பாடல் #437

பாடல் #437: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

ஒளித்துவைத் தென்னுள் ளுறவுணர்ந் தீசன்
வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.

விளக்கம்:

இறைவன் எமக்குள் மறைத்திருந்ததை அவனது திருவருளால் எமது உள்ளத்துக்குள்ளேயே உணர்ந்து வேண்டிட அவன் யாம் இருந்த இடத்திலேயே வெளிப்பட்டு நின்று அருள் புரிந்தான். எப்போதுமே தெகிட்டி விடாத பேரின்பத்தை வழங்கும் பெருமைக்குரிய இறைவனை உயிரின் உள்ளத்துக்குள் ஒளிந்து கொண்டு இருந்தாலும் உண்மையான அன்போடு உள்ளம் உருக வேண்டினால் தமக்கு முன்னால் வந்து நின்று அருள் புரிவதை உணரலாம்.

பாடல் #438

பாடல் #438: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்துஇருந் தானே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிரின் உள்ளத்துக்குள்ளும் தாமாகவே நிறைந்து நின்று மாயையால் மறைக்கும் மகேசுவரன். அழிக்கவும் காக்கவும் சென்று உலகங்களிலெல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும் உருத்திரன் திருமால். நன்மைக்காக படைப்புகளைச் செய்து கொண்டு தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரம்மன் ஆகிய இவர்கள் அனைவரும் தாமாகவே இருந்தும் அவர்கள் புரியும் தொழில்களில் ஒன்றாகவே இணைந்து இருக்கின்றான் இறைவன்.

குறிப்பு: இந்தப் பாடலும் #403 ஆவது பாடலும் ஒன்று போல இருந்தாலும் இப்பாடலில் சிறிது வார்த்தைகளை மாற்றி இறைவனது மாயா காரியங்களைச் சொல்லி அருளுகின்றார் திருமூலர். பாடல் #403 இல் அனைத்தையும் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் மூவர்களாக இருக்கும் இறைவனே இந்தப் பாடலில் எங்கும் நிறைந்து மறைக்கவும் அனைத்து உயிர்களுக்கும் அருளவும் செய்து ஐவராக இருக்கின்றான் என்பதையும் ஐவராக இருந்து அவன் புரியும் இந்தத் தொழில்களை உயிர்களின் மேல் கொண்ட கருணையினால் மறைத்து வைத்திருக்கின்றான் என்பதையும் திருமூலர் சொல்லியிருக்கின்றார்.

பாடல் #439

பாடல் #439: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணா தழுக்கது வாமே.

விளக்கம்:

மாயையால் உலகப் பற்றுக்களில் சிக்கிக் கொண்ட உயிர்கள் அந்த உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பாசத்திலேயே மூழ்கிக் கொண்டு தமது உள்ளத்துக்குள் உத்தமனாக வீற்றிருக்கும் இறைவனை உணர்ந்து அவன் அருளிய அமிர்தத்தை அருந்தி பேரின்பத்தில் திளைக்காமல் இருப்பது எப்படி இருக்கின்றதென்றால் கங்கையின் புனித நீரில் மூழ்கித் தமது பாவ அழுக்குகளைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்யாமல் கரையிலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருக்கின்றது.

உட்கருத்து: கங்கையில் மூழ்கி பாவத்தைத் தீர்த்துக்கொள்ள முடிந்த போதும் அதைச் செய்யாமல் கரையிலேயே நின்று பார்ப்பது போல தமக்குள்ளேயே இறைவனை உணர்ந்து பேரின்பத்தைப் பெற முடிந்த போதும் அதைச் செய்யாமல் உலகச் சிற்றின்பங்களிலேயே திளைத்து இருப்பதைத்தான் உயிர்கள் விரும்புகின்றன.

Related image

பாடல் #440

பாடல் #440: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணமே ஆகிநின் றானே.

