பாடல் #755

பாடல் #755: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்ந்துவிடு மொன்றே.

விளக்கம்:

பாடல் #754 ல் உள்ளபடி தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனைத் தரிசித்து தமக்குள் இறைத்தன்மைகள் பலவற்றை கண்டவர்கள் சாஸ்திரங்கள் கூறும் தர்மங்களையே தலையானதாகக் கொண்டு அவற்றை விட்டு சிறிதும் விலகாமல் கடைபிடித்து நிற்பவர்கள். தர்மம் தவறாமல் நின்று தமக்குள்ளேயே இறைவனின் திருவடியையும் திருநடனத்தையும் தரிசித்துக்கொண்டு அவனருளால் பெற்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தாமே சிவமாகி அவனைப் போலவே எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

கருத்து: இறைவனை தமக்குள்ளே தரிசித்து தர்மத்தை கடைபிடித்து அதன் படி நடப்பவர்கள் பேரின்பத்தில் திளைத்து தாமே சிவமாகி எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.