மூவுலகையும் மூன்று அடிகளால் அளந்த திருமால் தாமரை மலரில் அமர்ந்த பிரம்மன் முதலிய அனைத்துத் தேவர்களும் இன்னமும் தங்களின் எண்ணத்தால் கூட அளக்க முடியாத சதாசிவமூர்த்தியின் பெருமையைப் பற்றி எண்ணாமல் இருக்கின்றார்கள். அடிமுடி காண முடியாத சதாசிவமூர்த்தியை அளந்து பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. கண் பார்க்கக்கூடிய எதையும் கடந்து அளவிட முடியாமல் அனைத்தையும் தனக்குள் உள்ளடக்கி நிற்கின்றான்.
தாமரை மீது அமர்ந்து கொண்டு முதலாவதாகிய படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. உயிர்களைக் காப்பாற்றும் தொழிலைச் செய்யும் நீல வண்ணனாகிய திருமாலையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் அப்புறம் உயிர்களின் மாயையை அழிக்கும் ஈசுவரனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவ்வாறு மூவரையும் கடந்து அனைத்திற்கும் இறைவனாக இருக்கின்ற சதாசிவமூர்த்தியை யாம் காணும் இடமெல்லாம் கண்டு நின்றோம்.
உயிரின் ஆரம்பத்திலிருந்து உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலுக்குள்ளே நின்று உலகின் அனைத்து வினை மாற்றங்களுக்கு காரணமாகவும் எங்கும் பரவி விரிந்து இருப்பவனும் உயிர்களுக்குள்ளேயே உணரப்படுபவனுமாய் இருந்து என்றும் அருள் வழங்கும் குறையாத தன்மையுடைய மாபெரும் ஜோதியாகவும் அனைத்திற்கும் நீதியுமாகவும் என்றும் அழியாத சக்தியுமாகவும் இறைவன் நிலைத்து நிற்கின்றான்.
நரம்போடு இருக்கும் கொன்றைப் பூவைச் சூடிக்கொண்டு சுருள் சுருளான சடையை உடையவரும், அழகு நிறைந்து பிரகாசிக்கும் நெற்றியைக் கொண்டிருக்கும் உமாதேவியை தமது இடபாகத்தில் உடையவரும், ஒரு மாசில்லாத தூய்மையானவருமான இறைவனை, மும்மல பற்றுக்கள் இன்னும் நீங்காமல் இருக்கும் அமரர்களும் தேவர்களும் எப்படிக் கூடிக் குலாவுவார்கள்? ஆதலால், இறைவனின் இயல்பை அவர்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.
காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும் ஆயம் கத்தூரி அதுமிகும் அவ்வழி தேசம் கலந்தொரு தேவனென் றெண்ணினும் ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
விளக்கம்:
வெங்காயம் பெருங்காயம் ஆகிய இரண்டையும் ஒன்றாக கொதிக்க வைத்தாலும் அதிலிருந்து வரும் வாசனையை விட கருமையான கத்தூரியிலிருந்து வரும் வாசம் அதிகமாகும். அதுபோலவே உலகெங்கும் எத்தனை தெய்வங்களைத் தேடி அடைந்து அவர்களே இறைவன் என்று எண்ணிக்கொண்டு அவர்களோடு கலந்து முயன்றாலும் அனைத்திற்கும் இறைவனான ஈசுவரனை (சதாசிவமூர்த்தியை) கலந்து பெறும் உறவுக்கு (பேரின்பத்திற்கு) அது கொஞ்சம் கூட ஈடாகாது.
உள் விளக்கம்:
வெங்காயம் என்பது பருமையான தேகத்தையும் (அன்னமயகோஷம்) பெருங்காயம் என்பது நுண்மையான தேகம் (மனோமய கோஷத்தையும்) குறிக்கும். இவ்விரண்டு தேகங்களும் உயிர்களின் உடலுக்குள்ளே கலந்து இருந்தாலும் அது இறைவனோடு கலந்து பெறும் சூக்கும தேகத்திற்கு ஈடாகாது. ஆகவே உலகப் பற்றுக்கள் எவ்வளவுதான் இன்பத்தைத் தருவதாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனோடு இரண்டறக் கலந்து பெறும் பேரின்பத்திற்கு ஈடாகாது.
அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி யதுபதி யாதரித் தாக்கம தாக்கென இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.
