பாடல் #1034: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
விளக்கம்:
உயிர்களின் ஆன்மா தனக்கு உகந்த இருப்பிடமாக எடுத்த அழியக்கூடிய இந்த உடலில் நவகுண்ட யாகம் செய்து குண்டலினியை எழுப்பி பாடல் #1033 இல் உள்ளபடி சகஸ்ரதளத்தில் சேர்த்த ஜோதியாக இருக்கிறது. அங்கே ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவமூர்த்தியாகிய இறைவனை அறிய எண்ணினால் அவர் இருபத்தைந்து தத்துவங்கள் கொண்ட ஜோதியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். அந்த பரஞ்சுடராகிய இறை சக்தியோடு இந்த ஆன்ம ஜோதியை கலந்தால் கிடைக்கும் பேரின்பமே முக்தியாகும்.
