பாடல் #1692

பாடல் #1692: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
யிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பதைககினற பொதெ பரமெனனும விததை
விதைககினற விததினை மெனினறு நொககிச
சிதைககினற சிநதையைச செவவெ நிறுததி
யிசைககினற வனபருக கீயலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.

பதப்பொருள்:

பதைக்கின்ற (இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற) போதே (போதே) பரம் (பரம்பொருள்) என்னும் (என்று அறியப்படும்) வித்தை (அனைத்திற்கும் மூல விதையான இறைவன்)
விதைக்கின்ற (அடியவருக்குள் விதைக்கின்ற) வித்தினை (மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால்) மேல் (தலை உச்சிக்கு மேல்) நின்று (மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று) நோக்கி (அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து)
சிதைக்கின்ற (இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற) சிந்தையை (சிந்தனைகளை) செவ்வே (சீர்படுத்தி) நிறுத்தி (அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி)
இசைக்கின்ற (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற) அன்பருக்கு (பக்குவமுள்ள அன்பர்களுக்கு) ஈயலும் (இறைவன் தமது அருளை கொடுத்து) ஆமே (அருளுவான்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே பரம்பொருள் என்று அறியப்படும் அனைத்திற்கும் மூல விதையான இறைவன் அடியவருக்குள் விதைக்கின்ற மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால் தலை உச்சிக்கு மேல் மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற சிந்தனைகளை சீர்படுத்தி அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பக்குவமுள்ள அன்பர்களுக்கு இறைவன் தமது அருளை கொடுத்து அருளுவான்.

One thought on “பாடல் #1692

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.