விளக்கம்:

உயிர்களுக்கு நல்ல முறையில் பயன்படும் பல்வேறு விதமான பாத்திரங்களை குயவன் செய்தாலும் அனைத்தையும் ஒரே விதமான களிமண்ணில் இருந்து தான் செய்கின்றான். அதுபோலவே உலகத்தில் பல்வேறு உருவங்களில் பல பிறவிகள் எடுத்தாலும் அனைத்து பிறவிகளிலும் ஆத்மாவாக இறைவன் ஒருவனே இருக்கின்றான். உயிர்களின் கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை ஒரேவிதமான காட்சிகளைக் கண்டாலும் தமது உருவத்தை அவற்றால் காண முடியாது. அதுபோலத்தான் இறைவனும் ஒவ்வொரு உயிரின் உள்ளத்துக்குள் இருந்து உயிர்களுக்கு அனைத்தையும் உணர வைத்தாலும் தம்மையே உணர முடியாதவனாக இருக்கின்றான்.

உட்கருத்து: அனைத்தையும் தமது கண்களால் பார்க்கும் உயிர்கள் தமது கண்களின் பிம்பத்தை கண்ணாடியில் காண முடியுமே தவிர தமது கண்களால் தமது கண்களையே காண முடியாது. அதுபோலவே மாயையால் மறைந்திருக்கும் இறைவன் உள்ளத்துக்குள்ளேயே இருந்து அனைத்தையும் உணர்த்தினாலும் அவனை மட்டும் உணர முடியாமல் இருக்கும்படி உயிர்களை மாயையால் மறைத்து வைத்திருக்கின்றான்.

Related image

பாடல் #421

பாடல் #421: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசருக்கு கைஅம்பு தானே.

விளக்கம்:

இறைவன் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் மூலம் பிரளய காலத்தில் பரந்து விரிந்த உலகத்தையும் அலைகள் நிறைந்த கடல்களையும் அறியாமையாகிய அசுரர்களையும் அழித்து அருளினான். இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அதனதன் வினையின்படி அழிந்து நன்மை பெறுவதற்காக இறைவன் அழித்தல் தொழிலை செய்யும் போது நெருப்பு அவனது திருக்கரத்தில் அம்பாக இருக்கின்றது.

பாடல் #422

பாடல் #422: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றிழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலம் தான்வெந் ததுவே.

விளக்கம்:

இறைவன் வினையின்படி அனைத்தையும் அழிக்கும் மூன்று விதமான பிரளய வகைகளில் கற்பாந்தப் பிரளயத்தில் நிலையில்லாத இந்த உலகம் இழிவு நிலை பெற்று அழிந்து போனதை யானும் இறைவனின் திருவருளால் அவனோடு நின்று கண்டு உணர்ந்தேன். உலையில் இடப்பட்ட அரிசி நெருப்பினால் சூடு பெற்று கொதித்து வெந்து சாதமாகிறதோ அதுபோல மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நிலப்பரப்பான இந்த உலகமும் இறைவன் தந்த நெருப்பினால் வெந்து அழிந்தது.

மூன்று வகை பிரளயங்கள்:

  1. தினப் பிரளயம் – ஒவ்வொரு உயிரும் தினமும் தூங்கி எழும் இடைவெளியில் நிகழும் அழிவுகள்
  2. கற்பாந்தப் பிரளயம் – வினை முடிந்தபின் வரும் அழிவுகள் (உயிர்களோடு உலகமும் அழிவது)
  3. மகாப் பிரளயம் – ஊழிக்காலத்தில் வரும் பேரழிவு (அண்டங்களையே அழிக்கக் கூடியது)

பாடல் #423

பாடல் #423: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.

விளக்கம்:

உயிர்களுக்கு இயற்கையை வழங்கி அவர்களை வாழ வைக்கும் உலகமும் பனிபடர்ந்து ஓங்கி நிற்கும் எட்டு விதமான மலைகளும் ஓசை எழுப்பும் அலைகளைக் கொண்ட ஏழு விதமான கடல்களின் வெள்ளப் பெருக்கும் ஆகிய இவை அனைத்தும் இறைவனின் சிறிதளவு நெருப்பினால் அழிந்து ஆகாயம் போல வெற்றிடமாகும் விதத்தைக் கண்ட உண்மை ஞானிகளுக்கு வியப்பாக இருக்காது.

பாடல் #424

பாடல் #424: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் திசையாதி
ஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கியும் கோலிக்கொண் டானே.

