பாடல் #171

பாடல் #171: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரத்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்துஅது கைவிட்ட வாறே.

விளக்கம்:

வாசனை மிக்க மலர்களைத் தேடிச் சென்று அவைகளில் இருக்கும் தேனைக் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து ஒரு மரத்தின் கொம்பில் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்து பெரிய தேனடை அளவிற்கு சேமித்து வைக்கின்றது தேனீக்கள் ஒரு நாள் அந்தப் பெரிய தேனடையைக் கண்டுவிட்ட மனிதர்கள் வந்து அவைகளைத் தீப்பந்தங்களால் துரத்திவிட்டு அவை சேமித்து வைத்திருந்த தேனடையைக் கொண்டு போய்விடுகிறார்கள். தேனீ தாமே தேனடையைப் பெரியதாகச் சேமித்து தானே மனிதர்களுக்கு காட்டிக்கொடுத்து விடுகிறது. அதுபோலவே உயிர்கள் தாங்கள் சிறுகச் சிறுகச் சேகரித்த செல்வங்களையும் ஒரு நாள் மற்றவர்கள் கவனிக்குமளவு தங்களிடமிருக்கும் செல்வத்தைப் பிறருக்கு பெரிதாகக் காட்டிக்கொடுத்து விட அவர்களைவிட வலிமையான மற்றவர்கள் வந்து அந்தச் செல்வங்களைக் களவாடிச் செல்வார்கள். எனவே உலகச் செல்வங்கள் எதுவுமே எப்போதுமே நிலைத்து இருக்காது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.