பாடல் #173

பாடல் #173: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

விளக்கம்:

உயிர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி சம்பாதிக்கும் செல்வங்களும் சொத்துக்களும் ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் படகு சட்டென்று வெள்ளம் வந்தால் எப்படி மூழ்கிவிடுமோ அதுபோல சட்டென்று போய்விடும். வெள்ளம் பெருகும் கடலாக இருந்தாலும் அதிலிருக்கும் சிப்பிக்கு எதுவும் ஆவதில்லை. அதுபோலவே அழிந்துபோகின்ற இந்த உடலுக்கு உள்ளேயே என்றும் நிலைத்திருக்கும் முக்தியை அடையும் வழியாக ஒரு சிமிழை (குண்டலினி சக்தி) இறைவன் வைத்திருப்பதை எவரும் ஆராய்ந்து பார்த்து அறிந்துகொள்வதில்லை.

உட்கருத்து: அழிகின்ற செல்வங்களில் ஆசை வைக்காமல் என்றும் அழியாத முக்திக்கு வழிதரும் குண்டலினி சக்தியை தியானத்தால் எழுப்பி அதைச் சகஸ்ரர தளத்தின் உச்சியில் கொண்டு சேர்த்து இறைவனின் நமக்குள் உணர்ந்து அறிவுத்தெளிவு பெற வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.