பாடல் #368

பாடல் #368: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தான்கூறு செய்ததே.

விளக்கம்:

பாடல் #367ல் உள்ளபடி இறைவனிடம் பெற்ற உலகைக்காக்கும் வலிமை மிக்க சக்கரத்தை தனது கரத்தில் தாங்கும் சக்தி இல்லாததால் திருமால் அனைத்திலும் மேலான வலிமையுடைய இறைவனை அன்புடன் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ள அவனது வேண்டுதலுக்கு மனமிறங்கிய இறைவனும் தனது சக்தியிலிருந்து ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுத்து சக்கரத்தைத் தாங்கும் வல்லமை பெறச்செய்து அருளினான்.

Related image

பாடல் #369

பாடல் #369: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

கூறது வாகக் குறித்துநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

விளக்கம்:

உலகைக்காத்து உலகத்தொழில்கள் சீராக நடைபெற இறைவன் தனது ஆற்றலின் ஒரு பகுதியில் சக்கரத்தை படைத்தார். தனது ஆற்றலின் ஒரு பகுதியான சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தாருளினார். திருமால் அந்த சக்கரத்தை தாங்கும் வலிமை பெறுவதற்காக தமது சக்தியிலிருந்து ஒரு பகுதியையே கொடுத்து அருளினார். தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே.

Related image

பாடல் #370

பாடல் #370: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.

விளக்கம்:

அறியாமையால் இறைவனை அழிக்க தக்கன் செய்த பெரிய வேள்வியை இறைவனின் அவதாரமான வீரபத்திரர் அழித்துத் தகர்த்தார். அப்போது வந்திருந்த திருமால் பிறை சந்திரனைச் சூடியிருக்கும் வீரபத்திரர் இறைவனின் அவதாரம் என்பதை உணராமல் வேள்வியை முறையின்றி அழித்துவிட்டதாக எண்ணி சக்கராயுதத்தை வீரபத்திரரின் பிறை சூடிய தலையை நோக்கி ஏவினான். அதைப் பார்த்த வீரபத்திரர் தமது கண்களில் நெருப்பு உமிழ அந்தச் சக்கரத்தைப் பார்த்து வாயிலிந்து ஒரு உக்கிர மிரட்டல் விட சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.

குறிப்பு: பாடல் #369ல் உள்ளபடி தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே ஆகையால் இறைவனின் அவதாரமாய் இருந்த வீரபத்திரரின் கட்டளைக்கிணங்க சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.

Related image

பாடல் #362

பாடல் #362: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.

விளக்கம்:

பிரளய வெள்ளத்தில் பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. உலகெங்கும் படைத்தல் தொழில் நின்றது. அந்நேரத்தில் பிரமனும் திருமாலும் தங்கள் கடமையை செய்யாமல் யாமே தலைவர் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்டு கூறிக்கொண்டனர். சதாசிவமூர்த்தியான இறைவன் பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சதாசிவமூர்த்தியின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் தலைவன் யார் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சதாசிவமூர்த்தி நெருப்பு மலையாக நின்று அருள் செய்தார்.

Related image

பாடல் #363

பாடல் #363: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்
டுலகார் அழலைக்கண் டுள்வீழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

விளக்கம்

பாடல் #362ல் உள்ளபடி பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தி கடலை உடுறுவி கீழையும் வானத்தை ஊடுறுவி மேலேயும் இருந்து வானவர்கள் அனைவருக்கும் தலைவன் என்னும் பெயர் பெற்று உலகம் முழுவதும் நிறைந்த ஊழித்தீயில் உலக மக்கள் நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு யாரும் அஞ்சாதீர்கள் என்று கூறி அருள் செய்தான்.

Related image

பாடல் #364

பாடல் #364: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்துஅறி யாரே.

விளக்கம்

உலகம் முழுவதும் நிறைந்து இருந்த குளிர்ந்த பிரளய கடல் நீர் வடிந்தது. வானகத்தவர்களும் தேவர்களும் கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் சிவத்தைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். கடல்நீரை விண்ணகம் வரை பரவச் செய்த இறைவனும் கடைக்கண் பார்வையால் அருள் புரிந்து பேரொளியாய் எழுந்தருளினன். இத்தகைய பிரளயத்தை ஏற்படுத்தி பின்பு அனைவருக்கும் அருள் செய்த இறைவன் திருவுள்ளத்தை யாரும் அறியவில்லை.

Related image

பாடல் #365

பாடல் #365: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

விளக்கம்:

பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவர் திகைத்துப் போனார்கள். அங்கு பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தியை அனைத்தையும் படைத்து சுயம்புவாய் தோன்றியவனே என்று இறைவனை மனதில் வைத்து வழிபட்ட உலகத்தில் உள்ள உயிர்களுக்காக கடல்நீர் வெள்ளம் கடலோசை மேலும் அதிகரிக்காமல் இருக்க அந்த நீரில் அக்னியை உண்டாக்கினார் இறைவன்.

