பாடல் #721

பாடல் #721: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாகவே மதித்துக்கொள் ளீரே.

விளக்கம்:

யோகியர் தாம் விடும் மூச்சுக்காற்றின் அளவைக் கொண்டே தமக்குள் இறைவன் வீற்றிருக்கும் உடலும் இறைவி வீற்றிருக்கும் உயிரும் எப்போது பிரியும் என்பதை ஒரு சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றி மிகச் சரியாக அறிந்து கொள்ளலாம். அந்த சோதனைகள் என்ன என்பதை யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளை அரிய மாபெரும் செல்வமாக மதித்து சிரத்தையாக செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கருத்து: உடலை விட்டு உயிர் பிரிந்து விடும் ஆயுளை மிகச் சரியாகக் கணக்கிடும் சாதனைகளை யோக குருவின் அருள் கொண்டு அறிந்து கொண்டு சிரத்தையுடன் செய்யும் சாதகர்களுக்கு இறப்பிலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.

யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளைச் சிரத்தையாக செய்வதன் மூலம் கிடைக்கும் பலனை அடுத்த பாடல் #722ல் காணலாம்.

பாடல் #722

பாடல் #722: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

விளக்கம்:

பாடல் #721 இல் கூறியுள்ளபடி யோக குருவை வழிபட்டு அவரது அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் ஆறுகளைப் போன்ற இடகலை பிங்கலை நாடிகளின் வழியே குதிரையைப் போல குதித்துவரும் மூச்சுக்காற்றை வீணாக்காமல் கட்டி வைத்து சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே சுரக்கும் அமிர்தத்தைப் பருக முடிந்த யோகியர்களின் உடல் கடலுக்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் நிலத்திற்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் அழியவே அழியாமல் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணையே.

கருத்து: யோக குருவின் அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் தங்களின் உடலும் உயிரும் பிரியும் ஆயுட் காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் யோகியர்கள் அதை மாற்றுவதற்கு அகயோகம் செய்தால் அவர்களின் உடலும் உயிரும் எவ்வளவு ஆயிரம் வருடங்களானாலும் பிரியாமல் இருக்கும் இது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணை.

பாடல் #723

பாடல் #723: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

ஓசையினில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியினில் மூன்றும் நாவினில் இரண்டும்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசுஅறு சோதி வகுத்துவைத் தானே.

விளக்கம்:

ஏழு விதமான ஒலிகளை உணரும் காதுகளும் ஐந்து விதமான ஒளிகளைக் காணும் கண்களும் மூன்று விதமான சுவாசங்களை முகரும் நாசிகளும் இரண்டு விதமானதைச் செய்யும் நாக்கும் தொடுவதை உணரும் உடலும் உயிரான ஆன்மாவை விட்டுப் பிரியும் நாள் எதுவென்பதை மிகவும் துல்லியமாக மூச்சுக்காற்றை வைத்தே அளந்து வைத்திருக்கின்றான் அனைத்துவித மலங்களையும் அறுத்து அருளும் சோதிமயமான இறைவன்.

கருத்து: உயிர்கள் தம்மிடம் அடையும் வழியை வைத்தருளிய இறைவன் அதன்படி செய்யாத உயிர்கள் அழிந்து மறுபடியும் பிறவி எடுப்பதற்கான ஆயுளையும் துல்லியமாக அளந்து வைத்திருக்கின்றான்.

காதுகள் உணரும் ஏழு விதமான ஒலிகள்:

  1. சத்தம் – இயற்கையான ஓசைகள்
  2. பரிசம் – கருவிகளினால் எழுப்பப்படும் இசை
  3. உருவம் – பிம்பங்களின் அசைவைக் காட்டும் சலசலப்பு
  4. இரசம் – நீர் எழுப்பும் ஓசை
  5. கந்தம் – காற்று எழுப்பும் ஓசை
  6. சரித்தல் – உலகத்தோடு இயங்கும் நுண்ணிய ஓசைகள்
  7. சேர்த்தல் – உடலுக்குள் இயங்கும் நுண்ணிய ஓசைகள்

கண்கள் காணும் ஐந்து விதமான ஒளிகள்:

  1. உருவம் – நிலம் (பிம்பங்கள்)
  2. இரசம் – நீர் (திரவங்கள்)
  3. கந்தம் – காற்று (புகைகள்)
  4. தகித்தல் – நெருப்பு (தீக்கள்)
  5. வெம்மை – ஆகாயம் (வெற்றிடம்)

நாசிகள் முகரும் மூன்று விதமான சுவாசங்கள்:

  1. வாசனை
  2. இடகலை மூச்சு குளிர்ச்சியான காற்று
  3. பிங்கலை மூச்சு வெப்பமான காற்று

நாக்கு செய்யும் இரண்டு விதமான செயல்கள்:

  1. சுவைத்தல்
  2. பேசுதல்

பாடல் #640

பாடல் #640: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.

விளக்கம்:

சிவபெருமானைத் தேடி எட்டுத் திசைகளிலும் பணிந்து அவனே பரம் பொருள் என்று அறிந்ததால் தைரியமுடன் எட்டுத் திசையிலும் சிவத்தை வணங்க அதனால் உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் தன் அருளால் எட்டு சித்திகளும் அவருக்குள் நிலைபெறச் செய்வார்.

கருத்து: எதையும் சிவமாய்ப் பணிந்து வணங்குபவர்களுக்கு சிவபெருமான் எட்டுவித சித்திகளும் கொடுத்து அருள்வான்.

பாடல் #641

பாடல் #641: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.