விளக்கம்:
குபேரன் இறைவன் மேல் கொண்ட தீராத பக்தியினால் அவரை நோக்கிச் செய்த நிறைவான தவத்தை கண்டு மெச்சிய இறைவன் அவனை உலகத்திலுள்ள செல்வங்களுக்கெல்லாம் தலைவனாக ஆக்கிவிட்டு இனி வடக்குத் திசையிலிருக்கும் அழகாபுரியே உன்னுடைய ஊர் நீ அதற்கு அரசன் என்றும் தம்மை நாடி வருபவர்களை ஆதரித்து அவர்களைத் தம் உறவினர்போல ஆதரவு கொடுத்து அவர்களுக்கும் வேண்டிய செல்வம் வழங்குவாயாக என்றும் அருளிய மாபெரும் கருணையாளன் எம்பெருமானே.
உள் விளக்கம்:
உலகப் பற்றுக்களில் விருப்பம் வைக்காமல் இறைவனின் மேல் தீராத அன்பு கொண்டு அவனை எண்ணி வடதிசை நோக்கி (இங்கே வடதிசை என்பது ஏழாவது சக்கரமான சுழுமுனை நாடியின் உச்சமான சகஸ்ரரதளத்தைக் குறிக்கும்) தியானம் செய்தால் அளவிடமுடியாத அளவு செல்வங்களைக் (உலக செல்வங்களுக்கும் மேலான செல்வங்களான சித்திகளையும் முக்தியையும்) கொடுத்து அந்தச் செல்வங்களுக்கெல்லாம் நம்மைத் தலைவனும் ஆக்குபவன் எம்பெருமான் இறைவனே.
இந்த உலகத்தில் ஏலக்காயின் சுகந்தமான வாசனை வீசக்கூடிய ஏழுவிதமான காடுகளை உருவாக்கியவன் இறைவன் அவற்றை பேரழிவுக் காலத்தில் வெறும் சாம்பல் காடுகளாகவும் மாற்றுபவனும் அவனே. அவன் அனைத்தும் அறிந்த பேரறிவாளன். பிறை நிலாச் சந்திரனை தன் திருமுடியில் அணிந்திருக்கும் இறைவன் தன்னை நோக்கி உயிர்கள் புரியும் உண்மையான தவத்தை மெச்சி அந்த உயிர்களின் உடலையே தான் கொண்ட திருக்கோயிலாக எழுந்தருளும் மாபெரும் அருளாளன்.
உள் விளக்கம்:
சுகந்தமான வாசனை வீசும் ஏழு காடுகள் என்பது அற்புதமான சக்தியை தமக்குள் அடக்கியிருக்கும் ஏழு சக்கரங்களைக் குறிக்கும். உயிர்களின் உடலில் இருக்கும் இந்த ஏழு சக்கரங்களே அவற்றை முக்திக்கு அழைத்துச் செல்லும் வழியை கொடுக்கக்கூடியவை. சக்திவாய்ந்த ஏழு சக்கரங்கள் இருந்தாலும் அவற்றை முறைப்படி தியானத்தால் சக்தியூட்டாமல் விட்டுவிட்டால், உயிர்களின் உடல் ஒரு நாள் அழிந்து வெறும் சாம்பலாக மாறிவிடும் என்பதையே சாம்பலாகும் காடுகள் குறிக்கிறது. இறைவன் முக்காலமும் அறிந்தவன் அவன் பேரறிவாளன் என்பது அவனிடமிருந்து எதையுமே மறைக்க முடியாது என்பதைக் குறிக்கிறது. மாபெரும் அன்பானவன், சந்திரனை விட குளிர்ச்சியை உடைய இறைவனை நோக்கி உண்மையான தவம் இருந்தால், அந்த உயிர்களின் உடலே இறைவனே மகிழ்ந்து வந்து தங்கும் இடமாகிவிடும். இதுவே முக்தியடையும் வழியுமாகும்.
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறநெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்றம் மலையது தானே.
