பாடல் #174

பாடல் #174: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

வாழ்வு மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்கு
கூவுந் துணையொன்று கூடலு மாமே.

விளக்கம்:

உடன் வாழும் மனைவியும் மக்களும் (பிள்ளைகளும்) உடன் பிறந்தவர்களும் (சகோதர சகோதரிகள்) ஆகிய இவர்கள் அனைவருமே நாம் சேர்த்து வைத்த செல்வங்களில் எமக்குக் கொடுக்கும் அளவு என்ன என்றுதான் கேட்பார்கள். அதற்காக அவர்களுக்கும் சேர்த்து மேலும் மேலும் செல்வங்களைச் சேமிக்கும் மனிதர்களுக்கு அவர்கள் இறக்கும் தறுவாயில் கூப்பிட்டு அழைத்தால் உடனே வருவதற்கென்று யாரும் இருக்க மாட்டார்கள். அவர் இறந்ததும் அவர் சேமித்து வைத்த செல்வங்களை உடனே கூறு போட்டுவிடுபவர்கள் மட்டுமே இருப்பார்கள். எப்போதும் கூப்பிட்ட குரலுக்கு உடனே வந்து அருள் செய்யும் இறைவனின் துணையை விரும்பி அழிந்துவிடுகின்ற செல்வங்களின் மேல் ஆசை வைத்துச் சேமிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் இறைவன் மேல் எண்ணம் வைத்து அவனை வணங்கி வழிபடுங்கள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு அவன் எப்போதும் கூட வருவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.