பாடல் #740

பாடல் #740: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.

விளக்கம்:

பூமியை நிலா சுற்றி வருகின்ற ஒரு நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்திலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பெற்று பெளர்ணமியாகும் விதமும் பின்பு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் இழந்து பின்பு அமாவாசையாகும் விதமும் சந்திரன் சூரியனின் வட்டத்தில் இருக்கும் பன்னிரண்டு இராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் அமர்ந்து பின் அடுத்த ராசிக்கு மாறுகின்ற விதமும் இவை அனைத்தும் இறைவனின் திருவருளாலே உயிர்களின் கர்ம வினைகளுக்கேற்ப காத்து அருளுகின்ற விதமும் உடலை விட்டு உயிர் பிரியும்போது அதனை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற விதமும் ஆராய்ந்து அருளுகின்றேன்.

கருத்து: சந்திரன் பூமியைச் சுற்றும்போது சூரியவட்டத்தில் வரும் பன்னிரண்டு இராசிகளிலும் 30 நாட்களில் அமர்ந்து மாறும்போது இறையருளால் உயிர்களைக் காக்கின்ற தன்மையையும் பின்பு உயிர் உடலை விட்டுப் பிரியும் விதமும் ஆராய்ந்து இந்தத் தலைப்பிலுள்ள பாடல்கள் அருளப்பட்டுள்ளன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.