மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7

12-9-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வழியில் ஆண்டவனை அடைய முயற்சித்தல் வேண்டும்? யோக நிலையா, பக்தி நிலையா, இல்லையேல் ஞான நிலையா என்பதே கேள்விகள் ஆகின்றது.

எவர் எவர்க்கு எம் மார்க்கம் எளிதாக தோன்றுகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக, ஓர் கட்டிடம் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் காணக்கூடும். எவ்வழியில் செல்கின்ற போதிலும் உள்ளே செல்ல முடியும். இருப்பினும், நமக்கு எளிதாக, தொல்லை தராத வழியை நாடிப் பயன் படுத்துவதே நல்ல முறையாகின்றது. அனைவருக்கும் யோக நிலைகள் நலம் தருவதாகக் காணாது. ஏனெனில், உடல்கூறு மனநிலை என்பதெல்லாம் தடையாகக் காணலாம்.

பக்தி மார்க்கத்தில், மந்திரங்கள் ஜெபித்து எளிதாக சிலரால் இறைவனை அடைய இயலுகின்றது. இவ்விதமே, இசையும் ஓர் பக்தியின் வழியாகவே யாம் காண்கின்றோம். இறைவனை நன்று துதித்துப் பாடினால் அவன் வராது இருக்க மாட்டான், என்பதே எமது கருத்தாகின்றது. இக்கலியுக தன்மையில், பெரும் யோகங்கள், யோக பயிற்சிகள், தவநிலைகள், என்பதெல்லாம் எளிதில் கடை பிடிக்க இயலாது என்கின்றதால், இக்காலத்திற்கு எளியவழி பக்தி மார்க்கமும், நாம கீர்த்தனமும் என்பதேயாகும் என்று இங்கு எடுத்துரைக்கின்றோம். இருப்பினும், திடமும் நம்பிக்கையும் உயர்ந்திருந்தால், யோக நிலையை கை கொள்வதில் தவறாகாது. எளிதான முறையைச் செப்பிவிட்டோம். இவைகளில் தேர்ச்சி செய்வீர்களாக.

ஞானமார்க்கம் என செப்பிக்கொண்டால், பல குழப்பங்கள் நேரிடல் காணக்கூடும். ஏனெனில், பலர் பலவிதத்தில் உபதேசிப்பர். எது சரி, எது தவறு, என்பதனை தேடிக் கண்டு பயன் அடைவதற்குமுன் இஜ் ஜென்மமும் மூடிவிடும் என்பதே நிலை. இந்நிலையில், யோகம் இல்லையேல் பக்தி மார்க்கங்களில் செல்வதே நலம்தரும் என்றும் செப்பினோமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.