பாடல் #416

பாடல் #416: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்திலும் அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்குள்ளும் தோன்றும் உண்மையான அன்பாகவும் அறிவாகவும் அவை பெறும் ஒழுக்கமான அடக்கமாகவும் இருப்பவன் இறைவனே. நல் வினையால் உயிர்கள் பெறும் இன்பமாகவும் இன்பத்தில் மற்ற உயிர்களோடு கலக்கும் புணர்ச்சியாகவும் இருப்பவன் இறைவனே. உலகம் உருவான ஆதிகாலமாகவும் அந்த உலகம் இறுதியில் அழியும் ஊழிக் காலமாகவும் இருப்பவன் இறைவனே. அவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் அன்பினால் ஐந்து பூதங்களிலும் அமர்ந்து இருந்து உயிர்களை எப்போதும் காத்து அருளுகின்றான்.

பாடல் #417

பாடல் #417: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றதும் அவனே வனையவல் லானே.

விளக்கம்:

உயிர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் உயிர்களைப் பல்வேறு உலகங்களிலும் உருவாக்குபவன் இறைவனே. அவனே உயிர்களின் வினைப் பயனைப் பெற்று அதன் காரணமாக பிறவியை உருவாக்குபவன். ஒரு குயவன் தனது அச்சுச் சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுற்றி அந்தக் களிமண்ணைப் பிடித்து தாழியும், குடமும், சிறு பாண்டங்களும் மற்றும் பலவிதமான மண் பாத்திரங்களும் செய்வதைப் போல இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான உடல்களை வடித்து அருளும் வல்லமை உள்ளவன் ஆவான்.

பாடல் #418

பாடல் #418: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராதவண்ணந் தாங்கிநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்கும் உள்ளிருக்கும் உயிராகவும் வெளியிலிருக்கும் உடலாகவும் மூச்சுக்காற்றாகவும் நின்று கர்மாக்கள் வினைகள் சூழ்ந்த அசுத்த மாயையில் இருக்கும் உலக உயிர்களையும் கர்மாக்கள் வினைகள் இல்லாத சுத்த மாயையில் இருக்கும் தேவர்களையும் தாண்டிய பரவெளியில் உண்மைப் பொருளை உணர வைக்கும் பேரொளியாக குருவாய் நின்று அருளுகின்றான் இறைவன். அனைத்து உயிர்களுக்குள் உயிராகவும் உணர்வாகவும் அவற்றின் உடலுக்குள் பரவி இருந்து அந்த உயிர்களின் மூச்சுக்காற்று உடலை விட்டு செல்லாதபடி உடலையும் உயிரையும் உள்ளுக்குள்ளிருந்து தாங்கிக் கொண்டு நிற்பவனும் இறைவனே.

பாடல் #419

பாடல் #419: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தாங்கருந் ..தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணியன் தானே.

விளக்கம்:

பல்வேறு விதமான உயிர்களுக்கும் அவற்றின் உடலுக்குள் இருந்து உயிரைத் தாங்கும் தன்மையாக இருக்கும் இறைவனே அவை அழியும் காலத்தில் உள்ளிருந்து வெளியே வரும் உயிரை வாங்குகின்றவனாகவும் இருக்கின்றான். அவனைத் தவிர உயிர்களைத் தாங்கவும் வாங்கவும் அருள் செய்யும் தெய்வம் வேறு ஒன்று இல்லை. இப்படி ஏழு உலகங்களையும் அதிலிருக்கும் அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கின்ற இறைவனே அதைத் தாண்டிய விண்ணுலகத்தையும் தாங்கி நிற்கின்றான். அவனே உயிர்கள் தமது பிறவிச் சூழலிலிருந்து விடுபட்டு விண்ணுலகம் அடைய வழியாக யோக முறைகளையும் அருளி அந்த முறைகளைப் பின்பற்றி வரும் உயிர்களின் வழிமுழுவதும் அவற்றைக் காத்தும் அருளுகின்றான்.

