பாடல் #1584

பாடல் #1584: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மை
யருளா தருளு மயக்கறு வாய்மை
பொருளாய வேதாந்த போதமு நாத
னுருவருளா விடிலோர வொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருவாகிச சிததியு முததியுஞ சீரமை
யருளா தருளு மயககறு வாயமை
பொருளாய வெதாநத பொதமு நாத
னுருவருளா விடிலொர வொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு ஆகி சித்தியும் முத்தியும் சீர்மை
அருளாது அருளும் மயக்கம் அறு வாய்மை
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உரு அருளா விடில் ஒர ஒண்ணாதே.

பதப்பொருள்:

திரு (அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக) ஆகி (வீற்றிருந்து) சித்தியும் (அனைத்து சித்திகளையும் கொடுப்பதும்) முத்தியும் (முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும்) சீர்மை (உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும்)
அருளாது (வெளிப்புறத்திலிருந்த அருளாமல்) அருளும் (குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி) மயக்கம் (மாயையாகிய மயக்கத்தை) அறு (அறுப்பதும்) வாய்மை (உண்மை)
பொருள் (பொருளாக) ஆய (இருக்கின்ற) வேத (வேதத்தின்) அந்த (எல்லையாகிய) போதமும் (ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும்) நாதன் (இறைவனே)
உரு (சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து) அருளா (அருளாமல்) விடில் (போனால்) ஒர (அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து) ஒண்ணாதே (அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது).

விளக்கம்:

அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக வீற்றிருந்து அனைத்து சித்திகளையும் கொடுப்பதும் முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும் உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும் வெளிப்புறத்திலிருந்த அருளாமல் குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி மாயையாகிய மயக்கத்தை அறுப்பதும் உண்மை பொருளாகிய வேதத்தின் எல்லையாகிய ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும் இறைவனே சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து அருளாமல் போனால், அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது.

4 thoughts on “பாடல் #1584

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் தாங்கள் கேட்ட 1557 க்கு முன்பாக உள்ள பாடல்கள் அனைத்தும் வலைதளத்தில் உள்ளது. நன்றி

Leave a Reply to Saravanan ThirumoolarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.