விளக்கம்:
படைப்புக்கள் அனைத்திற்கும் ஆரம்பம் எப்போது அழிவு எப்போது என்பதை முன்னமே தீர்மானித்து அதன்படியே படைத்து அருளுபவனும் தன்னை வணங்கி வழிபடும் அடியவருக்கும் அடியவனாக இருப்பவனும் இறைவனின் தன்மையை உணர்த்தும் அறங்களையும் நெறிகளையும் தேடினால் அது வேதங்களே ஆகும். அத்தகைய இறைவனின் உருவம் எப்படி இருக்கும் என்று தேடினால் இடி இடிக்கும் போது வானத்தில் தோன்றும் மின்னல் ஒளியும் அவன் உருவமே. அப்போது கேட்கும் இடியின் ஓசையும் அவன் உருவமே ஆகும். இப்படி அனைத்தையும் தன் உருவமாகக் கொண்டிருக்கும் இறைவனின் இருப்பிடம் எது என்று தேடினால் வாசனை மிக்க மலர்கள் சூழ்ந்த சோலைகளைக் கொண்ட குன்றுகளெல்லாம் அவன் இருப்பிடமே அந்தக் குன்றுகள் இருக்கும் மாபெரும் மலைகளும் அவன் இருப்பிடமே.
வானத்திலிருக்கும் பெருத்த மழை மேகம் போல மாயையால் குறைபட்டுக் கிடக்கும் உயிர்கள் அனைத்திற்கும் அவற்றின் பிறவியை அழித்து முக்தியை அருளுபவனும் மந்திரத்தால் ஏவப்பட்ட காட்டு யானையின் உடலைப் பிளந்து தனது ஆடையாக உடுத்திக்கொண்ட இறைவனின் புகழ்களைப் புகழ்ந்து பாடினால் அவன் அருள் பெற்று அவனோடு இரண்டறக் கலந்து விடலாம்.
உள் விளக்கம்:
வானத்திலிருக்கும் பெரிய மழை மேகம் எப்படி வித்தியாசம் பார்க்காமல் அனைத்தின் மேலும் சரிசமமாக மழை பொழிய வைக்கின்றதோ அதுபோலவே இறைவன் மாபெரும் கருணையால் திருமால், பிரம்மன், தேவர்கள், மனிதர்கள் என்று மாயையால் குறைபட்டுக் கிடக்கும் அனைவரின் மாயையை அழித்து அவர்கள் உய்யுமாறு அருளுகின்றான். அப்படிப்பட்ட இறைவனை வெறும் மந்திரத்தினால் கட்டுப்படுத்திவிடலாம் என்ற எண்ணி தாருகாவனத்திலிருந்த முனிவர்கள் தங்களின் ஒன்றுபட்ட சக்தியைக்கொண்டு யாகக் குண்டத்திலிருந்து மந்திரசக்தியால் தோன்றுவித்த காட்டு யானையை இறைவனை நோக்கி ஏவினார்கள். இறைவனோ அந்த காட்டு யானையைக் காடே அதிரும்படி கதற இரண்டாகப் பிளந்து அதன் தோலை தனது மேலாடையாக போர்த்தியபடி அதன் தலைமேல் கால் வைத்து கஜசம்ஹாரமூர்த்தியாக காட்சி தந்து அவர்களின் அறியாமையை அகற்றி அருளினான். இப்படி தன்னை எதிர்ப்பவர்களுக்கும் சரிசமமாக அருள் வழங்கி ஒரு தலைசிறந்த அரசனப் போல உயிர்களைப் பாதுகாக்கும் இறைவனின் புகழ்களைப் புகழ்ந்து பாடினால் அவன் அருள் பெற்று முக்தியடையலாம்.
இறைவன் தன்னை உண்மையான பக்தியோடு வணங்குபவர்களின் உள்ளத்தில் எழுந்தருளுபவன். அவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரன் அவர்களின் அன்பு கொண்ட உள்ளத்தையே தனக்கு ஒரு நல்ல இடமாக எண்ணி அதிலேயே வசிப்பவன். அவர்களின் மனதில் நினைத்ததையெல்லாம் அறிந்தவன். அப்படிப்பட்ட இறைவனை உண்மையான பக்தியோடு நினைக்காமல் என் மேல் இறைவனுக்கு அன்பில்லை என்று அறியாமையால் பலர் புலம்புகின்றார்கள். இந்தப் பிறவியைவிட்டு முக்தியடைய வேண்டும் என்ற ஆசையில் இறைவன் மீது உண்மையான பக்தியோடு நிற்கின்றவர்களின் பக்கத்திலேயே அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு நிற்கின்றான் இறைவன்.