பாடல் #434

பாடல் #434: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.

விளக்கம்:

உயிர்களின் மேலுள்ள மாபெரும் அன்பினால் உயிர்களுடனே இருந்து அவர்களின் கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருக்கின்றான் இறைவன். ஆதியாக இருக்கும் இறைவனே அனைத்து உயிர்களின் உருவத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான். உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே தமது தலையின் உச்சியில் இறைவனாக இருக்கும் அமிர்தத்தை நெஞ்சத்தில் உணராத உயிர்கள் பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தத்தின் செயலை உணராமல் இருக்கின்றார்கள்.

உட்கருத்து: உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் நெஞ்சத்தில் உணர்ந்து விட்டால் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் தலை உச்சியில் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவனாக இருக்கும் அமிர்தத்தையும் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் உயிர்கள் உணவு உண்ணும் ருசிக்கு ஆசைப்பட்டு அதனால் கிடைக்கும் வினையின் காரணமாக மறைக்கப்பட்டு உணராமல் இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.