பாடல் #82: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
விளக்கம்:
பேரறிவு ஞானத்தின் தலைவனாகிய எம் குருவாகிய இறைவன் இருக்கும் இடத்தில் ஒரு குறையும் இல்லாமல் ஒன்பது கோடி யுகங்களாக, ஞானத்தால் உருவாகும் அமிர்தப் பால் ஊற்றி இறைவனை அர்ச்சனை செய்து இறைவனின் நல்திருவடியின் கீழ் இருந்தேன்.
நற்போதியின் கீழே
என்பதற்கு “திருவாவடுதுறை திருத்தலத்தில் உள்ள போதிமரமாகிய அரச மரத்தின் கீழே இருந்தேன்” என்பது பொருள்.
ஐயா வணக்கம் தாங்கள் குறிப்படிட்ட பாடல் எண்:82 திருமூலர் வரலாறு தலைப்பின் கீழ் வருகிறது. இந்த தலைப்பில் திருமூலர் தன்னுடைய வரலாற்றை ஒன்றுக்குபின் ஒன்றாக அழகாக கதை சொல்வது போல் சொல்கிறார். பாடல் எண்: 83 இன் கருத்தையும் தாங்கள் பார்க்க வேண்டும். இந்த பாடலில் தான் மேலுலகத்தில் இருந்து பூலோகத்திற்கு எப்படி வந்தேன் என்று சொல்கிறார். கீழ் உலகத்திற்கு வருவதற்க்கு முன்பாக திருவாவடுதுறை வந்திருக்க இயலாது என்பதை நாம் சிந்தித்து பார்த்தால் 82 பாடலில் உள்ள கருத்து சரியானது என்பதும் தங்களின் கருத்து முரண்பாடானது என்பதும் தெரிந்து கொள்ளலாம். நன்றி