பாடல் #186

பாடல் #186: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்ததுகண் டேனே.

விளக்கம்:

உயிர்கள் வினைப் பயனாக உலகத்தில் பிறக்கும் பொழுதே இந்த உலகில் எத்தனைக் காலம் இருக்க வேண்டும் என்பதை ஒரு நாளில் எத்தனை முறை மூச்சுவிடுகின்றன என்கிற கணக்கின்படி எத்தனை நாள் வாழ வேண்டும் என்று வரையறுக்கப்பட்டே பிறக்கின்றன. இந்த வரையறுக்கப்பட்ட நாள்களில் இளமையாக இருக்கும் நாட்கள் கொஞ்சம் சிறிது நாட்களே. இளமை இருக்கும் போதே எப்போதும் நிரந்தரமான இறைவனைப் பாடித் தொழுது வாழ்வதே சிறந்தது. இளமை இருக்கும் நாட்களிலேயே இறைவனைப் பற்றிய எண்ணங்கள் வரவிடாமல் தடுத்துவிடும் பலவித ஆசைகளை எடுத்து வெளியே எறிந்துவிடத் தெரியாமல் உயிர்கள் ஆசைக்கு அடிமை ஆகித் தங்களின் வாழ்க்கையை இழந்து பின்பு வயதாகி இறந்துவிடுகின்றன. ஆசைக்கு அடிமையாகாமல் உயிரோடு இருக்கும் காலங்களிலேயே இறைவனைப் பற்றிய சிந்தனையில் வாழ்ந்த உயிர்கள் இறைவனை அடைவதை நானும் இருந்து கண்டேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.