பாடல் #1027: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
மாட்டிய குண்டத்தி னுள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே.
விளக்கம்:
நவகுண்டத்தினுள் எழும் அக்னியுடன் ஓதுகின்ற மந்திரங்களும் ஒன்றாக சேர்ந்து எழும்புகின்றது. அவ்வாறு எழும்புகின்ற அக்னி அடியும் முடியுமாக (நெருப்புச் சுடரின் அடிப்பாகமும் உச்சியும்) இரண்டாக குண்டத்தினுள்ளே அலைகின்றது. அவ்வாறு அலைகின்ற அக்னி ஒரு கையாகவும் காற்று ஒரு கையாகவும் ஆகிய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேர்ந்து விரைவாக எரிகின்றது. அப்படி விரைந்து எரியும் அக்னியில் நல்ல ஒளியாய் தேவர்கள் வந்து நின்று நல்லாசிகள் வழங்குவார்கள்.
