பிரளய காலத்தில் தம் மீது அன்பு கொள்ளாத பிற உயிர்களின் தலையில் இருக்கும் அகங்காரம் ஆணவத்தை அழித்து அந்த உயிர்களையும் ஆட்கொண்டு அருளும் இறைவன் பிறகு புதியதாக உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கி அருளுகின்றான்.

Image result for சதாசிவ மூர்த்தி

பாடல் #365

பாடல் #365: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

விளக்கம்:

பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவர் திகைத்துப் போனார்கள். அங்கு பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தியை அனைத்தையும் படைத்து சுயம்புவாய் தோன்றியவனே என்று இறைவனை மனதில் வைத்து வழிபட்ட உலகத்தில் உள்ள உயிர்களுக்காக கடல்நீர் வெள்ளம் கடலோசை மேலும் அதிகரிக்காமல் இருக்க அந்த நீரில் அக்னியை உண்டாக்கினார் இறைவன்.

உட்கருத்து: பிரளயத்தை ஏற்படுத்தி அனைத்தையும் அழித்த இறைவன் தன்னை வழிபட்டு சரணடைந்த உயிர்களை காப்பாற்றினார்.

Related image

பாடல் #364

பாடல் #364: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்துஅறி யாரே.

விளக்கம்

உலகம் முழுவதும் நிறைந்து இருந்த குளிர்ந்த பிரளய கடல் நீர் வடிந்தது. வானகத்தவர்களும் தேவர்களும் கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் சிவத்தைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். கடல்நீரை விண்ணகம் வரை பரவச் செய்த இறைவனும் கடைக்கண் பார்வையால் அருள் புரிந்து பேரொளியாய் எழுந்தருளினன். இத்தகைய பிரளயத்தை ஏற்படுத்தி பின்பு அனைவருக்கும் அருள் செய்த இறைவன் திருவுள்ளத்தை யாரும் அறியவில்லை.

Related image

பாடல் #363

பாடல் #363: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்
டுலகார் அழலைக்கண் டுள்வீழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

விளக்கம்

பாடல் #362ல் உள்ளபடி பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தி கடலை உடுறுவி கீழையும் வானத்தை ஊடுறுவி மேலேயும் இருந்து வானவர்கள் அனைவருக்கும் தலைவன் என்னும் பெயர் பெற்று உலகம் முழுவதும் நிறைந்த ஊழித்தீயில் உலக மக்கள் நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு யாரும் அஞ்சாதீர்கள் என்று கூறி அருள் செய்தான்.

Related image

பாடல் #362

பாடல் #362: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.

விளக்கம்:

பிரளய வெள்ளத்தில் பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. உலகெங்கும் படைத்தல் தொழில் நின்றது. அந்நேரத்தில் பிரமனும் திருமாலும் தங்கள் கடமையை செய்யாமல் யாமே தலைவர் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்டு கூறிக்கொண்டனர். சதாசிவமூர்த்தியான இறைவன் பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சதாசிவமூர்த்தியின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் தலைவன் யார் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சதாசிவமூர்த்தி நெருப்பு மலையாக நின்று அருள் செய்தார்.

Related image

பாடல் #361

பாடல் #361: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.

விளக்கம்:

இறையருள் இல்லாத தக்கன் செய்த வேள்வியில் கலந்து கொண்டு பின்பு இறைவனின் கோபத்திற்குள்ளாகி இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு அனைத்தும் இறைவனே என்று புரிந்துகொண்ட தேவர்கள் இப்படி ஒரு பிழை செய்துவிட்டோமே என்று கலங்கி இருக்கும் போது தேவர்களே நீங்கள் கலங்க வேண்டாம். இறைவன் மேல் உண்மையான அன்பு வைத்தவர்கள் அனைவருமே சென்று சேருமிடம் அவரது திருவடிகளே. தக்கனது வேள்வியை அழித்தது அவனது அறியாமையை நீக்கி அவனை ஆட்கொள்ள வேண்டும் என்ற கருணையினால்தான். தூய்மையான வாக்கை உடைய இறைவன் எது செய்தாலும் அது உயிர்களின் நன்மைக்கே ஆகும்.