விளக்கம்:

மழை நீரைக் கொண்டிருப்பதால் கருத்த மேகங்கள் காற்றினால் தள்ளப்பட்டு மலைகளின் மழையாகப் பொழிந்து மழை அருவியாகி அருவி ஆறாகி ஆறு எட்டுத்திசையிலும் உள்ள நிலங்களிலெல்லாம் பரவி ஆற்றின் தண்ணீர் நிலத்தில் ஊறி உயிர்களை காக்கும் அனைத்துவிதமான உணவு பொருட்களையும் விளைவித்து பின் ஆற்றின் தண்ணீர் கடலில் கலந்து அதுவே பெருங்கடலாக உருவெடுத்து நிலங்களையெல்லாம் சூழ்ந்து கடல் இருக்கும். வினையின் படி நன்மைக்காக இறைவன் தனது சக்தியை ஓம் எனும் மந்திரத்தை பதம் செய்து யாகக் குண்டத்தின் மேலெழும்பி வரும் சிறிய நெருப்பினால் அழித்து தன்னுள் அடக்கிக் கொள்கிறான் இறைவன்.

உள்விளக்கம்: நல்வினையின் காரணமாக கருத்த மேகங்கள் அழிந்து மழையாகப்பொழிகிறது. மழைநீர் நிலங்களுக்கு பரவி உணவு பொருட்களை உற்பத்தி செய்ய அழிந்து போகின்றது. மீதம் இருக்கும் நல்ல மழை நீர் கடலினில் கலந்து அழிந்து உப்பு நீராகிறது. அந்த நீர் மீண்டும் அழிந்து கருத்த நீர் இருக்கும் மேகமாகின்றது. இது போல் உலகத்தில் நடக்கும் பல அழிவுகளும் உலக நன்மைக்காக இறைவன் ஓம் என்னும் மந்திரத்தை பதம் செய்து உலகம் என்னும் குண்டத்தில் அக்னியை உருவாக்கி செய்கின்றான்.

பாடல் #425

பாடல் #425: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரத் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரம் என்பது உயிர்கள் உறங்கும் போது தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் அறியாத நிலையாகும். வைத்த சங்காரம் என்பது உயிர்கள் இளைப்பாற வேண்டும் என்று உறங்கும்போது ஏற்படும் கனவு நிலையாகும். சுத்த சங்காரம் என்பது உயிர்கள் உடலை விட்டு உயிர் பிரிந்த ஆன்மா ஆணவ மலத்திலேயே இருந்து பிறக்கவும் முடியாமல் இறைவனிடமும் செல்ல முடியாமல் எந்தச் செயலும் செய்ய முடியாமல் கிடக்கும் கேவலமான நிலையாகும். உய்த்த சங்காரம் என்பது இறைவனது திருவருளால் ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே சென்று இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையாகும்.

உள்விளக்கம்: நித்த சங்காரம் – தூங்கும் போது நான் என்ற எண்ணம் அழிந்திருந்த நிலை.
வைத்த சங்காரம் – தூங்கும் போது கனவில் எல்லாம் தன்னுடையது போல் இருக்கும் ஆனால் விழித்ததும் எதுவும் தனது இல்லை என்று அனைத்தும் அழிந்த நிலை.
சுத்த சங்காரம் – உடல் அழிந்த பின் ஆத்மா தான் என்ற அகங்காரத்தினால் உடலெடுக்கவும் முடியாமல் இறைவனுடன் கலக்கவும் முடியாத நிலை. இதனை கேவலமான நிலை என்று பாடலில் கூறுகிறார்.
உய்த்த சங்காரம் – உடல், உயிர் அனைத்தும் அழிந்து இறைவனுடன் கலக்கும் நிலை.

பாடல் #426

பாடல் #426: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவனருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரத்தில் உயிர் ஸ்தூல சூட்சும சரீரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். வைத்த சங்காரத்தில் மாயையுடன் கனவு நிலையில் உயிர் ஸ்தூல உடலை விட்டு விலகி சூட்சும உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும். சுத்த சங்காரத்தில் மனம் எந்த எண்ணமும் இல்லாமல் செயல் ஒன்றும் இல்லாது இருக்கும். உய்த்த சங்காரத்தில் சிவன் அருளில் லயித்து இருக்கும். இதுவே உண்மையான சங்காரம் ஆகும்.