பாடல் #881

பாடல் #881: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழிக்கத் தற்சுட ரைந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.

விளக்கம்:

உடலில் புருவ மத்திக்குக் கீழே இருக்கும் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்நாக்கில் பொழியும் அமிர்தத்தோடு புருவ மத்திக்கு மேலே இருக்கின்ற அறிவு, ஆற்றல், ஓசை, ஒளி, உயிர் ஆகிய ஐந்து சுடர்களையும் ஒன்று படுத்தி அதனுடன் மூலாதாரத்திலிருந்து எழுப்பிய குண்டலினி சக்தியை நடு நாடியாகிய சுழுமுனையின் வழியே மேலேற்றிக் கொண்டு வந்து ஒன்றாகக் கலந்து அதிலேயே எண்ணங்களை வைத்து தியானத்தில் இருக்கக் கூடிய யோகியர்களுக்கு என்றும் இறப்பு இல்லை. அவர்களுக்கு ஆயுளின் மூச்சுக்காற்று அளவுகளும் நாள் கணக்குகளும் இல்லை.

பாடல் #882

பாடல் #882: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

விளக்கம்:

சந்திர யோகம் புரியும் யோகியர்களே உங்களின் குண்டலினியை எழுப்பி சகஸ்ரதளத்தில் சேர்ப்பதன் மூலம் புருவ மத்தியில் இருக்கும் அமிர்தம் விளையும் ஊற்றைத் திறந்து எப்போதும் வற்றாத அமிர்தத்தைப் பருகுங்கள். அதன் பிறகு இறைவனின் ஈடுஇணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு வேறு எதன் மீதும் எண்ணங்களை செலுத்தாமல் வெளிப்புற உலகத்தின் எதுவும் பாதிக்காத சமாதி நிலையில் அமர்ந்து ஞானக்கண் வழியே அனைத்தையும் கண்டு மூச்சுக்காற்றை வெளியிலிருந்து எடுத்துக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே இயக்கத்தை மாற்றி எப்போதும் திகட்டாத பேரானந்தத்தில் திளைத்து இருங்கள்.

பாடல் #883

பாடல் #883: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

மாறு மதியும் மதித்திரு மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.

விளக்கம்:

இடநாடி வழியாகவும் வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பான மூச்சுக்காற்றிலிருந்து மாறுகின்ற சந்திர கலையும் சூரிய கலையும் யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும் தடை படாமலும் குறைவின்றி சீராக நடுநாடியான சுழுமுனையின் வழியே சென்று தலை உச்சியைத் தாண்டியுள்ள சந்திர மண்டலத்தை அடைந்தால் எதனாலும் பாதிக்கப்படாத அழியாத உடலை அடையும் வழியும் எப்போதும் திகட்டாமல் அளவின்றி பெருகும் பேரின்பமும் இந்த உலகத்திலேயே கிடைக்கும்.