பாடல் #1690

பாடல் #1690: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

தொழு தறிவாளர் சுருதி கண்ணாகப்
பழு தறியாத பரம குருவை
வழி யறிவார் நல்வழி யறிவாள
ரழி வறிவார் மற்றையல்லா தவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தொழு தறிவாளர சுருதி கணணாகப
பழு தறியாத பரம குருவை
வழி யறிவார நலவழி யறிவாள
ரழி வறிவார மறறையலலா தவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தொழுது அறிவாளர் சுருதி கண் ஆக
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாத அவரே.

பதப்பொருள்:

தொழுது (இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை) அறிவாளர் (அறிந்தவர்கள்) சுருதி (இறைவனை அடைவதை மட்டுமே) கண் (குறிக்கோள்) ஆக (ஆகக் கொண்டு இருக்கும் போது இறையருள்)
பழுது (ஒரு குற்றமும்) அறியாத (அறியாத புனிதமான) பரம (இறை நிலையை அடைந்த) குருவை (குருவை அவருக்கு காட்டி அருளும் போது)
வழி (அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை) அறிவார் (அறிந்து கொண்டவர்களே) நல் (நல்ல) வழி (வழியை) அறிவாளர் (அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள்)
அழிவு (மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே) அறிவார் (அறிவார்கள்) மற்றை (மற்ற உலக வழிகளாகிய) அல்லாத (நல்லது இல்லாத வழியை மட்டுமே) அவரே (அறிந்தவர்கள்).

விளக்கம்:

இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள் இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் போது, இறையருள் ஒரு குற்றமும் அறியாத புனிதமான இறை நிலையை அடைந்த குருவை அவருக்கு காட்டி அருளும். அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை அறிந்து கொண்டவர்களே நல்ல வழியை அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள். நல்லது இல்லாத மற்ற ஆசைகளின் வழியே போகின்றதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே அறிந்தவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.