உட்கருத்து: பிரளயத்தை ஏற்படுத்தி அனைத்தையும் அழித்த இறைவன் தன்னை வழிபட்டு சரணடைந்த உயிர்களை காப்பாற்றினார்.

Related image

பாடல் #366

பாடல் #366: இரண்டாம் தந்திரம் – 5. பிரளயம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்தியைக்கொண் டானே.

விளக்கம்:

இறைவனை ஏற்காமல் அவரை குற்றப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி நடக்கும் உயிர்களை பிரளய காலத்தில் மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்ற தன் மேல் உண்மையான அன்பை வைக்க முடியாதபடி அந்த உயிர்களின் தலையின் உச்சியில் இருந்து ஆட்சி செய்யும் ஆணவத்தை அழித்து அவர்களையும் ஆட்கொண்டு விண்ணுலகத் தேவர்களும் குற்றம் கூற முடியாதபடி புதிய உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கினான்.

உட்கருத்து: பிரளய காலத்தில் தம் மீது அன்புகொண்ட அடியவர்களை மட்டுமே காப்பாற்றுவான் என்று இல்லாமல் தம்மை பழிக்கும் உயிர்களையும் காப்பாற்றும் பெரும் கருணை கொண்டவன் இறைவன். பிரளய காலத்தில் தம் மீது அன்பு கொள்ளாத பிற உயிர்களின் தலையில் இருக்கும் அகங்காரம் ஆணவத்தை அழித்து அந்த உயிர்களையும் ஆட்கொண்டு அருளும் இறைவன் பிறகு புதியதாக உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கி அருளுகின்றான்.

Image result for சதாசிவ மூர்த்தி

பாடல் #353

பாடல் #353: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (வேள்வியின் தத்துவம்)

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிதைந்தனர் அண்ணல் சினஞ்செய்த போதே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் இறைவனுக்குத் தரும் அவிர்பாகத்தையும் அவருக்குத் தராமலும் அவரை மதிக்காமலும் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் ஒன்றை செய்தான் தக்கன். அவனது அறியாமையைக் கண்டு கோபமுற்ற ஈசன் அந்த யாகத்தையும் அவனது செறுக்கையும் அழித்து அவனக்கு நல் அறிவைக் கொடுக்க மறக்கருணை கொண்டு வீரபத்திரர் எனும் பைரவ அவதாரத்தை அந்த மாபெரும் யாகத்தின் தீயிலிருந்து வெளிப்பட்டார். அந்த மாபெரும் யாகத்தை செய்தவர்கள் மற்றும் அதை ஏற்க வந்த தேவர்களும் இறைவனின் கோப முக தரிசனத்தைப் பார்த்த மறுகணமே அவனது அருளன்றி இந்த யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாதென்பதை அறிந்து இறைவனின் கோபத்தைக் கண்டு மிகவும் அஞ்சி தமது நிலை தடுமாறி எல்லாத் திசையிலும் சிதைந்து போனார்கள்.

உட்கருத்து: தாம் செய்யும் எந்த செயலானாலும் மனம் வாக்கு உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி இறையருளுடன் செய்வது வேள்வியாகும். மனம், வாக்கு, உடம்பு மூன்றை மட்டுமே வைத்து இறையருள் இல்லாமல் செய்வது தக்கன் வேள்வியாகும்.

Related image

பாடல் #354

பாடல் #354: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (வேள்வியின் தத்துவம்)

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லாதானும் அருள்புரிந் தானே.

விளக்கம்:

தக்கன் யாகத்தையும் அதைச் செய்ய முற்பட்டவர்களையும் அதை ஏற்றுக்கொண்ட தேவர்களையும் இறைவனின் பைரவ அவதாரமான வீரபத்திரர் அளித்த தண்டனையை கண்டு யாகத்தீயில் இருந்து எழுந்து வந்த திருமால் இறைவனே தவறு செய்தவன் இவனல்ல உலகினில் பிறந்த சதியின் மேல் வைத்த பாசத்தாலும் கொண்ட பந்தத்தாலும் அறிவிழந்து இவன் செய்த யாகத்தின் அவிர்பாகத்தை ஏற்றுக்கொண்ட நாங்களே பெரும் தவறு செய்தவர்கள் எம்மை மன்னித்து அருளுங்கள் என்று கூறி இறைவனின் திருவடிகளில் விழுந்து தொழ என்றுமே இறப்பில்லாத இறைவனும் அவர்களுக்கு அருள் புரிந்தான்.

உட்கருத்து: மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி பந்த பாசத்தினால் செயல்களை செய்தால் அந்த செயல் இறையருள் இல்லாமல் பூர்த்தியாகாமல் இருக்கும் அதை உணர்ந்து உயிர்கள் பந்த பாசத்தில் இருந்து விடுபட்டு இறையருளுடன் செய்யும் போது இறைவன் அந்த உயிருக்கு அருள் செய்வான்.

Related image