பாடல் #432

பாடல் #432: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.

விளக்கம்:

இறைவனோடு இருந்த ஆன்மாக்கள் ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டி உலகத்தில் பிறவி எடுக்கும்படி உயிர்களாகப் படைக்கின்றான் இறைவன். அந்த உயிர்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் போது சில வினைகளும் சேர்த்து விடுகிறது. இந்த வினைகளை அனுபவிக்க வேண்டி உலகப்பற்று குடும்பம் பாசம் என்னும் துயரத்துக்குள் உயிர்களை மாயையால் பூட்டி அடைத்துவிடுகின்றான். எலும்பை முழுவதும் தோல் தசைகளால் மூடி அந்த எலும்போடு ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இந்த உலக உடம்பானது உயிர்களின் பிறவிக்கு காரணமாகிய வினைகள் முடியும் வரை ஒன்றாகச் சேர்ந்து இருக்கும். இந்தப் பிறவியின் வினைகள் முடிந்ததும் உயிரை முடிப்பதாக இருக்கின்றது.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசையினால் இன்பம் பெறுவதற்காகப் பிறவி எடுப்பதால் அந்த இன்பத்தை அனுபவித்து தீர்க்கும்வரை பேரின்பத்தை மறைத்து அருளும் இறைவன் அந்த ஆன்மாக்கள் எடுத்த பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதினால் கிடைக்கும் வினைகளையும் அதன் விளைவுகளால் ஏற்படும் துன்பத்தையும் அந்தத் துன்பத்திற்குக் காரணமாக இருக்கும் உலகப் பற்றுக்களையும் சேர்த்து பிறவிக்குள் அடைத்துவிடுகின்றான். இதில் எலும்பும் தோலும் போர்த்திய உடலே சிறையாகவும் உலகப் பற்று எனும் மாயை பூட்டாகவும் வினைகள் சாவியாகவும் இருக்கின்றது. எப்போது உயிர்கள் தமது வினைகளை அனுபவித்துக் கழித்து முடிக்கின்றதோ அப்போது இந்தப் பூட்டு திறந்து உலகத்தில் அதுவரை ஆன்மா அனைத்தையும் அனுபவிக்க உதவிய உடலையும் உயிரையும் அழித்து ஆன்மா விடுதலை பெறுகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.