பாடல் #871

பாடல் #871: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீர்
நீங்குதல் கொடானே நெடுந்தகை யானே.

விளக்கம்:

சந்திர யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினியாகிய பாம்பை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் அது நித்தமும் சந்திர கலையை உண்டு அதுவும் பத்தாதென்று சூடாகிய தீங்கைக் கொடுக்கும் சூரிய கலையையும் உண்டு வளரும். குண்டலினிக்கு இரையாக கலைகள் இருப்பதால் இரண்டும் பகையாளிகள் போல இருந்தாலும் சந்திர யோகப் பயிற்சியினால் குண்டலினியை ஒவ்வொரு மண்டலமாக மேலேற்றிச் சென்று கடைசியில் ஒன்பதாவதான பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு ஒன்று சேர்த்துவிட்டால் குண்டலினியும் கலைகளும் தமது பகையைத் தீர்த்து ஒன்றாகிவிடும். அதன் பிறகு மாபெரும் கருணையாளனான இறைவன் யோகியை விட்டு என்றும் நீங்காமல் இருப்பான்.

உட்கருத்து: சந்திர யோகப் பயிற்சியில் மூச்சுக்காற்றின் மூலமே குண்டலினியை வளர்த்து ஏழு சக்கரங்கள் எட்டாவது துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவது பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு கலந்துவிட்டால் அதன் பிறகு யோகியர்களுக்கு மூச்சுக்காற்றோ உணவோ தேவையின்றி எவ்வளவு காலமும் இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.