பாடல் #521

பாடல் #521: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

விளக்கம்:

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அதோமுகம் பூமி அனைத்துக் கோள்கள் பல நட்சத்திரங்கள் உள்ளடக்கிய விண்வெளிப் பிரதேசங்கள் கொண்ட அண்டங்கள் அனைத்தையும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. அதனால்தான் அவருடைய அதோமுகத்திற்கு அடியில் இருக்கும் கழுத்து அண்டவெளியைப் போல கண்டங் கருமையாய் உள்ளது என்கிற உண்மையை யாரும் அறிந்துகொள்ளாமல் சிவபெருமான் நஞ்சை உண்டதால்தான் (அமுதம் எடுக்கப் பாற்கடலை வாசுகி பாம்பினால் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம்) அவருடைய கழுத்து கருமையாய் இருக்கிறது என்று கூறுவார்கள் அவரை உணராதவர்கள். இதுபோலவே இறந்தவர்களின் ஆன்மாக்களைத் தாங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் வெள்ளை நிறத்திலான மண்டையோடுகளை மாலையாக அணிந்து விரிந்த சடையைக் கொண்டிருக்கும் சிவபெருமானின் தன்மையை யாரும் அறியவில்லை.

அதோமுகம்: சிவபெருமானின் அதோமுகம் என்பது சூட்சும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை உடையது. தீயவர்களை அழிக்க முற்படும்போது தோன்றுவது அதோமுகம். அதோமுகத்தைக் கொண்ட சிவபெருமான் அழித்தலின் தலைவன் ஆவார். அவர் சூரபதுமன் என்ற அசுரனை அழிக்கத் தன் அதோமுகத்தை வெளிப்படுத்திய போது சக்தி தேவியே அதைக் கண்டு பயந்து மறைந்து கொண்டாள். இந்த அதோமுகத்தை உலக அழிவின் போதும் முருகப்பெருமானைப் படைத்த போதும் உக்கிரமாக வெளிப்படுத்திய சிவன்பெருமான் தன்னை வணங்கும் யோகிகளுக்கும் முனிவர்களுக்கும் அருள் கொடுக்கும் போது மட்டும் சாந்தமாக வெளிப்படுத்துவதே அதோமுக தரிசனம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.