பாடல் #420

பாடல் #420: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணியினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களின் உள்ளுக்குள்ளும் இறைவன் இருந்தாலும் அவனை அறிந்து கொள்ள முடியாதபடி மாயையால் மறைக்கப்பட்டு இருக்கின்றான். அவனை மூச்சுக்காற்றின் மூலம் குண்டலினியை மேலெழுப்பி சகஸ்ரர தளத்தில் கொண்டு சேர்த்துவிட்டால் பேரறிவு ஞானத்தைத் தந்து அருளுவான். அதன் மூலம் பிறவிச் சுழற்சியை அறுத்து முக்தி பெறலாம். இறைவனை எவ்வளவு தான் பணிந்து தொழுதாலும் ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உலக ஆசைகளோடு இருந்தால் உலகத்தில் பல்வேறு விதமான உயிர்களாக உடலெடுத்துப் பிறந்து அழிந்தாலும் மீண்டும் மீண்டும் மண்ணுலகத்தில் உடல் பெறவே செய்வான் உலகத்தின் தலைவனாகிய இறைவன்.

பாடல் #381

பாடல் #381: இரண்டாம் தந்திரம் – 9. சர்வசிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

விளக்கம்:

முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் அசையா சக்தியாகிய பராபரமாக இருக்கிறார். அறிவு வடிவாக இருக்கும் அந்த பராபரத்தில் உலகை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் அசையும் சக்தியாகிய பராபரை உருவாகிறது. அசையும் சக்தி உருவானதும் அதிலிருந்து சோதி உருவாகிறது. அந்த சோதியில் இருந்து ஒலி உருவாகிறது.

பாடல் #382

பாடல் #382: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்றே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

விளக்கம்:

பாடல் #381 இல் உள்ளபடி பராபரையாகிய எண்ணத்தில் சுத்தமான ஒலியும் ஒளியும் இருக்கிறது. அந்த சுத்தமான ஒலி ஒளிக்கு சிவன் சக்தி என்று பெயர். அந்த பராபரையாகிய எண்ணம் ஒலி ஒளி என்று பிரிந்து இருப்பதற்கு காரணம் அசையாத அறிவு சக்தியில் இருந்து உலகை உருவாக்கும் செயல் சக்தி பிறப்பதற்காக. அசையாத அறிவு சக்தியில் அசைகின்ற எண்ண சக்தி கலக்க ஒலியும் ஒளியும் தோன்றுகிறது.

பாடல் #383

பாடல் #383: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி ( அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் இருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

விளக்கம்:

ஒலியாய் இருக்கும் சிவத்தோடு எப்போதும் பிரியாமல் ஒளியாய் இருக்கும் சக்தி சேர்ந்தே இருக்கிறது. நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்தில் இருந்து வரும் ஒளியும் வேறு வேறாய் அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும். அது போல் சிவமும் சக்தியும் ஒன்றேவாகும். இப்படி இருக்கின்ற சிவசக்தியை உருவாக்கிய பரம்பொருளின் வலிமைகளை விளக்கிச் சொல்லினால் அது பலகாத தூரத்திற்கும் நீண்டு போய்க்கொண்டே இருக்குமே தவிர முடியாது.

பாடல் #384

பாடல் #384: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஒரு சாத்துமா னாமே.

விளக்கம்:

வார்த்தைகளில் விவரிக்க இயலாத மாபெரும் வல்லமை பொருந்திய ஜோதி வடிவான இறைவன் அண்டம் முதல் அனைத்தையும் உருவாக்க எண்ணி தனது ஒரு கூறு சக்தியை சேர்ந்தே இருக்கும் ஒலிக்கும் ஒளிக்கும் கொடுத்து பஞ்ச பூதங்கள் முதல் உலகம் வரை அனைத்தையும் உருவாக்குகின்றான்.

பாடல் #385

பாடல் #385: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

விளக்கம்:

ஜோதி வடிவான இறைவனின் மாபெரும் சக்தியிலிருந்து ஒளியும் ஓலியும் தோன்றி இரண்டும் கலந்து அதிலிருந்து ஆகாயம் உருவாகியது. ஆகாயத்திலிருந்து காற்று உருவாகியது. காற்றிலிருந்து வெப்பம் (நெருப்பு) உருவாகியது. வெப்பம் குளிர்ந்து நீர் உருவாகியது. இவை நான்கும் கலந்து நிலம் உருவாகியது. இவை ஐந்தும் முழுமையடைந்து உலகம் உருவாகியது. பூவுக்குள் கலந்திருக்கும் தேன் போல உலகங்களில் பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் கலந்திருக்கிறது.

Related image