பாடல் #1038

பாடல் #1038: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே.

விளக்கம்:

பாடல் #1037 இல் உள்ளபடி சதாசிவமூர்த்தியுடன் கலந்து நிற்கின்ற சாதகரின் உடலாகிய நவகுண்டத்திலுள்ள அக்கினியின் அடியாக இருப்பது இறைவனின் பாதங்களாக இருக்கின்றது. சுடராகப் பரவும் அக்கினியாக இருப்பது இறைவனின் கரங்களாக இருக்கின்றது. குண்டத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற அக்கினியின் ஜூவாலையே இறைவனின் சிவந்த முகமாகவும் மூக்காகவும் இருக்கின்றது. அக்கினியின் கங்கானது இறைவனின் மூன்றாம் கண்ணாக இருக்கின்றது. காற்றின் போக்கில் அலையும் அக்கினியின் உச்சி நுனியாக இருப்பது இறைவனின் சடைபின்னிய முடிக்கற்றைகளாக இருக்கின்றது. இப்படி நவகுண்டத்தின் அக்கினியில் இறைவன் உத்தமமான உருவமாக இருக்கிறார்.

குறிப்பு: நவகுண்ட யாகம் செய்து உணர்ந்த இறைவன் அக்கினி உருவமாக எப்படி இருக்கின்றார் என்பதை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.