விளக்கம்:

தேவர்கள் முதலான அனைத்து உயிர்களின் தன்மையையும் அறிந்து கொள்கின்ற பண்பாளனாகிய இறைவனின் திருவடியை தூய எண்ணத்துடன் சரண் அடைந்து தூய்மையான பரவெளியைக் (அண்ட சராசரங்கள்) கண்டேன். ஆதலால் இறைவன் தனது பேரருளால் அரிதான எட்டுவித சித்திகளையும் எனக்கு வழங்கி எனது பிறப்பை அறுத்து அருளினான்.

கருத்து: சிவபெருமானின் திருவடியை சரணடைந்தால் எட்டுவித சித்திகளும் பெற்று பிறவி இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #642

பாடல் #642: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

விளக்கம்:

குருவின் அருளினால் அவர் காட்டிய வழியிலேயே மூலாதார அக்கினியை ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு தனக்குள்ளேயே அலையும் எண்ணங்களையும் (கேசரி யோகம்) வெளியே அலையும் எண்ணங்களையும் (சாம்பவி யோகம்) கடினத்துடன் ஒன்றாகச் சேர்த்து ஒருமுகப்படுத்தி வைத்தால் சிவகதிப் பேறான எட்டுவித சித்திகளில் எட்டாவது சித்தியான வசித்துவம் (அனைத்தையும் வசியப்படுத்துதல்) கைவரப் பெறும்.

கருத்து: குரு அருளிய வழியில் மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால் எட்டாவது சித்தியான அனைத்தையும் வசியப்படுத்தும் நிலையை அடையலாம்.

பாடல் #643

பாடல் #643: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

விளக்கம்:

ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களிலும் அறுபத்து நான்கு கலைகள், மூன்று காலங்கள் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) மாயை ஆகிய தத்துவங்களிலும் சேராமல் விலகி ஒன்றுபட்டு இருக்கும் அறிவை ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இருக்கும் தொடர்பை உண்மையென அறிந்து அதிலேயே கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.

கருத்து: நிலையில்லாத உலகை விட்டு நிலையான இறைவனோடு கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.

பாடல் #644

பாடல் #644: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிரு நான்காய் அட்டமா சித்திக்கே.

விளக்கம்:

விருப்பத்தோடு மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் செயல்கள் கர்ம யோகமாகும். அது இருபதாயிரத்து எண்ணூறு பிரிவுகளைக் கொண்டது. கர்ம யோகம் உடம்பினால் செய்யப்படும் அருமையான உழைப்பினால் நிறைவு பெறும். அவ்வாறு நிறைவு பெறுவதால் பெறக்கூடிய சித்திகள் எட்டுவித சித்திகளாகும்.

கருத்து: கர்ம யோகத்தை மனதை ஒருமுகப்படுத்தி உடல் உழைப்பால் செய்து முடித்தவர்களுக்கு எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

பாடல் #645

பாடல் #645: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

விளக்கம்:

சந்திர நாடியாகிய இடைகலையில் (இடது நாசி) பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் மூச்சுக்காற்றில் சூரிய நாடியாகிய பிங்கலை (வலது நாசி) வழியாக நாலங்குல அளவு மூச்சுக்காற்று வெளியே போக மீதியுள்ள எட்டங்குல அளவு மூச்சுக்காற்று உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியாக அட்டமா சித்திகளை அடையலாம்.

கருத்து: பன்னிரண்டு ஆண்டுகள் முறைப்படி பிராணாயாமம் செய்து வந்தால் எட்டுவித சித்திகளையும் உறுதியாக அடையலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

27-12-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆசைகளையும் பாசத்தையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லையே அது ஏன்?

ஆசைகளை முழுமையாக ஒழிப்பது மிகவும் கடினம். ஆசைகளை அடக்கினாலும் மீண்டும் சில நேரங்களில் அந்த ஆசைகள் திரும்ப வரும். இதற்கு உதாரணமாக ஊசி என்பது மனம் போலவும் நூலானது ஆசைகள் போலவும் எடுத்துக்கொண்டால் ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டு நூலின் இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டால் ஊசியானது இரண்டு பக்கமும் அலைந்து கொண்டிருக்கும். ஆனால் ஊசியிலிருந்து நூலை எடுத்து விட்டால் ஊசியானது அலையாமல் தனியாக நிற்கும். ஆகவே ஆசைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது மிகக் கடினம் என்பதை அறிய வேண்டும். இதற்கு என்ன வழி என்று சிந்தித்தால் ஊசியிலிருந்து நூலைத் தூக்கி எறிவதே சரியான வழி. அதாவது ஆசைகளை நீக்கும் முன்பு அந்த ஆசைகளை உண்டாக்கும் காரணங்களை நீக்க வேண்டும். உதாரணமாக லகரி வஸ்துக்களை (சிகரெட் பாக்கு சாராயம் முதலிய போதைப் பொருட்கள்) உபயோகிப்பவர்கள் அதை எப்போதும் தன்னோடு வைத்திருக்கக் கூடாது. எப்பொழுதும் அவற்றைத் தன்னுடனே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மனதில் இருந்து நீக்க வேண்டும். அத்தகைய லகரி வஸ்துக்களை உபயோகிக்கும் நபர்களுடன் சேரக்கூடாது என்பதை ஒரு விதியாக எடுத்துக் கொண்டால் முழுமையாக அந்த ஆசைகளில் இருந்து விடுபடலாம். சிறுது கடினம் என்கின்ற போதிலும் ஒவ்வொரு ஆசையாக இவ்வாறு நீக்கிவிட முடியும்.