உட்கருத்து: உயிர்கள் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்து இறைவனை வேண்டி இறையருளோடு பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவை தோல்வியடைவதைக் கண்டு மனம் கலங்க வேண்டாம். அவை தோல்வியடைவதும் உயிர்கள் மீது இருக்கும் இறைவனது மாபெரும் கருணையினால்தான். அதற்கும் பின்னால் இறைவன் அடியவருக்கு வழங்கும் அருள் இருக்கும்.

Image result for சதாசிவ மூர்த்தி

பாடல் #360

பாடல் #360: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

விளக்கம்:

இறைவனின் அருள் வேண்டி வேள்விகள் அமைத்து தம்மை வணங்கும் நல்லவர்கள் அனைவரும் அனைத்துவித நலன்களும் பெற்று வாழ தயைகூர்ந்து அருள் புரியுமாறு பலகோடி தேவர்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்ள யாராலும் அழிக்க முடியாத அசுரர்களையும் அவர்களின் முப்புரங்களையும் வில்லேந்தி அம்புகொண்டு எரித்த எம்பெருமானும் கருணைகொண்டு உயிர்களை வாட்டும் பல கொடிய அசுரர்களையும் அழிக்கும் வலிமையை அவர்களுக்கு வழங்கி அருளினான்.

உட்கருத்து: உயிர்கள் எந்த செயலைச் செய்தாலும், மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றும் ஒன்றாக வைத்து இறைவனை மட்டுமே நினைத்து அவனது திருவருளை கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு இறை அருள் பெற்று செய்தால் எத்தகைய வேலையையும் செய்யத்தடையாக இருப்பவற்றை அழிக்கும் சக்தியை இறைவன் உயிர்களுக்கு அருளுவான்.

Related image

பாடல் #359

பாடல் #359: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

விளக்கம்:

இறைவனுக்காக மந்திரங்களை செபித்து இறையருள் பெற்ற தேவர்கள் தக்கனின் யாகத்தில் இறையருள் இல்லாத மந்திரங்களை சொல்லி தங்களுக்குப் பெரும் பொருள் கிடைக்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்து செய்து குவித்த மந்திரங்கள் இறைவனது அருள் பெறாமல் செய்யப்பட்டமையால் அவர்களையே கொல்லும் கொடிய மந்திரங்களாக மாறிவிட்டன.

உட்கருத்து: உயிர்கள் வேள்வி போல் செய்யும் செயல்கள் யாவும் இறையருளுடன் செய்தால் அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் உலக ஆசைக்காக இறையருள் இல்லாமல் செய்யும் செயல்கள் யாவும் அவர்களுக்கு தீமைகளையே செய்யும்.

பாடல் #358

பாடல் #358: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

விளக்கம்:

திருமால், பிரம்மன், தக்கன், சூரியன் அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனாகிய இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள் அவற்றைத் தாங்கும் தோள்கள் இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதனால் இறைவனின் சினத்தினால் அழிந்தது. பிறகு தமது பிழை உணர்ந்து இறைவனை வேண்டி அவற்றினைத் திரும்ப நலமுடன் பெற்றார்கள்.

உட்கருத்து: பாடல் #357ல் உள்ள உட்கருத்தின் படி அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள் இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோக, கர்ம, யோகம் போன்ற மார்கங்களை மீண்டும் இறையருளால் செய்து இறைவனை அடையலாம்.

Related image

பாடல் #357

பாடல் #357: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.

விளக்கம்:

பாடல் #356 ல் உள்ளபடி அனைவரின் பிழைகளை மன்னித்து எங்கும் ஒளிமயமாகி வியாபித்து இருக்கும் சிவபெருமானை வானவர்கள் வணங்க அழுக்குகளையெல்லாம் எரித்து எதையும் தூய்மையாக்கும் அக்கினி தக்கன் யாகத்தில் கலந்து கொண்டு தூய்மை கெட்டதால் தன் குற்றம் நீங்க சிவனின் திருவடிகளை பற்றிக்கொள்ள சிவனும் அன்போடு அக்னிக்கு அருள் செய்ய ஓடிவந்தான்.

உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு அந்த தவறில் அணுவாய் கலந்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினைத்து உள்ளத்தில் பற்றிக்கொள்ள இறைவன் அன்போடு அவர்களுக்கு அருள் செய்ய ஒடிவருவான்.

Related image